இடுகைகள்

ஜனவரி, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வீழ்வேனென்று நினைத்தாயோ?

வீழ்வேனென்று நினைத்தாயோ? வீழ்வேனென்று நினைத்தாயோ  வீணனே விலகிடுவாய் வாழ்வதற்கே பிறந்தவர்கள்  வலிதாங்கத் தயங்குவரோ? சூழ்நிலை உதவியதால்  சொர்க்கமே  உனதென்று ஆழ்மனதில் நினையாதே  அந்நிலையை மாற்றிடுவேன். போராடத் துணிந்தவர்க்குப்  புறச்சூழல் தடையாமோ? நீரோடும் திசையேக  நிலையிழந்து போனோமோ? எக்கணமும் நாட்டுக்காய்  இனியவெந் தாய்மொழிக்காய் துக்கமின்றி உயிரளிக்கத்  துடிக்கின்ற நெஞ்சமிது. நல்லவற்றை ஏற்றுகையில்  நான்சரிந்தால் சிரிப்பாயோ.. வல்லவனாய் எழுந்திடுவேன்  வரலாறு படைத்திடுவேன். கந்தவனம் கோணேஸ்வரன் 18.01.2020

குறளோடு கவிபாடு 12

திவ்விய கவிச்சோலை. திங்கள் கவிதை. குறளோடு கவிபாடு 12 அவையை நோக்கி அதன்நிலை யறிந்து சுவைபட வுரைத்தல் சிறப்புடை நிலையே. பொருத்தம் பார்த்துப் பகரார் வாழ்வில் வருத்தம் சேர்தல் வாய்த்திடு மாமே. இடமும் பொருளும் இசைவும் அறிந்தால் தடமது புரளும் நிலையும் இலையே. வழுவில் வார்த்தை வழங்கிடு வோர்பின் பழுதற உலகம் பணிந்து வருமே. சொல்லின் பெருமை சொல்பவர் உணரின் அல்லல் ஏது? அனைத்தும் நலமே. கந்தவனம் கோணேஸ்வரன். 28.01.2010

குறளோடு கவிபாடு.

 குறள்வெண் செந்துறை. (திங்கள் கவிதை) குறளோடு கவிபாடு. (சிறப்புச் சான்றிதழ் பெற்றது) பிறரை வருத்திப் பெறுவது யாதோ உறவை வளர்த்தல் உறுதுணை யாமே. நல்லன செய்யின் நலமே விளையும் அல்லன ஆற்றின் அறங்கூற் றாமே. உயிர்த்துணை யாதல் இரங்குதல் என்பன மயிர்த்துணை யேனும் மாணப் பெரிதே. வரன்முறை மீறா வாழ்க்கை யமைத்து அரன்நெறி காத்தல் அனைத்துயிர் கடனே இறையை நினைத்து இனிதே வாழ்ந்தால் கறையே இல்லாக் களிப்பு வருமே. கந்தவனம் கோணேஸ்வரன் 20.01.2020

அறுசீர் விருத்தம்.

அறுசீர் விருத்தம். நெஞ்சை அள்ளிக் கொண்டாய்   நேசம் காட்டி நின்றாய் வஞ்சம் இல்லா வாழ்வை   வண்ணம் பொங்கத் தந்தாய் கொஞ்சும் இல்லாள் உந்தன்   கோலப் பாதந் தன்னில் தஞ்சம் என்று ஆனேன்   தாய்முன் சேயாய் நின்றேன். கந்தவனம் கோணேஸ்வரன்.  19.12.2019

ஆசைக்குணம்.

ஆசைக்குணம். கோபப்படும் வேளையில்நீ கொவ்வைப்பழம் - மனதால் கொஞ்சுகின்ற போதினிலே கொய்யாப்பழம் பாசம் நெஞ்சில் வைக்குமினம் பெண்ணினம் - வைத்தால் பாடைவரை கூடவரும் பொன்மனம். தாவுகின்ற விழியிரண்டும் நாவற்பழம் - நாவோ தட்டைச்சளை யாகவந்த பலாப்பழம் கோவையிதழ் குவிந்தால்துண்டு வாழைப்பழம் - உன்னைக் கொண்டணைத்தால் மகிழுமிந்த ஏழையுளம். கனிகள்நிறைந்த சோலைதானுன் தேகவனம்  - எந்தன் கண்களிலே சூடுகின்ற மோகவனம் இனியபழம் அத்தனையும் உந்தன்வசம் - அதற்காய் ஏங்குகின்ற பேதைமனம் எந்தன்வசம். ஆசையென்றும் சூழல்பார்த்து வருவதில்லை – அதை அணைக்கநினைத்த போதுமது அழிவதில்லை தேசமெங்கும் ஓர்குணந்தான் ஆசைக்குண்டு – தன் தேவைதனைக் கேட்டுநிற்கும் துணிவுகொண்டு. கந்தவனம் கோணேஸ்வரன் (தினமுரசு பத்திரிகையில் வெளிவந்த கவிதை. ஆண்டு நினைவிலில்லை)

என்ராகம் நீதானடி .

நிலாமுற்றம் காதல்கவிதைப் போட்டி (வெற்றிச் சான்றிதழ் பெற்றது) என்ராகம் நீதானடி . கூந்தல் மேகமெனில் குளிர்வதனம் சந்திரனோ  கொல்ல வல்ல இருவிழிகள் கூர்வேலோ நீந்தும் பார்வைதனில் நிறைகின்ற காட்சியெலாம்  நிலையாது நின்றினிக்கும் வான வில்லோ ஏந்தும் அழகென்ன எழிற்பூவின் மென்மையதோ  என்மனதை மயக்க வந்த மன்மதமோ காந்தள் மலர்விரலோ கற்பகமோ கனிரசமோ  கன்னல் தமிழ்போலக் களிக்கின்ற இன்பமதோ காலை எழுந்திருப்பாய் கண்விழிப்பில் முகமலர்வாய்  கனிந்த விதழ்ச் சிரிப்பாலே மகிழ்விப்பாய் சோலை நடந்தாற்போல் சுற்றியெனை வலம்வருவாய்  சொர்க்கத்தில் எனை யிருத்திப் பார்த்திருப்பாய் ஆலைக் கரும்பாகி உன்னன்பில் நான்கரைவேன்  அன்னை போல் அரவணைப்பாய்: சேயாவேன் கோலமயி லுன்றன்முன் என்கொற்றம் கவிழ்ந்தாலும்  குலவிளக்கே என்ராகம் எப்போதும் நீதானே. கண்மூடிப் படுத்திருந்தால் கனவெல்லாம் நீதான்  கண்விழித்துப் பார்த்தாலும் காட்சியெலாம் நீதான் விண்மூடிக் கருமேகம் கவிகின்ற வேளையிலும்  விளைகின்ற மின்னல்தரு வெளிச்சமதும் நீதான் கண்ணோடும் கருத்தோடும் கலந்தென்னை வாழவைக்கும் ...

சட்டத்தினால் யாது பயன்?

வெள்ளிச்சாரல் அமுதமழைக் கவிக்களஞ்சியம் சட்டத்தினால் யாது பயன்? நீதியென்றால் என்னவென்பர்  எங்கள் ஊரிலே மோதிப்பார்த்து வெல்பவர்தான்  தங்கத் தேரிலே மடிச்சுக்கட்டும் வேட்டிதானே  நீதியைச் சொல்லும் துடித்துவீழ்ந்த மனிதர்நியாயம்  தனிவழி செல்லும் மணலையள்ளி விற்பவன்தான்  சட்டம் செய்கிறான் அணைந்துபோக மறுப்பவனை  அடித்துக் கொல்கிறான் நீதிகூடப் பணம்படைத்தோர்  பக்கமே நிற்கும் ஏதிலியாய்க் கைபிசைவோர்  வழக்குகள் தோற்கும் ஆட்சியினர் என்றவார்த்தை  அருவருப் பாச்சு மீட்சியில்லா வாழ்வுதானே  மக்கள்சொத் தாச்சு சட்டம்படித்த ஐயாமாரே  நிமிர்ந்து பாருங்கள் சட்டத்தினால் என்னபயன்  என்று  கூறுங்கள். கந்தவனம் கோணேஸ்வரன் 03.01.2020

என்றும் எங்கும் தமிழ்.

அமுதமழைக் கவிக்களஞ்சியம். செந்தமிழ்ச் செவ்வாய்.  என்றும் எங்கும் தமிழ்.  (சான்றிதழ் பெற்றது) என்றும் எங்கும் தமிழே யானால் இதயம் நிறைந்த மகிழ்ச்சி பிறக்கும் குன்றின் மேலொரு தீபம் போலக் குவலயம் முழுதும் தமிழே சிறக்கும். வையம் தந்த மூத்த மொழியாள் வயதே யாகினும் இளமை எழிலாள் செய்ய திருப்போல் வளமும் உடையாள் சின்னக் குழந்தை போலெழில் நடையாள். அறிவியல் கணினி அகம்புறம் பக்தி அனைத்துத் துறையிலும் வலிய லானாள் நெறியாய்த் தமிழைப் போற்றி யாமும் நிலமிசை வாழ்ந்து நிறைபுகழ் பெறுவோம். கந்தவனம் கோணேஸ்வரன் 01.01.2020

கவிதைக்குத் தேவை எளிமையே. .

கவிதைக்குத் தேவை எளிமையே. (வெற்றிச் சான்றிதழ் பெற்றது) தமிழ் வணக்கம். என்னை ஆளாக்கி இவ்வரங்கில் வைத்தவென்றன் அன்னைத் தமிழுக்கு அகம்நிறைந்த என்வணக்கம். தலைமை வணக்கம். இனிய கவியரங்கை இயற்றிச் சிறப்பிக்கும் புனிதத் தலைமைக்குப் புரிந்தேன்நான் நல்வணக்கம். அவைவணக்கம். என்கவியும் ஒருகவியாய் இவ்வரங்கில் அமைவதற்கு நன்மனத்த ராயிருக்கும் அவையோர்க்கும் என்வணக்கம். துணைத்தலைப்பு. கவிதை சிறக்கச்சொல் பொருளோ டிலக்கணமும் அவசியமே யாயினும் எளிமையின்றேல் கவிதையேது? எளிமையே சிறப்புஎனும் என்கருத்தைச் சொல்கின்றேன் விழிப்புடனே கேளுங்கள்: வேண்டும்வகை முடிவெடுங்கள். என்னதான் சொல்நயமும் பொருள்நிறைவும் இருந்தாலும் எளிமையொன் றில்லையெனின் கவிதைதனை யார்புரிவார்? சின்னச்சொல் எளிமையுடன் கவிதைகளைப் படைத்ததாற்றான் சுப்பிர மணியம்என்பான் பாரதியாய் உயர்ந்துநின்றான். வண்ண இசைக்கேற்ப வார்த்தைகளை விளங்கும்படி எண்ணம்போல் தெளித்ததனால் கண்ணதாசன் அரசுஆனான் இன்னும்நான் சொல்லப்புகின் நாமக்கல் லான்படைத்த “கத்தியின்றி ரத்தமின்றி..” கவிதைக்கு ஈடுமுண்டோ? சின்னச் சொல்லெடுங்கள் சறப்பாகக் கவிதொடுங...

நேர்கொண்ட பார்வை.

நேர்கொண்ட பார்வை. (வைரநிலாச் சான்றிதழ் பெற்றது) நேர்கொண்ட பார்வையும் நிமிர்நன் னடையும் கூர்கொண்ட மீசையும் குங்குமத் திலகமும் சீர்கொண்ட தலைப்பா சிந்திடும் அழகும் யார்க்கிங் குளவோ பாரதி போலே? உதிர்க்கும் வார்த்தை ஒவ்வொன்றும் அமுதம் பதிக்கும் பாக்களில் போர்க்குணம் அதிகம் புதிதாய்த் தமிழை ஆக்கிக் கவிதையைப் பொதுவில் வைத்திட்ட புரட்சியின் சிகரம். பண்டிதத் தமிழை விடுத்துப் புதுநெறி கண்டதைப் பாக்களில் கவினுற வைத்தவன் மண்டியிடா தொரு போர்க்குணம் கொண்டவன் எண்டிசை யதிர விடுதலைக் குழைத்தவன். பெண்கள் அடிமைப் படுதலைத் தடுத்தவன் கண்களிற் பேதம் யாதெனக் கேட்டவன் திங்களும் பரிதியும் பொதுவெனச் சொன்னவன் பொங்கியே சாதிப் பேய்தனை எதிர்த்தவன். கந்தவனம் கோணேஸ்வரன். 12.12.2019

மனிதம் வளர்ப்போம்.

இணைக்குறள் ஆசிரியப்பா  (நிலாமுற்றம் கவிதை.) (வெற்றிச் சான்றிதழ் பெற்றது. நடுவர் : இராம வேல்முருகள் வலங்கைமான்) மனிதம் வளர்ப்போம். எல்லா உயிரும் எமதுறவே யெனும் எண்ணம் கொள்வோம் அல்லன தவிர்ப்போம் நில்லா உலகில் நிலையாய் நிற்கும் மனிதம் வளர்ப்போமே. புல்லும் பூண்டும் கல்லும் உயிரெனப் படித்தவர் நாமன்றோ உள்ளம் குமைந்து உயிரிகள் வாடா வண்ணம் உயர்வாய் மனிதம் வளர்ப்போம். கந்தவனம் கோணேஸ்வரன். 12.12.2020

இறையடியே சரணடைவோம்

அமுதமழைக் கவிக்களஞ்சியம் குறள்வெண் செந்துறை. இறையடியே சரணடைவோம். (வெற்றிச் சான்றிதழ் பெற்றது) இறையடி சரணம் இனிதே அடைய முறையாய் வாழ்வில் முனைவோம் யாமே . அன்பை வளர்த்து அறத்தைப் பெருக்கி இன்பம் சேர்ப்பின் இறையடி தானே. அறிவும் பண்பும் அமையப் பெற்றால் நெறியில் காரியம் நெருங்குதல் இலையே நெஞ்சிற் தூய்மை நெருப்பெனத் துலங்கின் அஞ்சல் வேண்டாம் அரனடி துணையே.   கந்தவனம் கோணேஸ்வரன் 18.12.2019

அருள்மிகு கற்பகவிநாயகர் பக்திப் பதிகம்.

திருக்கோணமலை திருஞானசம்பந்தர் வீதியிலமர்ந்தருள் செய்கின்ற அருள்மிகு கற்பகவிநாயகர் பக்திப் பதிகம். உமையாள் பாலகனே உலகத்து முதற்பொருளே   உணர்வு கடந்து நிற்கும் பேரருளே இமையோர் நாயகனே எங்கள்வி நாயகனே   எமதுள்ளம் புகுந்து றைந்த கரிமுகனே எமையாள் கணபதியே இனியதென் கயிலையிலே   எழுந்தருளி அருள் புரியும் கற்பகமே அமைய மனத்திருத்தி அடிதொழும் பக்தருக்கு   அல்லலறுத் தானந்தம் அருள்செய்கு வாயே.         1 தேவாரப் பாடல்கொண்ட திருக்கோண மலையதனில்   திருஞான சம்பந்தர் திருநாமத் தெருவினிலே நாவாலும் மனத்தாலும் நல்லடியார் புகழ்ந் தேத்தும்   நற்குஞ் சரக்கன்றே நற்றமிழர் கற்பகமே மூவாத மூத்தவனே மூ~pகத்தி லமர்ந்தவனே   முன்னின்று காரியங்கள் முடித்துதவுங் கணபதியே பாவாரம் புனைந்தாடிப் பக்தியுடன் தொழுமடியார்   பழவினைகள் தமையறுத் தருள்செய்கு வாயே.        2 மாதாபி தாவைச்சுற்றி மாம்பழத்தைப் பெற்றவனே   மாபார தம்வரைய மருப்பொடீத்து நின்றவனே வேதாக மங்களெல்லாம் வியந்தோங்கும் மூலவனே   வித்துவக் கலைகளுக்கு ...

மரங்களைப் போற்று.

மரங்களைப் போற்று. காற்றை மாசு படுத்தும் மனிதா காசைக் கொடுத்தால் காற்று வருமா? நேற்று நிமிர்ந்த நிழல்மரங் களைநீ நிலத்திற் கிடத்திப் பலகை செய்தாய். சோற்றைக் கூடச் செய்யாக் காசு சொகுசு தந்திடும் என்றா நினைத்தாய்? இயற்கை சிதைந்து சேரும் பணத்தில் எவர்க்கும் புவியில் பசியா றாது செயற்கை தந்திடும் அழகு கூட இயற்கை சிதைந்தால் நிலையா காது. உயர்வு உனக்கு வேண்டு மென்றால் உயிராய் மரங்களைப் போற்றிடு வாயே. கந்தவனம் கோணேஸ்வரன். 21.12.2019