இடுகைகள்

மார்ச், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆங்கிலமும் சட்டமும் தமிழர் அரசியலும்.

ஆங்கிலமும் சட்டமும் தமிழர் அரசியலும். ஆங்கில அறிவென்பது அரசியலுக்கு ஒரு மேலதிகத் தகைமையேயன்றி வேறன்று. தங்கள் குடும்பவசதி காரணமாக ஆங்கிலத்தில் கல்விபெற்றவர்களும் ஆங்கிலமோகம் கொண்ட சில பாமரர்களும்தான் ஆங்கிலத்தை உயர்த்திப் பிடிக்கிறார்கள். ஆங்கில அறிவடையவர்களெல்லாம் சாதனையாளர்கள்போன்றும் ஏனையோர் இயலாதார்போன்றும் நடந்து கொள்வது மடைமைத்தனத்தின்  ஒரு வெளிப்பாடே. நாங்கள் தலைவர்கள் எனக் கொண்டாடும் .பொன்னம்பலம் இராமநாதன், சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம், கணபதி காங்கேசு பொன்னம்பலம்,  அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்,  முருகேசு சிவசிதம்பரம்,  இராஜவரோதயம் .சம்பந்தன், புதிதாய் முளைக்கும் க.வி. விக்கினேஸ்வரன் ஆகியோர் அனைவரும் ஆங்கிலமொழிமூலம் கல்வி பெற்றவர்களே. தமிழை இரண்டாம் மொழியாகப் பயின்றவர்களே. இவர்களை எடுத்துப்பாருங்கள்: அனைவரும் பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. உன்னையும் என்னையும் போன்று தெருக்களில் விளையாடியவர்களல்லர். பட்டம்விட்டு உடலெங்கும் புழுதியில் புரண்டவர்களல்லர். பஞ்சம் தெரியாமல் வளர்ந்தார்கள்: பெற்றோர் தேடிவைத்த பணத்தில் உயர்கல்வி பெற்றார்க...

ஏய்ப்போர் உயருங் காலமிது.

ஏய்ப்போர் உயருங் காலமிது. வன்னியில் செத்தவன் செத்தான் வதைபட்டுப் போனவன் போனான் தன்னை யழித்தவன் அழிந்தான் தந்திரம் செய்தவன் உயர்ந்தான் தமிழே தமிழே என்றான் தமிழில் பேசுதல் தவிர்த்தான் உலகம் முழுக்கப் பரந்தான் உயர்ந்தவன் தானென நினைத்தான் பக்குவ வாழ்வுடன் படித்தான் பணத்தைச் சேர்த்தவன் சேர்த்தான் மக்கள் துயரை விற்றான் மதிப்பும் மாலையும் பெற்றான் இலங்கையில் வாழ்ந்தவன் நொந்தான் இடர்பல கண்டு பயந்தான் துலங்கிடுந் தமிழைக் காத்தான் தலைமுறை இழந்து நிமிர்ந்தான் யுத்தத் துயரை ஏற்றான் நித்தம் அடிகள் பெற்றான் செத்துப் பிழைத்து மீண்டான் செந்தமிழ்ப் பாதை நடந்தான் துயரம் போனது போனதே துன்பம் கடந்த தானதே பயங்கொள் நிலையும் தகர்ந்ததே பழைய வாழ்க்கை துளிர்த்ததே துயரம் கழிந்ததும் வந்தனன் தொப்புள் கொடிநீ என்றனன் அயர்வு ஏனெனக் கேட்டனன் அஞ்சேல் நானுளன் என்றனன் மடையன் இங்கே மகிழ்ந்தான் மன்னன் இவனென வியந்தான் அடடா அழகு ஆங்கிலத்தால் அனைத்தும் நடக்கு மெனநினைந்தான் இத்தனை நாளெங் கிருந்தான் இன்று இங்கேன் இவன்வந்தான் என்று கேட்கத் தோன்றாமல் ‘ஏசி’ பூட்டி வாழ்வளித்தான்...

முத்தமொன்று கேட்டபோது…

முத்தமொன்று கேட்டபோது… முத்தமொன்ற கேட்டபோது சத்தமின்றி நின்றாய் சுத்தமின்றி நின்றதாலே வெட்கமென்று கொண்டேன் வெட்கமென்று கொண்டதாலே கிட்டவந்து நின்றேன் கிட்டவந்து நின்றபோது எட்டியெட்டிச் சென்றாய். எட்டியெட்டிச் செல்வதுதான் பெண்மைக்கு அழகோ தொட்டுப்பேச அனுமதித்தால் தூய்மைக்குப் பழுதோ விட்டிற்பூச்சி போலநானும் அலைதலுந் தகுமோ கட்டியள்ளி முத்தமிட்டால் ஆண்மைக்கு மிடுக்கோ பூங்கொடியைச் சுற்றித்தானே வண்டுகள் பறக்கும் ஏங்குகின்ற மனதில்தானே காதலும் சுரக்கும் மாங்கனிகள் என்றாலே சுவைத்திடச் சிறக்கும் வாங்கிக்கொள்ள மனமிருந்தால் வண்ணங்கள் பிறக்கும் வண்ணங்கள் தாமடியோ வாழ்க்கையின் சிறகு எண்ணங்கள் விரிந்தாலே இனித்திடும் உறவு உன்னிடத்தில் தானேயென் உள்ளத்து உணர்வு கண்ணைமூடி நின்றிருந்தால் காவிய மகிழ்வு தேனிதழிற் சுவைமதுவை யாருக்கு வைத்தான் நானுரிமை கொள்வதற்குத் தானதைத் தந்தான் ஏனினியும் தமதமோ அருகில் வந்துநில் வானுலகு சென்றுவரும் வழியைத் தந்துநில். கந்தவனம் கோணேஸ்வரன் 09.03.2020

மனிதம் காப்போம்.

மனிதம் காப்போம். மதத்தின் பேரால் இனத்தின் பேரால் மனிதனை மனிதன் அழிப்பது சரியோ? கருத்தின் பேரால் கட்சியின் பேரால் மிருகம் போன்று நடப்பதும் ஏனோ? சாதியின் பேரால் காதலைப் பிரித்து சாதனைக் கொலைகள் புரிதலும் முறையோ? நீதியை மறந்து நேர்மையை இழந்து ஆதிக் குணங்கள் கொள்வது நலமோ? உயிரை வதைக்கும் உணர்வை வதைப்போம் உலகம் ஏற்கும் வழியில் நடப்போம். கந்தவனம் கோணேஸ்வரன் 06.03.2020

எத்திக்கும் புகழ்மணக்கும் தமிழணங்கே.

எத்திக்கும் புகழ்மணக்கும் தமிழணங்கே. வித்தைக்கும் பக்திக்கும் வெற்றிக்கும் வழிகாட்டி எத்திக்கும் புகழ்மணக்கும் தமிழணங்கே என்தாயே தித்திக்கும் கவிதைகளும் தேன்சொட்டும் பனுவல்களும் சித்தத்தை ஆட்கொள்ளும் செயற்றிறனை வாழ்த்துதுமே. முத்தமிழாய் முதுகலையாய் முகிழ்த்தபழம் பண்பாடாய் முத்திதரு அறநெறியாய்ப் புறமகமென் றிருகூறாய் நித்தமும்நா வினிக்கவோதும் திருமுறையாய்ப் பிரபந்தமாய் எத்துறையி லும்நிறைவாய் இருப்பவளை வாழ்த்துதுமே பழைமைக்குப் பழையவளாய் புதுமைக்குள் புதியவளாய் அழகுக்கும் அறிவுக்கும் ஆளுமைக்கு முரியவளாய் கழகத்தால் வளர்ந்தவளாய்க் கற்பனையில் விரிந்தவளாய் வழுவற்ற ஆரணங்காய் வாழ்பவளை வாழ்த்துதுமே பதின்கோடி மாந்தருக்குப் பாசமிகு தாயவளாய் நிதமவர்தம் சாதனைக்கு நிலைக்களனு மானவளாய் விதியோடும் வலியோடும் விளையாடி வென்றுலகில் நதிபோலே தினம்பெருகும் நளினத்தை வாழ்த்துதுமே கந்தவனம் கோணேஸ்வரன்      04.03.2020

கானல்நீர்.

கானல்நீர். கானல்நீரைத் தேடித்தானே வாழ்க்கை போகுது கடைசியிலே அதுவுங்கூடக் கானல் ஆகுது ஈனச்செயல்கள் செய்துவாழ்வில் உயரத் தோன்றுது எல்லாம்நிறைந்த பின்னும்வாழ்க்கை சலித்துப் போகுது இளமையிலே காதல்தானே உலகம் ஆகுது இதிலேதோல்வி காணும்போது இதயம் கனக்குது அழகினிலும் பகட்டினிலும் ஆசை கொள்ளுது அத்தனையும் கிடைத்தபிறகும் துயரம் நீளுது. அமைதிநெறி நாடுவோர்க்கு உலகம் இனிக்குது ஆதிதொடக்கம் அந்தம்வரைக்கும் உறவு நிலைக்குது இமயம்போல அவர்தம்புகழை வையம் போற்றுது இல்லையென்ற போனவரை ஏற்க மறுக்குது. கந்தவனம் கோணேஸ்வரன். 05.03.2020

நாலடியார்

நாலடியார் எண்ணாயிரம் சமணர் எழுதிவைத்த ஏடுகளைத் தண்ணீரில் விட்டதனால் தமிழுக்காய் எதிரேறி விண்ணாடும் நானூறு வெண்பாக்கள் மீண்டதாலே மண்ணாடும் நாலடியார் மகிமைநூல் பெற்றனமே அறத்தின் வழிவாழின் அனைத்தும் நலமாகும் துறக்கும் நிலைகாணின் அறமும் உயர்வாகும் மறத்தால் வருமின்பம் மன்னுயிர்க்குத் துணையாகா இறத்தல் வரினும்நல் அறத்தைக் கொள்கவென்று அழுத்தி உரைத்தநூல்;: இன்பம்பொருள் தேடுதற்கும் வழுவா நெறிநின்று வாழ்வதுவே சிறப்பென்று பழுதில் பாதைதனைப் பரிந்துரைக்கும் நாலடியார் பதினெண் கீழ்க்கணக்கில் வருகின்ற பெருநிதியாம். மயிர்நீப்பின் கவரிமா வாழாது அதுபோல உயிர்நீப்பர் நிலையிழியின் உத்தமர் எனவுரைத்த அயர்விலாக் குறள்போல இடப்பக்கம் வீழிரையை உயிர்நீக்கும் நிலைவரினும் உண்ணாது புலியென்ற ஒப்புமை ஒன்றுபோதும் உலகத்தோர் சொல்லிவைத்த தப்பிலாத் தமிழ்வழக்கு குறளும்நா லடியார்தானும் எப்போதும் வாழ்க்கையின் உறுதியென்ப துண்மையன்றோ இப்போதும் எப்போதும் எமைக்;காக்கும் பனுவலன்றோ. கந்தவனம் கோணேஸ்வரன் 22.02.2020

பச்சை வயலோரம்.

பச்சை வயலோரம். .. பச்சை வயலோரம் பாக்காமப் போறபெண்ணே பாசத்த நெஞ்சில்வச்சுப் பக்குவமாய்ப் போறதென்ன? இச்சைக் கிளியாக ஏங்குகிறேன் மச்சான்நான் என்ன நெனச்சுஒரு சேதிசொல்லிப் போகாயோ ஆத்தா மறுத்தாளா அப்பனெனை வெறுத்தாரா சேத்துவய மாப்பிள்ளையச் சேர்க்க மறுத்தாரா? எந்தன் மனசுக்குள்ள உன்கோயில் உள்ளதடி எந்தன் குலதெய்வம் நீயென்று மானதடி எந்த எதிர்ப்புனக்கு வந்தாலும் கலங்காதே உன்னை மீட்பதற்கு மச்சான்நான் காத்திருக்கேன் . கந்தவனம் கோணேஸ்வரன் 21.02.2020

நிலவின் ஒளியில் மங்கையுன் வதனம்.

நிலவின் ஒளியில் மங்கையுன் வதனம். நிலவின் ஒளியில் மங்கையுன் வதனம் மலரும் நாணும் மகிமை யுறுதே உலவும் காற்றில் அசையுங் கூந்தல் விலகு மஞ்சின் கோலம் பெறுதே விழிகள் இரண்டும் விண்மீன் உறவோ? அழகிய பற்கள் அலைதரு முத்தோ? கனியிதழ் என்ன பனித்துளி விரிப்போ? காவியம் படைத்திடும் கவிதரு சிறப்போ? உலகிடை யசையும் உயிர்பெறு நிலவோ? நிலமகள் வியந்திட என்வசம் வருமோ? கந்தவனம் கோணேஸ்வரன். 01.02.2020

தேர்தல் 2020.

தேர்தல் 2020. தேர்தலொன்று வருகுதென்ற சேதிவந் தாச்சு சேதிவந்த தாலேபதவி மோதலுண் டாச்சு ஆர்வத்தடன் ஆயிரம்பேர் முன்னிலை வருவார் அவர்களிலும் ஒருசிலர்தான் பதவிகள் பெறுவார் மேடைபோட்டுச் சத்தமிட்டுக் கொள்கைவிளக் குவார் மேன்மையான பாதைதமதே என்றுங் கூறுவார் கூடவரு வோர்கள்சிலர் மாலைபோ டுவார் கொள்கைக்குன்று எங்களவர் என்று புகழுவார். பொய்களுடன் புனைவுகளை அள்ளி வீசுவார் புரட்சியொன்றே எங்கள்வழி என்றும் பேசுவார் கைகள்தட்டி ஆர்ப்பரித்து மக்கள் மகிழுவார் காலந்தந்த பரிசுஇவரே என்றும் நம்புவார். புரபரப்பாய் நடக்கும்தேர்தல் முடிந்து போனபின் பார்லிமென்றுக் கதிரையிலே ஐயா அமருவரர் சுறுசுறுப்பாய் ஓடித்திரிந்த இளைஞர் எல்லோரும் சொர்க்கம்காலில் வீழ்ந்ததென்று வெடிகள் கொளுத்துவரர் ஐந்துவருட காலம்ஐயா அமைதி கொள்ளுவார் அடுத்ததேர்தல் வருகையில்தான் கண்ணை விழிப்பார் எங்கேஎங்கள் பழையதொண்டர் என்று தேடுவார் எப்போதும்நாம் இணைந்திருத்தல் அவசிய மென்பார் விடிவைத்தேடும் மக்கள்இன்றே விழிப்புக் கொள்ளுங்கள் விவேகமான முடிவெடுத்து வாக்குப் போடுங்கள் அடிமைப்புத்தி அற்றுப்போகச் செயலில் காட்டுங்கள் அன்ப...

நெருப்பாற்றில் நீந்த விட்டாய்.

நெருப்பாற்றில் நீந்த விட்டாய். நெருப்பாற்றில் நீந்த விட்டாய் கண்ணே நேர்தந்த பார்வை கொன்றாய் பெண்ணே செருக்கோடு உதறிச் சென்றாய் அன்பை சீரிழந்து தவிக்க வைத்தாய் என்னை நினைவெல்லாம் நின்றாடும் தேவி நீயே நீயில்லா வாழ்வினிலே எல்லாம் தீயே உணவேது உணர்வேது உயிரே மிச்சம் உடலோய்ந்து போகுமடி வேண்டாம் அச்சம் நிலையாகா உடலமிது மறைந்து போகும் குலையாத உறுதியுடன் காதல் வாழும். கந்தவனம் கோணேஸ்வரன் 05.02.2020.