எத்திக்கும் புகழ்மணக்கும் தமிழணங்கே.

எத்திக்கும் புகழ்மணக்கும் தமிழணங்கே.


வித்தைக்கும் பக்திக்கும் வெற்றிக்கும் வழிகாட்டி
எத்திக்கும் புகழ்மணக்கும் தமிழணங்கே என்தாயே
தித்திக்கும் கவிதைகளும் தேன்சொட்டும் பனுவல்களும்
சித்தத்தை ஆட்கொள்ளும் செயற்றிறனை வாழ்த்துதுமே.


முத்தமிழாய் முதுகலையாய் முகிழ்த்தபழம் பண்பாடாய்
முத்திதரு அறநெறியாய்ப் புறமகமென் றிருகூறாய்
நித்தமும்நா வினிக்கவோதும் திருமுறையாய்ப் பிரபந்தமாய்
எத்துறையி லும்நிறைவாய் இருப்பவளை வாழ்த்துதுமே


பழைமைக்குப் பழையவளாய் புதுமைக்குள் புதியவளாய்
அழகுக்கும் அறிவுக்கும் ஆளுமைக்கு முரியவளாய்
கழகத்தால் வளர்ந்தவளாய்க் கற்பனையில் விரிந்தவளாய்
வழுவற்ற ஆரணங்காய் வாழ்பவளை வாழ்த்துதுமே


பதின்கோடி மாந்தருக்குப் பாசமிகு தாயவளாய்
நிதமவர்தம் சாதனைக்கு நிலைக்களனு மானவளாய்
விதியோடும் வலியோடும் விளையாடி வென்றுலகில்
நதிபோலே தினம்பெருகும் நளினத்தை வாழ்த்துதுமே



கந்தவனம் கோணேஸ்வரன்
     04.03.2020

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5