தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 03 - பகுதி 02
புணரியல் 2.
வல்லினம் மிகும் இடங்கள்.
அந்த, இந்த, எப்படி, அப்படி, இப்படி ஆகியவற்றுள் யாதாகிலுமொன்று நிலைமொழியாக அமையுமிடத்து வருமொழி வல்லின எழுத்திற் தொடங்குமாயின் அவ்வல்லினம் மிகுந்து வரும்.
1. அந்த + பையன் = அந்தப்பையன். 2. அந்த + சுனை = அந்தச்சுனை.
3. இந்த + சிறுமி = இந்தச்சிறுமி. 4. இந்த + கட்டடம் = இந்தக்கட்டடம்.
5. எப்படி + போனான்? = எப்படிப்போனான்? 6. எப்படி + சிக்கியது? = எப்படிச்சிக்கியது?
7. அப்படி + சென்றது. = அப்படிச்சென்றது. 8. அப்படி + கொடு. = அப்படிக்கொடு.
9. இப்படி + தந்தாள். = இப்படித்தந்தாள். 10. இப்படி + பாடு. = இப்படிப்பாடு.
அ, இ, உ, ஆகிய சுட்டெழுத்துகளையும், எ வினவெழுத்தையும் நிலைமொழி கொண்டிருக்குமாயின் வருமொழியின் வல்லெழுத்து மிகும்.
அ + குதிரை = அக்குதிரை
இ + பெண் = இப்பெண்.
உ + சட்டி = உச்சட்டி.
எ + செயல் = எச்செயல்
இரண்டாம் நான்காம் வேற்றுமை உருபுகள் நிலைமொழியில் வெளிப்படையாக வருமிடத்து வருமொழி வல்லெழுத்தை முதலாகக் கொண்டிருக்குமாயின் அவ்வல்லினம் மிகும்.
இரண்டாம் வேற்றுமை உருபு ‘ஐ’ வெளிப்படையாக வருதல்:
புத்தகத்தை + கொண்டுவா = புத்தகத்தைக் கொண்டுவா.
பாடத்தை + படி. = பாடத்தைப்படி.
தம்பியை + கூப்பிடு = தம்பியைக்கூப்பிடு.
(புத்தகம் + ஐ = புத்தகம் + அத்து(சாரியை) + ஐ, = புத்தகத்தை எனவரும். அதேபோல் பாடம் + ஐ = பாடத்தை எனவரும் என்பதை ஏற்கனவே அறிந்திருப்பீர்கள்.)
நான்காம் வேற்றுமை உருபு ‘கு’ வெளிப்படையாக நிற்றல்.
அண்ணனுக்கு + கொடு = அண்ணனுக்குக்கொடு.
தம்பிக்கு + பரிசு = தம்பிக்குப்பரிசு.
நாட்டுக்கு + செல். = நாட்டுக்குச்செல்.
ஆய், போய், ஆகி, ஆக போன்ற ஈறுகளில் நிலைமொழி நிறைவுறுமாயின் வருமொழி வல்லினத்தில் தொடங்குமிடத்து அவ்வல்லெழுத்து மிகும்.
தானாய் + செய்தான். = தானாய்ச்செய்தான்.
பேயாய் + கணங்களாய் = பேயாய்க்கணங்களாய்.
போய் + சேர்ந்தான் = போய்ச்சேர்ந்தான்.
புல்லாகி + பூடாய் = புல்லாகிப்பூடாய்.
வீணாகி + போனது = வீணாகிப்போனது.
அவனாக + படித்தான் = அவனாகப்படித்தான்.
அதிகமாக + பெற்றான் = அதிகமாகப்பெற்றான்.
சால, தவ, மிக ஆகிய உரிச்சொற்களின் பின்னே வருமொழி வல்லினம் மிகும்.
சால + சிறந்தது. = சாலச்சிறந்தது.
தவ + பெரிது = தவப்பெரிது.
மிக + சிறிது = மிகச்சிறிது
மெத்த + படித்த = மெத்தப்படித்த
ஓரெழுத்துச் சொல் நிலைமொழியாயின் வருமொழி வல்லெழுத்து மிகும்.
பூ + கொய்தான் = பூக்கொய்தான்.
(பூங்கொத்து, பூஞ்சோலை, மாங்கனி, பூந்தொட்டி போன்றவற்றில் வல்லினம் மிகுவதற்கப் பதிலாக அதற்கினமான மெல்லினம் தோன்றுவதையும் கருத்திற் கொள்ள வேண்டும்.)
தீ + பற்றியது = தீப்பற்றியது.
பா + சிறப்பு = பாச்சிறப்பு.
கோ + பெருமை = கோப்பெருமை
ஈறுகெட்ட எதிர்நிலைப் பெயரெச்சம் நிலைமொழியாயின் வருமொழியின் வல்லினம் மிகும்.
முடிவுறா + செய்கை = முடிவுறாச்செய்கை (முடிவுறாத என ஈறுகெடாமல் வருமாயின் வல்லினம் மிகாது)
குலையா + பண்பு = குலையாப்பண்பு. (குலையாத எனவரின் வல்லினம் மிகாது.)
ஈடில்லா + கடமை = ஈடில்லாக்கடமை. (ஈடில்லாத எனவமையின் ஈடில்லாதகடமை என்றே வரும்.)
உயிரீற்றின் பின்னே வருமொழி வல்லினப் பெயர்ச்சொல் எனின் வல்லினம் மிகும்.
கிளி + பேச்சு = கிளிப்பேச்சு. (கிளி பேசும் கிளிபேசும். இங்கே வருமொழி வினையென்பதால் மிகவில்லை.)
குருவி + கூடு = குருவிக்கூடு. (குருவி பறந்தது. குருவிபறந்தது. வருமொழி வினையாதலால் மிகாது.)
படகு + துறை = படகுத்துறை ( படகு + புரண்டது = படகுபுரண்டது: வருமொழி வினையாதலால் மிகாது.)
கலை + செல்வம் = கலைச்செல்வம். கவிதை + புனல் = கவிதைப்புனல்.
மடு + கோவில் = மடுக்கோவில். புது + கட்டடம் = புதுக்கட்டடம்.
வன்றொடர்க் குற்றியலுகரத்தையடுத்து வருமொழி வல்லெழுத்திற் தொடங்குமாயின் வல்லினம் மிகும்.
கொக்கு + தீவு = கொக்குத்தீவு. திக்கு + பாலகர் = திக்குப்பாலகர்
அச்சு + கலை = அச்சுக்கலை. முத்து + சிப்பி = முத்துச்சிப்பி
சிறப்பு + பயிற்சி = சிறப்புப்பயிற்சி. கருத்து + செறிவு = கருத்துச்செறிவு.
கொக்குப் பறந்தது, திக்குப் பெருமையுற்றது, அச்சுக் கோத்தனர், (கோர்த்தனர் என்பது பிழை), சிறப்புப் பெற்றனர், கருத்துக் கூறினர் என வருமொழி வினையாகுமிடத்தும் வல்லினம் மிகும் என்பதை உணர்க.
மென்றொடர்க் குற்றியலுகரத்தையடுத்து வருமொழி பெயர்ச் சொல்லாகி வல்லெழுத்தைத் தொடக்கமாகக் கொண்டிருப்பின் அவ்வல்லெழுத்து மிகும்.
சங்கு + பொதி = சங்குப்பொதி நுங்கு + குலை = நுங்குக்குலை
நண்டு + குஞ்சு = நண்டுக்குஞ்சு கன்று + குட்டி = கன்றுக்குட்டி.
வண்டு + கால் = வண்டுக்கால் தும்பு + கட்டு = தும்புக்கட்டு.
குற்றியலுகரங்களில்…..(சில குறிப்புகள்.)
நெடிற்றொடர் குற்றியலுகரம் சில இடங்களில் வல்லினம் மிகும்.
ஆறு + தலை = ஆறுதலை. ( இங்கு ஆறு எண்ணைக் குறிக்குமிடத்து வல்லினம் மிகுவதில்லை.)
ஆறு + கால் = ஆறுகால். ( ஆறு எண்ணைக் குறிக்கிறது. வல்லினம் மிகாது.)
பேசு + பொருள் = பேசுபொருள். (வினைத்தொகையில் வல்லினம் மிகாது.)
வீசு + தென்றல் = வீசுதென்றல்; ( வினைத்தொகை)
ஆறு + பெருகியது = ஆறுபெருகியது. (வருமொழி வினைச்சொல்லாகின் வல்லினம் மிகாது.)
சோறு + பொலிந்தது. = சோறுபொலிந்தது. (வருமொழி வினைச்சொல். வல்லினம் மிகவில்லை.)
மாது + தீது = மாதுதீது. மாது + தோழி = மாதுதோழி. (பண்பு அல்லது இயல்புத் தன்மை. அதுவாதல் எனவும் அடையாளங் காணலாம்.)
இவைதவிர்ந்த ஏனைய நெடிற்றொடர்க் குற்றியலுகரங்களின் பின்னே வல்லினம் மிகும்.
ஆறு + படுகை = ஆற்றுப்படுகை. ஆறு + பெருக்கு = ஆற்றுப்பெருக்கு.
சோறு + பருக்கை = சோற்றுப்பருக்கை. நீறு + கட்டி = நீற்றுக்கட்டி.
காசு + பண்டம் = காசுப்பண்டம். வீடு + பொருள். = வீட்டுப்பொருள்.
நாடு + பற்று = நாட்டுப்பற்று. மாது + தலைமை = மாதுத்தலைமை.
குற்றியல் உகரங்களுடன் ‘கள்’ பன்மைவிகுதி இணையும்போது வல்லினம் மிகாது என்பதை நினைவிற் கொளல் நன்று.
நெடிற்றொடர்க் குற்றியலுகரத்துடன் ‘கள்’ விகுதி:
ஆடு + கள் = ஆடுகள்.
காசு + கள் = காசுகள்
தூசு + கள் = தூசுகள்
உயிர்த்தொடர்க் குற்றியலுகரத்துடன் ‘கள்’ விகுதி:
படகு + கள் = படகுகள்.
வரைபு + கள் = வரைபுகள்.
பவிசு + கள் = பவிசுகள்.
வன்றொடர்க் குற்றியலுகரத்துடன் ‘கள்’ விகுதி.
சிறப்பு + கள் = சிறப்புகள். ( சிறப்புக்கள் எனின் சிறப்பான மது என்ற பொருளைத் தரும்.)
வாழ்த்து + கள் = வாழ்த்துகள்
எழுத்து + கள் = எழுத்துகள்.
விருப்பு + கள் = விருப்புகள்.
கட்டு + கள் = கட்டுகள்.
மென்றொடர்க் குற்றியலுகரத்துடன் ‘கள்’ விகுதி:
குஞ்சு + கள் = குஞ்சுகள்.
நுங்கு + கள் = நுங்குகள்.
குன்று + கள் = குன்றுகள்.
இடைத்தொடர், ஆய்தத்தொடர்க் குற்றியலுகரங்களுக்கும் இவ்விதி பொருந்துமாயினும் அவற்றடன் ‘கள்’ விகுதி இணைவதற்கான வாய்ப்புகள் குறைவாகக் காணப்படுகின்றமையால் அவை விடப்படுகின்றன.
முற்றியலுகரத்துடன் ‘கள்’ பன்மை விகுதி இணையுமிடத்து ‘க்’ எழுத்துத் தோன்றும்.
(முற்றியலுகரம் என்பது கு, சு, டு, து, பு, று ஆகிய வல்லின மெய்யேறிய உகரங்கள் குற்றெழுத்தை முதலெழுத்தாகக் கொண்டு இரண்டெழுத்துச் சொல்லாக அமைவது.)
கொசு + கள் = கொசுக்கள்.
மடு + கள் = மடுக்கள்.
வடு + கள் = வடுக்கள்.
மறு + கள் = மறுக்கள்
சில குறிப்புகள்.
அக்கரை + பச்சை = அக்கரைபச்சை.
இக்கரை + சேனை = இக்கரைசேனை.
அக்கரை + பச்சை = அக்கரைப்பச்சை.
இக்கரை + சேனை = இக்கரைச்சேனை
அக்கரைபச்சை, இக்கரைசேனை எனவரும் இணைவில் அந்தக் கரை பசுமையாக இருக்கின்றதென்றும் இந்தக் கரை சேனையாக அமைந்துள்ளது என்றும் பொருள் வெளிப்படும். இவற்றில் அந்தக்கரையும் இந்தக்கரையும் முதன்மை பெறுகின்றன.
அக்கரைப்பச்சை, இக்கரைச்சேனை என வல்லொற்று மிகுந்துவரும் இணைவில் அக்கரையிலுள்ள பசுமை பற்றியும் இக்கரையிலுள்ள சேனை பற்றியும் பேசப்படுகிறது. இவற்றில் அக்கரையின் பசுமையும் இக்கரையின் சேனையும் பேசுபொருள்களாகின்றன.
இத்தகைய நுணுக்கங்களைப் புரிந்திருத்தல் தமிழைப் பிழையற எழுதுவதற்கு இலகுவாக அமையும்.
கருத்துகள்
கருத்துரையிடுக