ஏய்ப்போர் உயருங் காலமிது.

ஏய்ப்போர் உயருங் காலமிது.


வன்னியில் செத்தவன் செத்தான்
வதைபட்டுப் போனவன் போனான்
தன்னை யழித்தவன் அழிந்தான்
தந்திரம் செய்தவன் உயர்ந்தான்


தமிழே தமிழே என்றான்
தமிழில் பேசுதல் தவிர்த்தான்
உலகம் முழுக்கப் பரந்தான்
உயர்ந்தவன் தானென நினைத்தான்


பக்குவ வாழ்வுடன் படித்தான்
பணத்தைச் சேர்த்தவன் சேர்த்தான்
மக்கள் துயரை விற்றான்
மதிப்பும் மாலையும் பெற்றான்


இலங்கையில் வாழ்ந்தவன் நொந்தான்
இடர்பல கண்டு பயந்தான்
துலங்கிடுந் தமிழைக் காத்தான்
தலைமுறை இழந்து நிமிர்ந்தான்



யுத்தத் துயரை ஏற்றான்
நித்தம் அடிகள் பெற்றான்
செத்துப் பிழைத்து மீண்டான்
செந்தமிழ்ப் பாதை நடந்தான்


துயரம் போனது போனதே
துன்பம் கடந்த தானதே
பயங்கொள் நிலையும் தகர்ந்ததே
பழைய வாழ்க்கை துளிர்த்ததே


துயரம் கழிந்ததும் வந்தனன்
தொப்புள் கொடிநீ என்றனன்
அயர்வு ஏனெனக் கேட்டனன்
அஞ்சேல் நானுளன் என்றனன்


மடையன் இங்கே மகிழ்ந்தான்
மன்னன் இவனென வியந்தான்
அடடா அழகு ஆங்கிலத்தால்
அனைத்தும் நடக்கு மெனநினைந்தான்


இத்தனை நாளெங் கிருந்தான்
இன்று இங்கேன் இவன்வந்தான்
என்று கேட்கத் தோன்றாமல்
‘ஏசி’ பூட்டி வாழ்வளித்தான்



வெள்ளை வேட்டி சட்டையும்
வெகுளி போன்ற பார்வையும்
கள்ளத் தனத்தை மறைத்திட
கருணை யுருவாய் வலம்வந்தான்


இன்னும் இலக்கு இருக்கிறது
எம்பி யாவதில் நிறைகிறது
என்ன நடக்குது பார்ப்போமே
ஏய்ப்போர் உயரும் காலமிதே.


கந்தவனம் கோணேஸ்வரன்
13.03.2020






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5