முத்தமொன்று கேட்டபோது…

முத்தமொன்று கேட்டபோது…



முத்தமொன்ற கேட்டபோது சத்தமின்றி நின்றாய்
சுத்தமின்றி நின்றதாலே வெட்கமென்று கொண்டேன்
வெட்கமென்று கொண்டதாலே கிட்டவந்து நின்றேன்
கிட்டவந்து நின்றபோது எட்டியெட்டிச் சென்றாய்.


எட்டியெட்டிச் செல்வதுதான் பெண்மைக்கு அழகோ
தொட்டுப்பேச அனுமதித்தால் தூய்மைக்குப் பழுதோ
விட்டிற்பூச்சி போலநானும் அலைதலுந் தகுமோ
கட்டியள்ளி முத்தமிட்டால் ஆண்மைக்கு மிடுக்கோ



பூங்கொடியைச் சுற்றித்தானே வண்டுகள் பறக்கும்
ஏங்குகின்ற மனதில்தானே காதலும் சுரக்கும்
மாங்கனிகள் என்றாலே சுவைத்திடச் சிறக்கும்
வாங்கிக்கொள்ள மனமிருந்தால் வண்ணங்கள் பிறக்கும்


வண்ணங்கள் தாமடியோ வாழ்க்கையின் சிறகு
எண்ணங்கள் விரிந்தாலே இனித்திடும் உறவு
உன்னிடத்தில் தானேயென் உள்ளத்து உணர்வு
கண்ணைமூடி நின்றிருந்தால் காவிய மகிழ்வு


தேனிதழிற் சுவைமதுவை யாருக்கு வைத்தான்
நானுரிமை கொள்வதற்குத் தானதைத் தந்தான்
ஏனினியும் தமதமோ அருகில் வந்துநில்
வானுலகு சென்றுவரும் வழியைத் தந்துநில்.


கந்தவனம் கோணேஸ்வரன்
09.03.2020

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5