நாலடியார்

நாலடியார்


எண்ணாயிரம் சமணர் எழுதிவைத்த ஏடுகளைத்
தண்ணீரில் விட்டதனால் தமிழுக்காய் எதிரேறி
விண்ணாடும் நானூறு வெண்பாக்கள் மீண்டதாலே
மண்ணாடும் நாலடியார் மகிமைநூல் பெற்றனமே


அறத்தின் வழிவாழின் அனைத்தும் நலமாகும்
துறக்கும் நிலைகாணின் அறமும் உயர்வாகும்
மறத்தால் வருமின்பம் மன்னுயிர்க்குத் துணையாகா
இறத்தல் வரினும்நல் அறத்தைக் கொள்கவென்று


அழுத்தி உரைத்தநூல்;: இன்பம்பொருள் தேடுதற்கும்
வழுவா நெறிநின்று வாழ்வதுவே சிறப்பென்று
பழுதில் பாதைதனைப் பரிந்துரைக்கும் நாலடியார்
பதினெண் கீழ்க்கணக்கில் வருகின்ற பெருநிதியாம்.


மயிர்நீப்பின் கவரிமா வாழாது அதுபோல
உயிர்நீப்பர் நிலையிழியின் உத்தமர் எனவுரைத்த
அயர்விலாக் குறள்போல இடப்பக்கம் வீழிரையை
உயிர்நீக்கும் நிலைவரினும் உண்ணாது புலியென்ற


ஒப்புமை ஒன்றுபோதும் உலகத்தோர் சொல்லிவைத்த
தப்பிலாத் தமிழ்வழக்கு குறளும்நா லடியார்தானும்
எப்போதும் வாழ்க்கையின் உறுதியென்ப துண்மையன்றோ
இப்போதும் எப்போதும் எமைக்;காக்கும் பனுவலன்றோ.


கந்தவனம் கோணேஸ்வரன்
22.02.2020

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5