இலக்கணம் அறிவோம். தொடரியல் 3 (3).
இலக்கணம் அறிவோம். தொடரியல் 3 (3). உவமைத் தொடர்களும் அவற்றை வாக்கியங்களிற் பயன்படுத்தும் வகையும். நம்முன்னோர் மரபுச்சொற்றொடரைப் பயன்படுத்தித் தமது பேச்சுவன்மையையம் எழுத்துவன்மையையும் மேம்படச் செய்தமை போன்றே உவமைத் தொடர்களையும் பொருத்தமான இடங்களிற் பயன்படுத்தித் தாம் சொல்லவந்த கருத்துகளுக்கு வலுவூட்டினர். மரபுத்தொடரைப் பொறுத்தமட்டில் அத்தொடரிற் கையாளப்படும் சொற்களின் நேர்க்கருத்துகள் தொடரின் கருத்தாக அமையா என்பது ஏற்கனவே அறிந்தவிடயம். அத்தொடரின் பொருள் மரபுவழியாகப் பேணப்பட்டு வருவதால் அதில் மாற்றம் செய்யும் உரிமையும் எமக்கு இல்லை. இதனால் மரபுச்சொற்றொடர்களை நாம் புதிதாக ஆக்கிவிடவும் முடியாது என்பது வெள்ளிடைமலை. ஆனால் உவமைச் சொற்றொடர்கள் அவ்வாறல்ல. அவற்றின் கருத்துகள் தெளிவானவை. நாம் சொல்லவரும் கருத்துக்கு ஏற்ற உவமானங்களாக அவை செயற்படுபவை. “ஏற்கனவே நடந்த சம்பவம்போல் நாம் சொல்லவரும் சம்பவமும் அமைகிறது.” என்ற எண்ணத்தை வலியுறுத்தும் வகையிலமைபவை. எனவே, உவமைச் சொற்றொடர்கள் புதிதாகத்; தோன்றுதற்குச் சந்தர்ப்பங்களுள. “காகம் இருக்கப் பனம்பழம் விழுந்ததுபோல” என்ற உவமைச் சொற்றொடரை எடுத...