துயரங் கூறவா?

துயரங் கூறவா?

செருப்புக் கூடப் பாரமான
 சேதி சொல்லவா – என்
இருப்பைக் கூட இழந்துவிட்ட
 துயரம் கூறவா.
நெருப்புக் கடலில் நீந்திவந்த
 கதையை விளம்பவா – நான்
நிலையிழந்து தளர்ந்து போன
 நிலையை மொழியவா

பிள்ளைகுட்டி பெண்டு பெற்றோர்
 அழிவைப் பகரவா – நான்
அள்ளிச்சுமந்த அவர்கள் ரணத்தின்
 வலியைச் சொல்லவா
வெள்ளைக் கொடியும் மதிப்பிழந்த
 விபரம் கூறவா – அதை
வீரமென்று பகன்ற அரசின்
 சிறுமை சொல்லவா

வல்லரசு வாய் புதைத்த
 வகையைச் சொல்லவா – அது
நல்லபிள்ளை போல நின்ற
 நளினங் கூறவா
கொல்பவர்க்கு உதவி செய்த
 கொடுமை சொல்லவா – அந்தக்
கொடுமையிலும் எழுந்து வந்த
 துயரங் கூறவா



உலகவாழ்வில் உச்சத் துயரின்
 கதையைக் கூறவா – நாம்
உருக்குலைந்து போன அந்த
 நிகழ்வைக் கூறவா
தலையிழந்து கிடந்த உடல்கள்
 நிலையைக் கூறவா – அவர்
தமிழர்என்ப தால் சிதைந்த
 விதியைக் கூறவா.

கந்தவனம் கோணேஸ்வரன்.

(இக்கவிதை 2009 முள்ளிவாய்க்கால் அவலத்தின் நினைவாக ஆண்டின் நடுப்பகுதியில் எழுதப்பட்டது. முகநூல் நண்பர்களின் பார்வைக்காக இன்று (21.07.2019) வெளியிடப்படுகிறது.)














கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5