இலக்கணம் அறிவோம் தொடரியல் 3 (2)

இலக்கணம் அறிவோம்
தொடரியல் 3 (2)

மரபுச் சொற்றொடர்களும் அவற்றை வாக்கியங்களிற் பயன்படுத்தும் முறைமைகளும்.

அழகிய தமிழ் வசனநடைகளுக்கு மரபுச் சொற்றொடர்கள் பெரிதும் துணைசெய்கின்றன. தமிழ் வசனங்களை அழகாகவும் பொருள் செறிந்ததாகவும் அமைக்க வேண்டுமாயின் மரபுச் சொற்றொடர்களையும் அவற்றை வசனங்களிற் பயன்படுத்துகின்ற முறையையும் அறிந்திருத்தல் அவசியம்.

நம் முன்னோர்கள் பேசுகின்ற அல்லது எழுதுகின்ற வசனங்கள் பொருட்செறிவுடையதாக இருப்பதற்காக அவற்றுடன் இணையக்கூடிய பல்வேறுவிதமான மரபுச் சொற்றொடர்களை உருவாக்கித் தந்துள்ளனர். மரபுச் சொற்றொடர்கள் என்பதன் பொருள் மரபுவழியாகப் பலதலைமுறையினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு எம் தலைமுறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட கருத்துமிக்க சொற்றொடர்கள் என்பதாகும். இவற்றை நாம் சரியாகப் பயன்படுத்துவதன்மூலம் மொழிவளத்தைப் பாதுகாப்பதோடு எமது ஆற்றலையும் வளர்த்துக் கொள்கிறோம்.

மரபுச் சொற்றொடர் ஒன்றில் பயன்படுத்தப்படும் சொற்கள் எவையும் தமது இயல்பான கருத்தைக் கொண்டிருப்பதில்லை என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும். சொற்களின் கருத்து ஒருவிதமாக இருக்க மரபுச் சொற்றொடரால் உண்டாகும் கருத்து பிறிதொன்றாக இருப்பது கண்கூடு.

உதாரணமாக,  முந்தைய வசனத்தின் நிறைவுச் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் “கண்கூடு” என்ற பதம் ஒரு மரபுச்சொற்றொடர் ஆகும். இதில் கண் என்ற சொல்லும் கூடு என்ற சொல்லும் காணப்படுகின்றன. இதன்படி சொற்களுக்குரிய நேரடிக் கருத்தைக் காண முயல்வோமாயின் கண்கள் கூடியிருத்தல் அல்லது கண்ணுக்குரிய கூடு (புறாக்கூடு போல என்றுங் கொள்ளலாம்.) என்றாகிறது. ஆனால் இத்தொடரின் கருத்தாகக் கொள்ளப்படுவது “தெளிவாகத் தெரிகின்ற நடைமுறைச் செய்தி” என்பதாகும்.

இதேபோல்,  “சந்திக்கு இழுத்தல்” என்பதன் பொருள் தெருக்கள்கூடும் சந்தியைநோக்கி ஒருவரை இழுத்துச் செல்வது என்பதன்று. அவமதித்தல் அல்லது மானக்கேடான சம்பவங்களைப் பிறரறிய வெளிப்படுத்தல் என்பதே அதன் சரியான பொருளாகும்.

“காலை வாரிவிடல்” என்பதன் பொருள் கால்களை இழுத்து வீழ்த்துதல் என்பதாகவன்றி பொருத்தமான சந்தர்ப்பம் பார்த்து ஒருவருக்குக் கேடு சூழும்படி செய்தல் என்பதாகும்.
இவற்றை மனதிற்கொண்டு மரபுச்சொற்றொடர்கள் வசனங்களிற் பொருந்தும் வகையைக் காண்போம்.


அடிகோலல் - மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கான அமைப்பொன்றுக்கு ஊர்ப்பெரியவர்கள் இன்று அடிகோலினர். (தொடக்க ஏற்பாடுகளைச் செய்தனர்)

அடிபணிதல் - அரசின் நியாயமான வேண்டுகோளுக்கு அடிபணிதல் நல்ல பிரசையின் பண்பாகும். (ஏற்றொழுகுதல்
)
அடிபிடித்தல் - சரியாக அடிபிடித்த வேலன், தனக்கு நேர்ந்த துன்பத்துக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்தான்.
 (மூலத்தைக் கண்டறிதற்கான நுண்ணிய முயற்சி)

அடிப்பிடித்தல் - வீட்டுக்கு வந்தவருடன் அம்மா பேசிக் கொண்டிருந்ததால் அடுப்பிலிருந்த சோறு அடிப்பிடித்து விட்டது. (கருகிப் போய்விட்டது)

(அடிபிடித்தல், அடிப்பிடித்தல் ஆகிய இரு மரபுச்சொற்றொடர்களின் பொருள் மாறுபடுவதற்கு ‘ப்’ என்ற ஓரெழுத்தே காரணம் என்பதைப் புரிந்து கொள்ளல் நன்று.)

அடிப்படுதல் - நியாமான விடயங்களுக்கன்றி என்னை அடிப்படுத்த எவருக்கும் இடங்கொடேன். (கீழ்ப்படிந்து ஒழுகுதல்)

அணைகோலல் - அவன் தன் பிற்கால வாழ்க்கை சீர்கெட்டுப் போகாமலிருக்க உழைக்கும் காலத்திலேயே அணைகோலி வைத்திருந்தான். (போதிய முன்னேற்பாடுகளைச் செய்து தீங்கு வராமற் காத்துக்கொள்ளல்)

அந்தரத்தில் நிற்றல் - உழைக்கும் போதே சேமித்து வைக்காவிடின் பிற்காலத்தில் அந்தரத்தில் நிற்க வேண்டியேற்படலாம். (உதவிகளின்றித் தவித்தல்)


மேலும் சில மரபுச் சொற்றொடர்களும் அவற்றின் கருத்துகளும் இணைக்கப்பட்டுள்ளன. இவைபோல் ஆயிரக்கணக்கான மரபுச்சொற்றொடர்கள் தமிழில் உள. வசதிகருதி மிகச்சிலவே இங்கு காட்டப்படுகின்றன.

அங்கிடுதத்தி (உறுதியான நிலைப்பாடு எதுவுமின்றி அங்குமிங்கும் அலைபவன்.)

ஆசாரக்கள்ளன் (ஒழுக்கசீலன்போலும் நேர்மையானவன்போலும் உலகுக்கு முன்னால் நடிப்பவன்)

இரண்டு தோணியிற் கால்வைத்தல் (ஒன்றுக்கும் மேற்பட்ட காரியங்களில் சக்தியைமீறிச் செயல்பட்டு எதிலும் வெற்றிகாண முடியாத நிலை.)

இலைமறைகாய் (விளம்பரப்படுத்தப்படாமல் மறைவாக இருக்கின்ற திறமைசாலிகள்)

உலைவைத்தல் (பிறருக்குத் தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுதல்)

ஊமைக்கோட்டான் (உரிய இடத்தில் தன் நியாயங்களை எடுத்துச் சொல்லும் திறனற்றவன்)

எடுத்தெறிதல் (அலட்சியம் காட்டுதல்)

ஏட்டுப்படிப்பு (உலக அனுபவம் இல்லாமல் கல்வியை மாத்திரம் நம்பியிருத்தல்)

ஓட்டைவாயன் (இரகசியங்களைக் காப்பாற்ற மாட்டாதவன்)

கட்டிக்கொடுத்தல் (வயதுவந்த பெண்ணுக்குச் சரியான இடத்தில் திருமணம் செய்துவைத்தல்)

கட்டுப்பெட்டி (பழமைவாதியாக இருத்தல்)

கடைகட்டுதல் (காரியங்களை முடித்துக்கொண்டு வெளியேறல்)
கண்திறத்தல் (அறிவு பெறல்)

கண்மூடுதல் (இறத்தல்)

கரையேற்றுதல் (துன்பத்திலிருந்து ஒருவரை மீட்டெடுத்தல்….பெண்ணுக்குத் திருமணம் செய்வித்தல்)

கதைபிடுங்குதல் (ஒருவரிடமிருந்து அவர் வாய்மூலமாகவே இரகசியங்களைச் பெற்றுக் கொள்ளல்)

கம்பிநீட்டுதல் (காரியமானதும் தலைமறைவாகிவிடல்)

கரைத்துக் குடித்தல் (ஒரு துறையை முற்றாக அறிந்து வைத்திருத்தல்)

காக்காய் பிடித்தல் (ஒருவரிடமிருந்து காரியம் சாதிப்பதற்காக அவர்நலனில் அக்கறை காட்டுதல்போல நடித்தல்)

காலில் விழுதல் (சரணடைதல்)

குதிரைக்கொம்பு (கிடைத்தற்கரியது)

கும்பிடுகள்ளன் (சரணடைந்தேனும் காரியம் பெற்றதும் விலகிவிடுபவன்)

கேள்விச்செவியன் (கேட்பவற்றையெல்லாம் நம்புபவன்)

கைகழுவுதல் (தொடர்புகளை முறித்துக் கொள்ளல் … பொறுப்பிலிருந்து முற்றாக விலகுதல்)

  (தற்காலத்தில் ‘கைகழுவும்தினம்’ என்றொரு நாள் கைக்கொள்ளப்படுகிறது. இது கைகளைச் சுத்தமாக வைத்திருத்தல் என்ற தொனிப்பொருளில் கைக்கொள்ளப் படுகின்றதெனினும் மரபுச் சொற்றொடரின்படி (ஏதோ ஒன்றிலிருந்து) முற்றாக விலகுதல் என்பதே அதன் பொருளாகும். எனவே மரபுத்தொடரை மீறாதவகையில் தொனிப்பொருளுக்கிணையான நேர்த்தியான பதமொன்றைத் தேர்வுசெய்து அறிமுகப்படுத்த வேண்டியது அறிஞர் கடனாகும்)

கைமோசம் போதல் (பிறரால் ஏமாற்றப்படுதல்)

கைவிரித்தல் (இயலாமையை வெளிப்படுத்தல்)

சிண்டுமுடித்தல் (சண்டை உருவாக்கல்)

சுணைகெட்டுப் போதல் (மான அவமானங்களுக்கு அஞ்சாமல் லாழ்தல்)
சூடுபோடுதல் (மனம் நோகப் பேசுதல்)

தட்டிக்கொடுத்தல் (உற்சாகப்படுத்துதல்)

தலைகவிழ்தல் (அவமானப்பட்டு நிற்றல்)

தலைகீழாய் நிற்றல் (பெருமுயற்சி செய்தல்)

தலையெடுத்தல் (வளர்ச்சியடைதல் .. இழந்த நிலையை மீள அடைதல்)

திரிசங்கு சொர்க்கம் (இரண்டுங்கெட்டான் நிலை ….. அந்தரத்தில் நிற்றல்)

தூபம்போடுதல் (தூண்டி விடுதல்)

நடுத்தெருவில் விடல் (ஆதரவின்றிக் கைவிட்டுப் போதல்)

நாக்குப்புரளுதல் (சொன்னசொல் தவறுதல்)

நெட்டுருப் பண்ணுதல் (மனப்பாடம் செய்தல்)

பந்தம்பிடித்தல் (தன் காரியமாவதற்காகப் பிறரைப் புகழ்ந்து அவர் பின்னால் நிற்றல்)

பல்லுக்காட்டுதல் - பல்லிளித்தல் (பிறரிடம் கெஞ்சி நிற்றல்)

 பல்லைப்பிடுங்குதல் (ஒருவரின் வல்லமையைக் குறைத்தல்)

பூசிமெழுகுதல் ( குற்றங்குறைகளை மறைத்தல்)

பூசிப்புணர்த்துதல் (மிகையாக அலங்கரித்தல்)

முகத்திலடித்தல் (முகத்துக்கு நேரே கடுஞ்சொற்கள் கூறல்)

முகம்கொடுத்தல் (எதிர் கொள்ளல் … இனிமையாகப் பழகுதல்)

வயிற்றிலடித்தல் (ஒருவரது வருமானத்தைக் கெடுத்தல்)

வயிற்றைக் கட்டுதல் (உணவைக் குறைத்து மிச்சம் பிடித்தல்)

வல்லடி வழக்கு (நியாயமின்றிப் பலத்தைப் பயன்படுத்தி வம்புக்கிழுத்தல்)

வாயில் மண்போடுதல் (தீமை விளைவித்தல்)

வாலாட்டுதல் (தேவையற்ற சச்சரவுகளை வலிந்து உருவாக்கல்)
விழலுக்கிறைத்தல் (பயனற்ற முயற்சி)


இவற்றைத் தெளிவாக விளங்கிப் பேச்சுமொழியிலும் எழுத்துமொழியிலும் பொருத்தமான இடத்திற் பயன்படுத்துமிடத்து வசனங்கள் கருத்துச்செறிவு மிக்கவையாகவும் கேட்போரை அல்லது படிப்போரை ஈர்ப்பனவாகவும் அமையும் என்பதிற் சந்தேகமில்லை.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5