.இலக்கியத்துளி 10.

.இலக்கியத்துளி 10.


தமிழ்ப்புலவர்களுக்குக் கவித்துவச்செருக்கு சற்று அதிகம்தான். இந்தச் செருக்குக் காரணமாக அவர்கள் கடவுளர்களையும் தமக்கொத்தவர்களாகக் கருதிக் கொள்வதுண்டு. அத்தகைய சந்தர்ப்பங்களில் கடவுளர்களையும் சாதாரண மனிதர்கள்போற் பாவித்துக் கவிதையாற் குளிப்பாட்டிவிடுவார்கள். இக்கவிதைகளில் கிண்டலும் கேலியும் நிறைந்திருக்கும். கடவுளரின் அற்புத குணங்களையெல்லாம் இவர்கள் அற்பமாக்கி விடுவார்கள்.


இத்தகைய கவிதைகள் படிப்பதற்கும் சிந்திப்பதற்கும் விருப்புத் தரவல்லன. இவற்றில் தமிழ்மொழி கையாளப்பட்டிருக்கும் விதம் தனித்துவமானது. இப்படியும் தாய்த்தமிழைப் பயன்படுத்தி உயர்வுபெறச் செய்யலாமா என்று எண்ணத் தோன்றும். பார்ப்பதற்குக் கடவுளரை அலட்சியம் செய்வதுபோற் தெரியும் இத்தகைக் கவிதைகள் பொருள்விளங்கிப் படிப்போரைப் பரவசத்திலாழ்த்தும். பக்தியின் சிறப்பைப் பாராட்டத் தோன்றும்

.
காளமேகப்புலவருக்கு முழுமுதற் கடவுளான சிவபெருமானைத் திட்டித்தீர்க்க வேண்டும்போற் தோன்றியதோ என்னவோ அவரை “சாம்பராகிப் போவாய்….நெருப்பாக எரிந்து போவாய்…இருகூறாகிப் போவாய்… நட்டமாவாய்….நஞ்சாகிப்போவாய்… என்றெல்லாம் வெளிப்படையாகச் சொல்லி ஒரு வெண்பா பாடிவிட்டார்.


“நீறாவாய் நெற்றி நெருப்பாவா யங்கமிரு
கூறாவாய் மேனி கொளுத்துவாய் -- மாறாத
நட்டமா வாய்ச்சோறு நஞ்சாவாய் நாயேனை
இட்டமாய்க் காப்பா யினி.”



பொருள்:


நெற்றி நீறாவாய் - சிவசிவ என் உன்னை நினைந்துருகும் பக்தர்கள் நெற்றியை அலங்கரிக்கின்ற திருநீறு ஆவாய்
.
நெருப்பாவாய் -- பிரமனும் விட்டுணுவும் அடிமுடி தேடியுங் காணக்கிடைக்காத சோதிவடிவாகி நிற்பாய்.

அங்கம் இருகூறாவாய் -- அம்பிகைபாகனாய் ஆண்பாதி பெண்பாதி என உன்னுடலை இருகூறாக்கிக் காட்சி தருவாய்.

மேனி கொளுத்துவாய் -- எரிதழல் வண்ணனாக வலம் வருவாய்.

மாறாத நட்டமாவாய் -- மாற்றமின்றத் தொடர்ந்து நடம்புரிகின்ற நடராசனாவாய்.

சோறு நஞ்சாவாய் -- நஞ்சை அமுதமென உண்டு தேவர்களைக் காத்தருள்வாய்.

(இத்துணைச் சிறப்புநிறைந்த சிவனே..)

 நாயேனை இட்டமாய்க காப்பாய் இனி – நாய்போல உன்பாதமே தஞ்சமென்னு சுற்றிச்சுற்றிவரும் அடியேனை அன்புடன் காத்தருள்வாயாக.



இன்னொரு பாடல்:


வழக்கமாக முருகக் கடவுளுக்குத்தான் ஆறுதலைகள் (ஆறுமுகங்கள்) உள என்று நாம் கருதுகிறோம். ஆனால் காளமேகப்புலவரோ முருகனுக்கு மட்டுமன்றி சிவபெருமான், விநாயகன்,   திருமால்,    சிவனடியார் ஆகியோருக்கும் ஆறுதலை உண்டென்று தன் பாவல்லமையாற் சாதித்து விடுகிறார்.
அந்தக் கவிச்சிறப்பைப் பார்ப்போம்:

“சங்கரற்கு மாறுதலை சண்முகற்கு மாறுதலை
ஐங்கரற்கு மாறுதலை யானதே – சங்கைப்
பிடித்தோர்க்கு மாறுதலை பித்தாநின் பாதம்
படித்தோர்க்கு மாறுதலை  பார் .;”

இதன் பொருள்:

சங்கரற்கும் ஆறு தலை –  சிவபெருமானுக்கும் தலையில் ஆறு (கங்கை) பாய்கிறது.

சண்முகற்கும் ஆறு தலை – ஆறுமுகக் கடவுளுக்கும் தலைகள் ஆறாகும்.

ஐங்கரற்கும் ஆறு தலை – ஐந்துகரத்தனான கணபதியின் தலைகளும் செல்லும் வழியெங்ஙணும் (ஆறு—பாதை) காணப்படுகின்றன.

சங்கைப் பிடித்தோர்க்கும் ஆறுதலை – சங்கேந்தி நிற்பரான திருமாலுக்கும் இருப்பிடமாக அமைந்த திருவரங்கம் காவிரியாற்றுக் கொள்ளிடத்தில் அமைந்துள்ளது.

பித்தா நின்பாதம் படித்தோர்க்கும் ஆறுதலைப் பார். -- இறைவா, உன் திருவடிப்பெருமையை உணர்ந்து அன்பு கொண்டாடும் பக்தர்களுக்கும் ஆறுதலைத் தருகின்ற சிறப்பைப் பார்.


இரண்டு வெண்பாக்களையும் இன்னொரு தடவை படித்துப்பார்த்தால் கவி காளமேகத்தின் திறனை வியப்பதா நந்தமிழின் இனிமையை வியப்பதா எனத் தோன்றும்.

நன்றாகத் தமிழறிந்தவர்கள்கூடத் தாம் தவறிழைத்துவிடுவோமோ என்றஞ்சி வெண்பாக்கள் எழுத முன்வருவதில்லை என்பதையும் இவ்விடத்தில் இணைத்துப்பார்த்தால் காளமேகமும் கன்னித்தமிழும் இரண்டறக் கலந்திருப்பதன் பெருமை புரியும்.


கந்தவனம் கோணேஸ்வரன்
27.07.2019



 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5