தமிழ் இலக்கணம் அறிவோம் 4 தொடரியல் 2 (3)

தமிழ் இலக்கணம் அறிவோம் 4
தொடரியல் 2 (3)

எண்வழு.

எண்வழுவற்ற வாக்கியம் அமைத்தல் என்பது ஒருமை,  பன்மை என்பவற்றிற் கவனமெடுத்து வாக்கியம் அமைத்தலாகும். அவ்வாறு வாக்கியம் அமைக்கும்போது ஒருமையிற் தொடங்கும் வாக்கியத்தின் நிறைவு ஒருமைப் பயனிலையாகவும் பன்மையிற் தொடங்கும் வாக்கிய நிறைவு பன்மைப் பயனிலையாகவும் இருத்தல் அவசியம். இவ்விதி தவறின் அஃது எண்வழுவின் பாற்படும்.


தம்பி வந்தான்;
மாடு மேய்கிறது.
வேணி அழகாக நடனமாடினாள்.

இவ்வாக்கியங்கள் எண்வழு அற்ற முறையில் அமைந்துள்ளன. எழுவாய்,  பயனிலை இரண்டும் ஒருமையில் அமைந்துள்ளமை கவனிக்கத்தக்கது.


அதேபோல்,

தம்பியும் தங்கையும் வந்தனர்.
மாடுகள் மேய்கின்றன.
வேணியும் இலக்கியாவும் நடனமாடினர்.

ஆகிய வாக்கியங்களில் எழுவாய்களும் பயனிலைகளும் பன்மைத்தன்மையுடன் பொருத்தமாக இணைந்துள்ளமையால்  இவை வழுவற்றுக் காணப்படுகின்றன.
இத்தகைய வாக்கியங்கள் இலகுவானவை. பொதுவாகப் எல்லோராலும் பிழையற அமைக்கக் கூடியவை.



பின்வரும் வாக்கிய அமைப்பகளை நோக்குவோம்.


நான் அவளுடன் சென்றேன். (அவளுடன் நான் சென்றேன்.)

இவ்வாக்கியத்தில் “நான்” என்பது எழுவாயாக இருப்பதனால் “சென்றேன்” என்ற தன்மை ஒருமை வினைமுற்றில் அது நிறைவுறுகிறது.



நானும் அவளும் சென்றோம். (அவளும் நானும் சென்றோம்.)

இவ்வாக்கியத்தில் எழுவாய் “நானும் அவளும்” என்பதாகும். எனவே,  வாக்கியம் தன்மைப் பன்மை வினைமுற்றில் முடிவுறுகிறது.



அவள் என்னுடன் வந்தாள் (என்னுடன் அவள் வந்தாள்)

இதன் எழுவாய் “அவள்” என்பதால் வாக்கியம் “வந்தாள்” என்கின்ற படர்க்கை ஒருமை வினைமுற்றில் நிறைவடைகிறது.


அவளும் நானும் அட்சயாவும் வந்தோம்.

இதில் எழுவாயாக அமைவது “அவளும் நானும் அட்சயாவும்” என்ற மூவர். எழுவாயிலுள்ள மூவருள் நானும் என்ற தன்மைச்சொல்லும் (பேசுபவர்) உள்ளடங்கியுள்ளது. எனவே வாக்கிய நிறைவு தன்மைப் பன்மை வினைமுற்றில் முடிகிறது.



நீயும் அவளும் நன்றாகப் பாடினீர்கள்.
நீங்கள் இருவரும் நன்றாகப் பாடினீர்கள்.

இவ்விரு வாக்கியங்களினதும் எழுவாயாக “நீயும் அவளும்” அல்லது “நீங்கள் இருவரும்” என முன்னிலைச் சொற்கள் வருவதால் “பாடினீர்கள்” என்ற முன்னிலைப் பன்மை வினைமுற்றில் அவை நிறைவடைகின்றன.



சோழன் அணியுடன் சேரன் அணி மோதிக்கொண்டது.
சோழன் அணியும் சேரன் அணியும் மோதிக்கொண்டன.
சோழன் அணியினர் சேரன் அணியினருடன் மோதிக்கொண்டனர்.
சோழன் அணியினரும் சேரன் அணியினரும் மோதிக்கொண்டனர்.


மேற்காட்டப்பட்ட நான்கு வாக்கியங்களில், 
முதலாவது வாக்கியத்தின் எழுவாய் சேரன் அணி எனவருவதால் ஒருமைக்குரிய வினைச்சொல்லைக் கொண்டு அவ்வாக்கியம் முடிவடைகிறது. (அணி என்பது அஃறிணை ஒருமைச்சொல் என்பது கருத்திற் கொள்ளத்தக்கது)

இரண்டாவது வாக்கியத்தின் எழுவாய்,   சோழன் அணியும் சேரன் அணியும் என அஃறிணைப் பன்மையில் வருவதால், மோதிக்கொண்டன என்ற அஃறிணை வினைமுற்றில் அது நிறைவுறகிறது.




மூன்றாவது வாக்கியத்தின் எழுவாயாக,   சோழன் அணியினர் என்ற சொல் வருவதால் அணியினர் என்ற உயர்திணைப் பன்மைக்கேற்ப நிறைவுச்சொல்லும் உயர்திணைப் பன்மையிலேயே அமைந்துள்ளது.


நான்காவது வாக்கியத்திக் எழுவாயும் உயர்திணைப் பன்மையில் உள்ளதால் நிறைவுச் சொல்லும் உயர்திணைப் பன்மையில் அமைகிறது.

அணி என்ற   சொல் பலர்கூடிய ஓரமைப்பைக் குறிப்பதால் அது அஃறிணையின் பாற்படுகிறது. படை,  கூட்டம்,  குழு,
 வகுப்பு என்பவையம் இவ்வகையினவே.

எனினும் அணியினர் , படையினர்,  கூட்டத்தினர்,  குழுவினர்,  வகுப்பினர் என இவற்றை மாற்றியமைக்குமிடத்து அவை மனிதர்களையே குறிப்பிடுவதால் உயர்திணைச் சொற்களாகவும் பன்மைத்தன்மை கொண்டவையாகவும் மாற்றமடைகின்றன.
இவற்றைக் கவனித்து வாக்கியங்களை அமைக்குமிடத்து எண்வழுவற்ற வாக்கியங்கள் தோன்றுகின்றன.



இடவழு

.
இடம் என்பது தன்மை, முன்னிலை,  படர்க்கை என மூவகைப்படும்.


தன்னை அல்லது தம்மைக் குறித்துப் பேச்சு எழும்போது அது தன்மை எனப்படும். தன்மைச் சொல் எழுவாயாக அமையின் பயனிலை வினைச்சொல்லும் தன்மையாகவே அமையும்.
எதிரே நிற்பவரை அல்லது நிற்பவர்களை நோக்கி வசனம் அமையும்போது அது முன்னிலை எனப்படும். முன்னிலை எழுவாயிற் தோன்றும் வசனம் முன்னிலை வினைச்சொல்லில் நிறைவடைதலே முறையாகும்.


நான்,  நீ,  அல்லாத பிறஎழுவாய்கள் அனைத்தும் படர்க்கை வகையைச் சாரும் இவற்றின் பயனிலைகளும் படர்க்கையில் அமைவதே நேர்த்தியான வசனத்தின் அடிப்படையாகும்..



நானும் அவனும் சென்றோம்.

இவ்  வாக்கியத்தின் எழுவாய் “நானும் அவனும்” என்பதாகும். எழுவாய் பன்மையைக் குறிக்கிறது. எனவே வாக்கியம் பன்மையில் முடிந்திருக்கிறது. ‘நான்’ என்ற தன்மைச்சொல் எழுவாயில் வருவதால் முடிவுச்சொல் தன்மையில் அமையவேண்டியது நியதி.


   வாக்கியம் ‘நானும் நீயும்’ என்பதை எழுவாயாகக் கொண்டிருப்பினும் ‘நான்’ என்ற தன்மைச் சொல் வந்திருப்பதால் பயனிலை தன்மையிலேயே ‘நானும் நீயும் சென்றோம்.;  என்றவாறாக அமைந்திருக்கும்.


“நான் அவனுடன் சென்றேன்.”

 ‘நான்’ எழுவாயாக அமைந்திருப்பதால் பயனிலை தன்மையிலேயே அமைகிறது.




“நாம் இருவரும் சென்றோம்.” (நானும் அவனும் அல்லது நானும் நீயும் எனவும் வரலாம்)

இவ்வாக்கியத்தின் எழுவாய் “நாம் இருவரும்” என்பதற்குப் பதிலாக “நானும் அவனும்” என்றோ அல்லது “நானும் நீயும்” என்றோ அமையினுங்கூட தன்மைச்சொல் எழுவாயில் வருவதால் பயனிலையும் தன்மையிலேயே நிறைவுறுகிறது.



“கண்ணனோடு நானும் அவனும் விளையாடினோம்.”
இவ்வாக்கியத்தில், “நானும் அவனும்” என்பதே எழுவாயாக அமைவதால் “நான்” என்ற தன்மை எழுவாய்க்கு முக்கியத்துவம் கொடுத்துப் பயனிலை தன்மைப் பன்மையில் அமைகிறது.


“நீ அவனுடன் சென்றாய்.”
“நீயும் அவனும் சென்றீர்கள்.”
“உன்னுடன் அவன் வந்தான்.”


மேற்காணப்படும் வாக்கியங்களில்,

முதலாவது வசனத்தில் “நீ” என்பதே எழவாயாக வருகிறது. எனவே பயனிலை “சென்றாய்” என்ற முன்னிலை வினையில் அமைந்துள்ளது.


இரண்டாவது வாக்கியத்தில் “நீயும் அவனும்” எழுவாயாக வருவதால் “சென்றீர்கள்” என்ற முன்னிலைப் பன்மையில் வசனம் நிறைவுறுகிறது.

 இவ்வாக்கியத்தில் “அவனும்” என்பதைவிட “நீயும்” என்பதே எழுவாய்க்குள் சிறப்பிடம் பெறுகிறது. எனவேதான் வாக்கியம் முன்னிலையில் அமைகிறது.



“உன்னுடன் அவன் வந்தான்.” என்ற வாக்கியத்தின் எழுவாயாக “அவன்” என்பதே வருவதால் வசனமும் படர்க்கை வினைமுற்றான “வந்தான் என்பதில் நிறைவாகிறது.


இந்த நுணுக்கங்களில் சற்றுக் கவனம் செலுத்தினால் இடவழு நேராத வாக்கியங்களை அமைப்பதில் மயக்கங்கள் உண்டாகா.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5