இலக்கணம் அறிவோம். தொடரியல் 3 (3).

இலக்கணம் அறிவோம்.
தொடரியல் 3 (3).


உவமைத் தொடர்களும் அவற்றை வாக்கியங்களிற் பயன்படுத்தும் வகையும்.


நம்முன்னோர் மரபுச்சொற்றொடரைப் பயன்படுத்தித் தமது பேச்சுவன்மையையம் எழுத்துவன்மையையும் மேம்படச் செய்தமை போன்றே உவமைத் தொடர்களையும் பொருத்தமான இடங்களிற் பயன்படுத்தித் தாம் சொல்லவந்த கருத்துகளுக்கு வலுவூட்டினர்.


மரபுத்தொடரைப் பொறுத்தமட்டில் அத்தொடரிற் கையாளப்படும் சொற்களின் நேர்க்கருத்துகள் தொடரின் கருத்தாக அமையா என்பது ஏற்கனவே அறிந்தவிடயம். அத்தொடரின் பொருள் மரபுவழியாகப் பேணப்பட்டு வருவதால் அதில் மாற்றம் செய்யும் உரிமையும் எமக்கு இல்லை. இதனால் மரபுச்சொற்றொடர்களை நாம் புதிதாக ஆக்கிவிடவும் முடியாது என்பது வெள்ளிடைமலை.


ஆனால் உவமைச் சொற்றொடர்கள் அவ்வாறல்ல. அவற்றின் கருத்துகள் தெளிவானவை. நாம் சொல்லவரும் கருத்துக்கு ஏற்ற உவமானங்களாக அவை செயற்படுபவை. “ஏற்கனவே நடந்த சம்பவம்போல் நாம் சொல்லவரும் சம்பவமும் அமைகிறது.” என்ற எண்ணத்தை வலியுறுத்தும் வகையிலமைபவை. எனவே, உவமைச் சொற்றொடர்கள் புதிதாகத்; தோன்றுதற்குச் சந்தர்ப்பங்களுள.


“காகம் இருக்கப் பனம்பழம் விழுந்ததுபோல” என்ற உவமைச் சொற்றொடரை எடுத்துக் கொள்வோம். இது ஏதோ ஒருநாள் தற்செயலாக நடந்த நிகழ்வாக இருக்கலாம். பழங்கள் நிறைந்த பனையொன்றில் காகம் வந்து அமர்;கின்ற அதே கணத்தில், பழமொன்று இயல்பாக மரத்தினின்று நீங்கிவிட,  அந்நிகழ்வு காகம் இருந்ததனாற்றான் இடம்பெற்றது எனக் கொள்வது சரியன்று என்பதைக் காட்டவே இச்சொற்றொடர் தோன்றிற்று எனலாம்.


“வேலியே பயிரை மேய்ந்தாற் போல” என்ற சொற்றொடரை நோக்கினால்.  வேலியிடுவது பயிரின் பாதுகாப்புக்கே என்றிருக்க பாதுகாப்புக் கடமையைச் செய்யவேண்டிய வேலியே பயிரை யழிக்க விழைந்தால் யாரை நம்புவது என்பதுடன்,  பயிரின் ஆபத்தான நிலையையும் வெளிப்படுத்துகிறது. எனவே தீங்குவராமற் காக்க வேண்டிய கடமைக்குப் பொறுப்பானவரே பாதுகாக்கப்படவேண்டிய பொருளுக்கு அல்லது உயிருக்குத் தீங்கு செய்ய முனையும்போது, அதை விளக்க இச்சொற்றொடர் பயன்படுகிறது.


புகழ்பெற்ற பெண்பிரதமர் ஒருவர் தன் பாதுகாப்பு அதிகாரிகளாலேயே சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் “வேலியே பயிரை மேய்ந்தாற்போல” என்ற உவமைச் சொற்றொடருக்குச் சிறந்த உதாரணமாகும்.


இதனை வாக்கியத்தில் அமைக்குமிடத்து,  “பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகளே தங்கடமையினின்றுந் தவறி ‘வேலியே பயிரை மேய்ந்தாற்போல’ நடந்து கொண்டதால் துணிச்சலான பிரதமரை நாடு இழந்தது.” என எழுத இடமுண்டு.


“நாடு பிரதமரைப் பறிகொடுத்தது:  பயிரை மேய்ந்த வேலியானார்கள் பாதுகாப்பு அதிகாரிகள்” எனச் செய்தித் தலைப்பும் அமைக்கலாம்.


சில சொற்றொடர்களையும் அவற்றை வசனங்களிற் பயன்படுத்தும் முறைகளையும் பார்ப்போம்:

அணிலை ஏறவிட்ட நாய்போல.

தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணியைச் செவ்வனே நிறைவேற்றாமல் ‘அணிலை ஏறவிட்ட நாய்போல’ அவன் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தான்.
 

அம்பு பட்ட மான்போல.

 தன் கணவனின் கடுஞ்சொல்லைத் தாங்கமாட்டாத மனைவி ‘ அம்புபட்ட மான்போல’ துடித்துப் போனாள்.


அறுத்தகோழி துடிக்குமாப்போல.

களத்திற் புதல்வன் வீழ்ந்தான் என்ற செய்தி கேட்டதாய் ‘அறுத்தகோழி துடிக்குமாப்போலத்’ தவித்தாள்.


இலவுகாத்த கிளிபோல.

இன்று கிடைக்கும்: நாளை கிடைக்கும் என்று காத்திருந்தவன் தன் எதிர்பார்பபு நிறைவேறாததால் ‘இலவுகாத்த கிளிபோல’ ஏமாற்றமடைந்தான்.


உள்ளங்கை நெல்லிக்கனிபோல.

அவன் கூறியவை ‘உள்ளங்கை நெல்லிக்கனிபோலத்’ தெளிவாயிருந்தும் அவற்றை நம்ப மறுப்பது ஏற்கத் தக்கதன்று.



ஊமைகண்ட கனாப்போல.

பல ஏழைகளின் நியாயமான ஆசைகள்கூட ‘ஊமைகண்ட கனாப்போலப்’ பிறரறியாமல் மறைந்தே போய்விடுகின்றன.



எருமைமாட்டின்மேல் மழைபெய்தாற்போல.

திருந்துவதில்லை என்று முடிவெடுத்த சிலரை ஊரார் எவ்வளவுதான திட்டினாலும் அவையெல்லாம் ‘எருமைமாட்டின்மேல் மழைபெய்தாற்போலப்’ பயனற்றுப் போய்விடுகின்றன.



ஒருநாள்கூத்துக்கு மீசையைச் சிரைத்தாற்போல.

சிறுகச்சிறுகச் சேமித்தவற்றை ஒருநாள் வீண்களியாட்டத்துக்காகச் செலவிடுவதென்பது ‘ஒருநாள்கூத்துக்கு மீசையைச் சிரைத்தாற்போன்ற’ மடைமை என்பதில் சந்தேகம் கொள்ளலாகாது.



கல்லிலே நார் உரித்தாற்போல.

கஞ்சப்பிரபு ஏழைகளுக்கு உதவுவார் என்ற எதிர்பார்ப்பு ‘கல்லிலே நாருரித்தாற் போன்ற’ கற்பனையாகவே முடியும்.



கிணற்றுத் தவளைபோல

ஊருடன் இணைந்துவாழ மறுப்போமாயின் நாளடைவில் நாமும் ‘கிணற்றுத் தவளைகள் போலாகி’ விடுவோம்.



குடத்துள் இட்ட விளக்குப்போல.

பல மனிதர்களது திறமைகள் ‘குடத்துள் இட்ட விளக்குப்போலப்’ பிறரறியாமலேயே போய்விடுகின்றன.



சிலையில் எழுத்துப்போல.

சிறுவயதிற் பெறுகின்ற கல்வியும் அனுபவங்களும் ‘சிலையில் எழுத்துப்போல’ பிள்ளைகள் மனங்களிற் பதிந்து விடுகின்றன.



சூரியனைக் கண்ட பனிபோல.

துணிவுடையான்முன் தோன்றுந்துன்பங்கள் ‘சூரியனைக்கண்ட பனிபோலத்’ தாமாகவே விலகிவிடுகின்றன.



பசுமரத்தாணிபோல.

பெரியோரின் வார்த்தைகள் குழந்தைகளின் மனதிற் ‘பசுமரத்தாணிபோற்’ பதிந்து விடுகின்றன.


பாம்புக்குப் பால்வார்த்தாற் போல.

 தியோருக்குச் செய்கின்ற உதவிகள் ‘பாம்புக்குப்பால் வார்த்தாற்போன்று’ பயனற்றுப் போவதுடன் உதவியோருக்கும் கேடாய் முடியுலாம்


வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோல.

சில மனிதர்கள் புத்திசாதுரியத்தால் ‘வாழைப்பழத்தில் ஊசிஏற்றுவதுபோல்’ எவ்வித சிரமமுமின்றித் தாம் நினைத்த காரியத்தைச் சாதித்து விடுவார்கள்.



இவற்றைப்போல இன்னும் நூற்றுக்கணக்கான உவமைச் சொற்றொடர்கள் தமிழிற் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றை அறிந்து உரியமுறையில் பயன்படுத்துவது தமிழ்மாணாக்கரின் கடமை.


தாய்த்தமிழைப் பிழையறவும் கருத்துச்செறிவுடையதாகவும் கையாளத்தக்க பிள்ளைகளே தமிழன்னையின் அன்புக்குரியோராவர்.



நிறைவுக் குறிப்பு.

“இலக்கணம் அறிவோம்” என்ற இந்நெடுந்தொடரைப் பொறுமையடன் வாசித்துப் பயனடைந்தோருக்கும் கருத்துரைகள் பகன்றோருக்கும் ஊக்கந் தந்தோருக்கும் பணிவுநிறைந்த நன்றிகள்.


கந்தவனம் கோணேஸ்வரன்.






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5