தமிழ் இலக்கணம் அறிவோம். தொடரியல் 3 (1)

தமிழ் இலக்கணம் அறிவோம்.
தொடரியல் 3 (1)


நீளமான வசனங்களை ஆக்குதல்.

நாம் அமைக்கும் வாக்கியங்கள் சிறியவையாக இருப்பின் பிழைகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவாகவே காணப்படும். ஆனால் அவற்றை நெடிய அல்லது நீண்ட வசனங்களாக அமைக்க முயலுமிடத்துச் சரியாக அக்கறை எடுக்காவிட்டால் எம்மை அறியாமலே பலவித வழுக்கள் அவ்வசனத்திற் கலந்துவிடும் சந்தர்ப்பங்கள் உள. எனவே நாம் நீண்ட வசனங்களை அமைக்கும்போது கவனமாக இலக்கண விதிகளை அனுசரித்தல் வேண்டும்.


சிறிய வாக்கியங்கள்;.

நான் வந்தேன்.
தம்பி வந்தான்
தங்கை வந்தாள்.

இவை மூன்றுந் தனித்தனி வாக்கியங்களாகின்றன. இவை ஒன்றோடொன்று தொடர்பற்றன. கால விடயத்தைப் பொறுத்த அளவில் “நான் இன்று வந்தேன்.” “தம்பி நேற்று வந்தான்.” “தங்கை முந்தையதினத்தில் வந்தாள்.” என்று கூறினும் பொருந்தும்.
காரண விடயத்தைப் பொறுத்தமட்டில்,  “நான் படிக்க வந்தேன்.” “தம்பி விளையாட வந்தான்.” “தங்கை ஊஞ்சலாட வந்தாள்.” என்று வேறுபடக் கூறினும் ஏற்கத்தக்கனவாக அமையும்.

ஆனால், இவற்றை ஒரே வாக்கியமாக அமைக்கும்போது காலத்தையும் காரணத்தையும் தெளிவாகச் சொன்னாலன்றி வேறுபாடுகள் தோன்ற இடமிருக்கா.

மேற்கண்ட வசனங்களை நாம் ஒரே வசனமாகக் கொண்டுவரும்போது, “ நானும் தம்பியும் தங்கையும் வந்தோம்.” என எழுத முடிகிறது. பொருள் விரித்துச் சொன்னாலன்றி இவ்வசனத்தின்படி காலமும் காரணமும் ஏறத்தாழ ஒன்றாகவே அமைந்துவிடும்.

வசன இணைப்பின்போது நானும்,  தம்பியும்,  தங்கையும் என “உம்” எனும் இடைச்சொல்லால் மூவரும் இணைக்கப்பட்டிருத்தல் நோக்கத்தக்கது. அத்துடன் பயனிலையானது “நான்” எனும் தன்மைச்சொல் (நானும்,  தம்பியும்,  தங்கையும்) எழுவாய்க்குள் வந்ததனால் வாக்கியம் தன்மைப் பன்மையில் நிறைவுபெறுகிறது.

“வந்தேன்.” “வந்தான்.” “வந்தாள்.” என்று தனித்தனியாகப் பால்காட்டி,  தன்மை,  முன்னிலை, படர்க்கை என இடம்காட்டித் திணையும் காட்டி ஒருமையில் அமைந்த பயனிலையானது வசனங்கள் இணைக்கப்படுகையில். தன்மைப் பன்மையில் நிறைவுறவதும் இங்கு கவனிக்கத்தக்கது.



இவ்வசனத்தைப் பொருள் பெரிதும் மாறுபடாமற் பின்வரும் முறைகளிலும் அமைக்கலாம்.


“நான் தம்பியோடும் தங்கையோடும் வந்தேன்.”

“நான்,  தம்பி தங்கையுடன் வந்தேன்.”

“தம்பி,  என்னோடும் தங்கையோடும் வந்தான்.”

“தங்கை,  என்னோடும் தம்பியோடும் வந்தாள்.”

“தம்பியும் தங்கையும் என்னுடன் வந்தனர்.”

“நான்,  தம்பி,  தங்கை ஆகிய மூவரும் வந்தோம்.”

இவ்வாக்கியங்களில் எழுவாய்கள் மாற்றமுறுவதையும் அவற்றுக்கிசைவாகப் பயனிலையாக வருகின்ற வினைமுற்றுகள் தம்மை மாற்றிக் கொள்வதையம் காணலாம்.

இவ்வசனங்களில் “ஓடு, உடன், உம்” என்பன இடைச்சொற்களாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.



“ஆயினும்” என்ற இடைச்சொல்லைப் பயன்படுத்துவதன்மூலம் இவற்றை வேறுவகையிலும் வேறு பொருள்படவும் இணைக்கலாம்.


“தங்கை காலையிலேயே வந்தாளாயினும் நானும் தம்பியும் இப்போதுதான் வந்தோம்.”

“தம்பியும் நானும் நேரத்துக்கு வந்தோமாயினும் தங்கை பிந்தியே வந்தாள்.”

“தங்கையும் தம்பியும் நிகழ்வில் கலந்து கொண்டார்களாயினும் அந்நிகழ்வுக்கு என்னால் வரமுடீயவில்லை.”

“நான் விழாவுக்கு வரவிருந்தேனாயினும் தங்கையும் தம்பியும் அங்கே வரவிரும்பவில்லை.”

“தம்பி வருவானாயின் அவ்விடத்துக்கு நான் வரமாட்டேன்.”

“அவன் சொன்னானாயின் நிச்சயம் செய்வான்.”

“நேற்று,  நான் விழாவுக்கும்,  தம்பி பாடசாலைக்கும், தங்கை கோயிலுக்கும் சென்றிருந்தோம்.”

மேற்கண்ட வசனங்கள்போன்று மேலும்பலவிதமான கருத்துகளுடனமைந்த வாக்கியங்களை “ஆயினும் அல்லது ஆயின்” ஆகிய இடைச்சொற்களைச் சரியானவகையில் கையாளுவதன்மூலம் அமைத்துக் கொள்ளலாம்.


இதேபோல் “எனினும்” என்ற இடைச்சொல்லும் பலவித கருத்துகள் வரப் பயன்படுத்தப்படுகிறது.


“நான் அவ்விடத்துக்கு வரவில்லையெனினும் தம்பி வந்திருந்தான்.”

“தம்பி உங்களைச் சந்திப்பானெனினும் நானும் சேர்ந்து வருவது கூடிய பலனைத் தரும்.”

“அவன் வருவதாக வாக்களித்திருந்தா னெனினும் தான் சொன்னதுபோல் நடக்கத் தவறிவிட்டான்.”


இவ்வாறே. “ஆ,  ஓ, அல்லது,  இல்லையாயின்,  ஆவது,  ஆனால், ஆகவே ” ஆகிய இடைச்சொற்களும் வசன இணைப்புகளுக்குப் பெரிதும் துணைநிற்கின்றன. வசன அமைப்புகளைக் கவனிப்பதன்மூலம் சிறந்த நெடிய வசனங்கள் ஆக்குந்திறனை வளர்த்துக் கொள்ளலாம்.







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5