இடுகைகள்

நவம்பர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உழவுக்குக் கைகொடு.

உழவுக்குக் கைகொடு.  (நிலாமுற்றக் கவிதை) உழவுத் தொழிலை வந்தனை செய்தால்  உலகம் செழிக்கும் புரிஞ்சுக்கோ மழலை போலே விளையும் பயிரை  மனதால் அணைக்கத் தெரிஞ்சுக்கோ கழனி விதைத்துக் கண்ணெனக் காத்துக்  கதிரை அறுத்து வருமட்டும் உழவன் பாட்டை எண்ணிப் பார்த்தால்  உழவுக்குக் கைகொடு என்போமே. ஆடல் பாடல் அனைத்தும் நிற்கும்  உழவன் சோறிட மறுத்தால் கூடல் குலவல் எல்லாம் நீங்கும்  கழனிகள் விளைந்திடா திருந்தால் தேடல் எல்லாம் உணவின் பின்பே  என்பதை அனைவரும் உணர்ந்தால் ஓடிச் சென்று உழவுக்குக் கைகொடு  என்போர் உலகில் உயர்ந்தோரே. கந்தவனம் கோணேஸ்வரன். 12.11.2019

மூக்குக் கண்ணாடி.

மூக்குக் கண்ணாடி. வேண்டும் ஒரு மூக்குக் கண்ணாடி மகனிடம் கேட்டேன் சம்பளம் வரட்டும் பார்க்கலாம் என்றான் சம்பளத்தை அவன் பார்ப்பான் மூக்குக் கண்ணாடியை நான் பார்ப்பேனா? மகளிடம் கேட்டேன் இப்போதைக்கு என்ன அவசரம்…..? ஒரே பேச்சில் மூக்கு – கண்ணாடியாய் நொருங்கியது. மனைவியிடம் வாய்விட்டேன் கிழவனுக்கு ஆசையைப் பார்.. கீரைபோல் உடைத்துப் பொட்டாள் மனதை. பேர்த்தியிடம் மனம் விட்டேன் வாய்விட்டுச் சிரித்தாள் கண்ணாடியுடன் தாத்தா அழகாக இருப்பார்….. பிஞ்சுவாயால் சொன்னாள் “உன் பேர்த்தியின் கண்கள் கவிதை பேசுகின்றன: அடடா அடடா.” வீட்டுக்க வந்த கவிஞன் -- கண்ணாடி நண்பன் பெருமிதமாய்ச சொன்னானே…. ஆந்த அழகைத் துல்லியமாய் அள்ளிப்பருக அந்த விழியில் வழியும் மொழியை ரசிக்க எனக்கு யார் தருவார் மூக்குக் கண்ணடி? கந்தவனம் கோணேஸ்வரன். வீரகேசரி வாரவெளியீடு 24.10.2004

ஜனாதிபதித் தேர்தலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும்.

ஜனாதிபதித் தேர்தலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும்.              --கந்தவனம் கோணேஸ்வரன்-- ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. எல்லாக் கட்சிகளும் ஏதோ ஒரு முடிவை எடுத்தாயிற்று. தேர்தலில் நிற்க முடிந்தவர்கள் நிற்க ஏனையோர் யாரை ஆதரிப்பது என்பதுபற்றியும்ää தேர்தலைப் புறக்கணிப்பது பற்றியும் தத்தம் முடிவை மக்கள்மத்தியில் முன்வைத்து விட்டார்கள். வடபகுதியின் முன்னாள் முதலமைச்சர் விரும்பியவர்களை ஆதரிக்கலாம் என்றும் விட்டு விட்டார். இந்த முடிவுகளை யாரும் பிழைசொல்ல முடியாது. அவரவர்கள் தங்கள் இயல்புக்கேற்பவும் தம்இருப்பைத் தக்கவைக்கவும்ää எதிர்கால அரசியல்குறித்தும் எடுக்கப்பட்ட முடிவுகள் அவை. இவர்களது முடிவுகளைக் கேட்டு நடப்பதும் புறக்கணிப்பதும் தமிழ்மக்களின் விருப்பம். தமிழர்கள் மத்தியில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, கிழக்கில் மட்டுமுள்ள சில கட்சிகள் என்பவை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபாய வெற்றிபெற வேண்டுமென விரும்புகின்றன. அவரது வெற்றிக்காகவும் களத்தில் நின்று உழைக்கின்றன. இலங்கைத் தமிழரசுக் கட்சியும் அது சா...

எங்கள் திருக்கோணமலை 20

எங்கள் திருக்கோணமலை 20 செந்நெல் விளைந்திருக்க  செங்கருப்பஞ் சாறிருக்க என்ன குறையெமக்கு  எனத்தமிழர் வாழ்ந்தமண் வண்ணமிகு ஊர்நடுவே  வளமார்ந்த தமிழ்காக்க என்னப்பன் கோணேசர்  அமர்ந்திருக்கும் தமிழர்மண். ஊரெல்லாம் வயற்காடு  உறவெல்லாம் செழிப்போடு ஏரோசை தினம்முழங்கும்  எங்களுயிர்த் தாயகமண் சீரான வாழ்வியலும்  சிவநெறியும் நடைமுறையும் ஊரோடு சேர்ந்தியங்கும்  ஓற்றுமையை வளர்த்தமண். பாவலர்வாய்ப் பைந்தமிழும்  பல்துறைதேர் கலைஞர்களும் மேவியுயர்ந் தோங்கிநிற்கும்  வீரமுடை மறவர்மண் கோவிலொடு மரபுகளும்  குலம்விளங்கும் வழமைகளும் காவியங்கள் எனஇனிக்கும்  கனிதம்பல கமத்துமண். கந்தவனம் கோணேஸ்வரன். 08.11.2019

தொண்டர் இ. சண்முகராசா.

தொண்டர் இ. சண்முகராசா. --கந்தவனம் கோணேஸ்வரன்-- தொண்டரை வயதில் இளையவர்கள் தொண்டர் ஐயா என்றே அழைப்பார்கள். அவரினும் வயது கூடியோர் அவரைத் தொண்டர் என்று கண்ணியத்துடன் விளிப்பார்கள். ஆனால் அந்தத் துறவியோ தன்னைத் “தொண்டன்” என்றே அறிமுகப்படுத்திக் கொள்வார். பெயரில் மாத்திரமல்ல நடைமுறையிலும் பணிவைக் கைக்கொள்பவர் அவர். தன்னிலும் வயது கூடியோரிடம் தொண்டர் பணிவாகப் பேசுவதில் வல்லவர். பெரியார்கள்முன் பேசும்போது வாய்புதைத்து நின்று பேசும் பழக்கம் அவருக்கே சிறப்பானது. ஆனால் சிறுவர்கள் விடயத்தில் அவர் எப்போதும் கடினமாகவே நடந்து கொள்வார். எந்தச் சிறுவனும் அவரிடம் நல்லபிள்ளை என்ற பெயர் எடுக்கவே முடியாது. அந்த அளவுக்கு இறுக்கமானவர். அந்த இறுக்கமும் கண்டிப்பும் பெறுமதிமிக்கவை என்பதைப் பிற்காலத்தில்தான் உணரமுடிந்தது. அவரின் கண்டிப்புக்கும் கண்காணிப்புக்கும் உள்ளான சிறுவர்கள் இன்றைய சமுதாயத்தில் மதிப்புமிக்க பெரியவர்களாக வலம்வருவது கண்கூடு. தொண்டர் ஐயாவின் பிறப்பிடம் திருக்கோணமலை முத்துக்குமாரசுவாமி ஆலயச் சுற்றாடல்தான். தந்தையார் பெயர் இளையதம்பி. தாயார் பெயர் அழகம்மா. ஒரேயொரு தங்கை: பெயர் யோகம்...

தெரிவுக்குழுக்கள்.

தெரிவுக்குழுக்கள். இந்த நாட்டின்…. பொழுதுபோக்குச்சாதனங்கள் திரைப்படம் வானொலி தொலைக்காட்சி மட்டுமல்ல தெரிவுக் குழுக்களும் தான். திரையரங்கில்…. மூன்று மணிநேரத்தைக் கழித்தவன் ரசிகன் தெரிவுக் குழுவில் முந்நூறு நாட்களைக் கழிப்பவன் தலைவன். ரசிகன்…. ஏமாற்றப் படவுங் கூடும் ஆனால் தலைவன்.. ஏமாற்ற ஏமாற்ற ஆதரவு கூடும். பிரச்சினைகள்…. அவை இப்போது பிரச்சினை யல்ல இப்போதைய பிரச்சினை… தெரிவுக் குழுக்களும் அவற்றின் புதிய உத்திகளும்தான். கந்தவனம் கோணேஸ்வரன் 06.09.1993

தெய்வமாய் உறைவான்.

தெய்வமாய் உறைவான். நிகழ்போழ்தில் இறந்தேனும் சமூகத்தை உயர்த்தியோன்  எதிர்கால வாழ்வுக்கு இலக்காவான் புகழ்போதை புரட்டலில் பெருமிதங் கண்டவன்  புழுப்போலே அக்கணமே சாவான். சரியான வார்த்தையைச் சொல்கின்ற அறிஞன்  சரித்திரம் கடந்துமே நிற்பான் மரியாதை மாலைக்காய் மனச்சாட்சி அழிப்பவன்  மண்ணோடு மண்ணாகிப் போவான். அதிகாரம் இருக்கையில் அனைவருக்கு மானவன்  அவனியில் என்றுமே உயர்வான் சதிகாரன் சுயநலமி தற்பெருமை மிக்கோன்  சாத்தானின் வழியேகிப் போவான். இனிதான வாக்கியன் இன்முகன் செயல்வலன்  என்றுமே மக்களில் நிறைவான் மனிதாபி மானமும் மகிழ்ச்சியும் கொண்டவன்  மனங்களில் தெய்வமாய் உறைவான். கந்தவனம் கோணேஸ்வரன். 26.08.1996