தொண்டர் இ. சண்முகராசா.

தொண்டர் இ. சண்முகராசா.


--கந்தவனம் கோணேஸ்வரன்--


தொண்டரை வயதில் இளையவர்கள் தொண்டர் ஐயா என்றே அழைப்பார்கள். அவரினும் வயது கூடியோர் அவரைத் தொண்டர் என்று கண்ணியத்துடன் விளிப்பார்கள். ஆனால் அந்தத் துறவியோ தன்னைத் “தொண்டன்” என்றே அறிமுகப்படுத்திக் கொள்வார்.
பெயரில் மாத்திரமல்ல நடைமுறையிலும் பணிவைக் கைக்கொள்பவர் அவர். தன்னிலும் வயது கூடியோரிடம் தொண்டர் பணிவாகப் பேசுவதில் வல்லவர். பெரியார்கள்முன் பேசும்போது வாய்புதைத்து நின்று பேசும் பழக்கம் அவருக்கே சிறப்பானது. ஆனால் சிறுவர்கள் விடயத்தில் அவர் எப்போதும் கடினமாகவே நடந்து கொள்வார். எந்தச் சிறுவனும் அவரிடம் நல்லபிள்ளை என்ற பெயர் எடுக்கவே முடியாது. அந்த அளவுக்கு இறுக்கமானவர்.


அந்த இறுக்கமும் கண்டிப்பும் பெறுமதிமிக்கவை என்பதைப் பிற்காலத்தில்தான் உணரமுடிந்தது. அவரின் கண்டிப்புக்கும் கண்காணிப்புக்கும் உள்ளான சிறுவர்கள் இன்றைய சமுதாயத்தில் மதிப்புமிக்க பெரியவர்களாக வலம்வருவது கண்கூடு.


தொண்டர் ஐயாவின் பிறப்பிடம் திருக்கோணமலை முத்துக்குமாரசுவாமி ஆலயச் சுற்றாடல்தான். தந்தையார் பெயர் இளையதம்பி. தாயார் பெயர் அழகம்மா. ஒரேயொரு தங்கை: பெயர் யோகம்மா. இளவயதிலேயே துறவு பூண்டவர். அவரோடொத்த இளைஞர்களிலிருந்து வேறுபட்டவராகவே இவர் காணப்பட்டார். பெண்களைத் தெய்வமெனக் கொள்வதும் சிவநாமமே தஞ்சமென வாழ்வதும் இவருக்கு இளவயதிலேயே இயல்பாயின.


திருவண்ணாமலையானை அடிக்கடி உச்சரிக்கும் தொண்டர் ஐயா தவத்திரு குன்றக்குடி அடிகளாரைத் தம் குருவாகக் கொண்டிருந்தார். முத்துக்குமரனின் திருநாமமும் தொண்டர் ஐயாவின் நாவிலே அண்ணாமலையான் நாமத்துக்குக் குறைவில்லாமற் புரளும்.


முத்துக்குமாரசுவாமி கோவில் அவரது சரியைத் தொண்டுக்குக் களமானது. கோயில் வெளிவீதியில் அன்றைய நாட்களில் அமைந்திருந்த திருநந்தவனத்தை நீரூற்றிப் பேணிப் பாதுகாத்து முருகனுக்கு அதிகாலையில் மலர்கள் பறித்துக் கொடுப்பதும், கோயிலை உள்ளும்புறமும் சுத்தமாக வைத்திருப்பதும் அன்னாரின் அன்றாடக் கடமைகளாக இருந்தன. கோயிலில் அவர் நிற்கும்போது பெரியவர்கள்கூடத் தம் உரையாடல்களை நிறுத்தியே வைத்திருப்பர். அந்த அளவுக்கு ஆலயத்தில் அமைதி பேணப்பட வேண்டுமென்பதில் தொண்டா ஐயா அக்கறை காட்டினார்.


கோயில் ஆதீனகர்த்தாவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் ஐயா தொண்டர் ஐயாமேல் பெருமதிப்புக் கொண்டிருந்தார். அவரது மறைவுக்குப்பின் ஆலயத்தைப் பொறுப்பேற்று நடத்திய சிவானந்தம் ஐயாவும் தொண்டர் ஐயாமேல் பேரன்பு கொண்டிருந்தார். இதன் காரணமாக ஆலயக் குருக்கள்கூடத் தொண்டர் ஐயாவின் கருத்தை மதித்து நடக்கும் நிலை காணப்பட்டது. ஆயினும் முருகப்பெருமானுக்குரிய கிருத்தியங்களில் குறை நேர்ந்துவிடக் கூடாதென்பதைத் தவிர வேறெதனையும் ஆலயக் குருக்களிடமிருந்து அவர் எதிர்பார்த்தவரல்லர்.


முத்துக்குமாரசுவாமி ஆலயச் சரவணப்பொய்கைக்கு அருகில் தொண்டர் ஐயாவின் இளைஞர் அருள்நெறி மன்றம் அமைந்திருக்கிறது. அதன் நிறுவனரும் பராமரிப்பாளரும் அவரே. ஆரம்பநாட்களில் இளைஞர் அருள்நெறி மன்றம் மடத்தடி மாரியம்மன் ஆலயவீதியில் இயங்கியது. எனினும் பின்னாளில் அது தொண்டாஐயா பிறந்த இடத்துக்கருகிலேயே நிரந்தரக் கட்டடத்தில் இயங்கத் தொடங்கி விட்டது.


அந்தக் கட்டடத்தில் பாடசாலைப் பிள்ளைகளுக்கு மாலைநேர வகுப்புகள் இடம்பெற்றன. அயலிலுள்ள படித்த இளைஞர்களின் உதவியைப்பெற்று மாணவர்களுக்கு இலவசமாகவே கல்வியை வழங்கினார் தொண்டர் ஐயா. எல்லா வகுப்புகளையும் சேர்ந்த மாணவர்கள் தினமும் பெருவாரியாக வந்து பயனடைந்தனர். இலவசமாகக் கற்பிக்கின்ற இளைஞர்களைத் தொண்டர் ஐயா கண்ணியத்துடன் நடத்தினார். படிக்கவரும் மாணவர்களுக்கும் கற்பிக்கும் ஆசிரிய இளைஞர்களுக்கும் தன் இயல்புக்கேற்பத் தினமும் சிற்றுண்டியும் வழங்கி வந்தார். படிக்கவரும் பிள்ளைகளைத் தொண்டர் ஐயா எப்போதும் மன்றத்துப் பிள்ளைகள் என்றே அன்புடன் விளித்தார்.


அரச பணியாளர்களதும் வங்கிப் பணியாளர்களதும் வகுப்புகள்கூட இளைஞர் அருள்நெறி மன்றக் கட்டடத்தில் நடைபெற்றது. பதவி உயர்வுகளுக்கும் தடைதாண்டு பரீட்சைகளுக்கும் தம்மைத் தயார்படுத்தும் அரசஉத்தியோகத்தர்களும்,  வங்கிப் பணியாளர்களும் மன்றக்கட்டடத்தை இலவசமாகப் பெற்றுத் தங்களைப் பரீட்சைகளுக்குத் தயார்படுத்தி வந்தனர். அத்தகைய வகுப்புகள் நடைபெறும் நேரங்களிலெல்லாம் மன்றத்துக்கருகில் பிள்ளைகள் சத்தமிட்டு விளையாடாதவாறு பாதுகாப்பதே தொண்டர் ஐயாவின் பணியாக இருந்தது.


மன்றத்தில் ஒரு நூலகத்தை ஆரம்பித்தார். அதன் பெயர் குமரகுருபரன் நூலகம். அந்தநாட்களில் திருக்கோணமலைப் பொது நூலகத்திற்கூட இல்லாத அரியபல நூல்களைக் குமரகுருபரன் நூலகம் கொண்டிருந்தது. நூல்களை மிகக் கவனமாகப் பேணிய தொண்டர் ஐயா,  யாராவது புத்தகம் தேடிவந்தால் அவரை வரவேற்று உபசரித்துத் தானே புத்தகத்தை எடுத்துக்கொடுத்து ஆசனமும் கொடுத்து வாசித்து முடிந்ததும் உடனே பெற்றுப் பாதுகாப்பாகப் பூட்டியும் வைத்துவிடுவார். எனினும் சிலர்விடயத்தில் இந்த இறுக்கத்தைத் தளர்த்தியுமுள்ளார்.


ஆண்டுதோறும் மன்றப் பெருவிழா இடம்பெறும். கோவில்வீதி அலங்காரம் செய்யப்பட்டு மேடை போடப்பட்டு மூன்றுநாட்கள் நீடிக்கும் விழாவில் தமிழகப் பேரறிஞர்கள் ஆன்மிக உரையாற்றுவார்கள். மக்கள் பெருந்திரளாக வந்து வீதிமணலில் அமர்ந்து கேட்டிருப்பார்கள். அந்த அரங்குகளுக்குத் தொண்டர் ஐயா “அநபாயசோழன் அரங்கு”, “சேக்கிழார் அரங்கு” என அழகான பெயர்களைச் சூட்டி மக்கள் மனதில் சைவப்பெரியார்களை நிலைநிறுத்துவதில் அவர் வெற்றி கண்டார்.


அவ்விழாக்களின்போது மன்றத்துச் செய்திகளையும் ஆன்மிகத் தகவல்களையும் கொண்ட இலவச வெளியீடுகளை அனைவருக்கும் வழங்கிவைப்பாhர். அவை மன்றத்துச் செய்திகளை மாத்திரமல்லாமல் தொண்டா ஐயாவின் தமிழாற்றலையும் வெளிப்படுத்தி நின்றன. குன்றக்குடி அடிகளாரையும்.  திருமுருக கிருபானந்தவாரியாரையும், பித்துக்குளி முருகதாஸையும் திருக்கோணமலை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்த பெருமை அவரையே சாரும். நாட்டில் குழப்பநிலை தோன்றியபின் இந்நற் காரியங்கள் தடைப்பட்டுப் போயின.


தொண்டர் ஐயா பின்னாளில் கப்பற்துறைக் கிராமத்துக்குச் சென்ற அங்குள்ள மக்களுடன் நெருங்கி;ப் பழகினார்.. ஆங்குள்ள குன்றொன்றில் காளஹஸ்தீஸ்வரர் ஆலயத்தைப் புனருத்தாரணம் செய்து மக்கள் வழிபாட்டுத் தலமாக்கி இறுதிக் காலம்வரை அதனைப் பராமரித்தும் வந்தார்.


தொழில்ரீதியாக அவர் திருக்கோணமலைத் தபால்அலுவலகத்தில் தபாற்சேவகராகப் பணியாற்றினார். நேரந்தவறாமையும் கடமைதவறாமையும் அவரது நிரந்தரப் பண்புகளாக அமைந்திருந்தன. சகபணியாளர்களுடனும் அதிகாரிகளுடனும் அவர் சாதாரண தபாற்சேவகருக்குரிய இயல்புடனேயே பழகுவார். சகபணியாளர்களின் சிறுகுறும்புகளை அவர் சிரித்தமுகத்துடன் ஏற்றுக்கொள்வார். அதிகாரிகளும் தொண்டர்ஐயாவைக்  கண்ணியமாகவே நடத்தினர். எவருடனும் முரண்பாடு கொள்ளாத நல்ல தபாற்சேவகராக அன்னார் தமது ஓய்வுகாலம்வரை நடந்து கொண்டார்.


23.5.1933இல் பிறந்த இளையதம்பி சண்முகராசா தொண்டு என்பதற்கு இலக்கணமாகவே வாழ்ந்து தனது எண்பத்தாறாவது வயதில் 08.10.2019 அன்று (விகாரி வருடம் புரட்டாதி 21ஆம்நாள்) செவ்வாய்க்கிழமை விஜயதசமியும் கௌரிநோன்பாரம்பமும் கூடிவரும் நன்னாளில் திருவோண நட்சத்திர வேளையில் இவ்வுலக வாழ்வை நீத்து இறையடி சேர்ந்தார்.


ஆன்மிகத் துறையில் அவரின் சேவை அளப்பரியது. தமிழுக்கும் சைவத்துக்கும் அரும்பணியாற்றிய சைவப்பெரியாரின் புகழ் நிலைத்திருப்பதாக.

07.11.2019 

   
(தொண்டர்ஐயா மறைந்து ஒருமாத நிறைவையொட்டி இக்கட்டுரை பதிவிடப்படுகிறது)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5