மறுப்பும் துடிப்பும்.
மறுப்பும் துடிப்பும். வயிற்றுக்கு உணவின்றி வாடியழும் ஒருகுழந்தை வயிறேற்று உணவுமிக வாயிறுக்கும் ஒருகுழந்தை. பஞ்சணையில் துயில்கொள்ளும் பாங்காக ஒருகுழந்தை படுத்தற்கும் வீடின்றிப் பாதையிலே ஒருகுழந்தை. அழகழகாய் ஆடையிட்டு அகமகிழும் ஒருகுழந்தை கழுவுதற்கும் ஆடையின்றிக் கவலையுறும் ஒருகுழந்தை. கண்களிலே சிரிப்பும் களிப்புமாய் ஒருகுழந்தை கண்வழியே ஏக்கமுடன் காத்திருக்கும் ஒருகுழந்தை. அன்னைதந்தை சுற்றமென்று அன்போடு ஒருகுழந்தை தன்னையேந்த யாருமின்றித் தவித்துநிற்கும் ஒருகுழந்தை. மண்ணிற் பிறப்பெடுப்போர் மகிழ்வோடு வாழ்வதுதான் எண்ணிற் சரியாகும் என்கிறது நீதிநெறி. எல்லோரும் பிறப்பொப்பர் ஏல்தொழிலால் சிறப்புறுவர் நல்லோர்க்கு உலகுண்டு நவில்கிறது பொய்யில்மறை. இருந்தும் என்னபயன் ஏழைத்தாய் வயிற்றுதித்து வருந்தும் குழந்தைக்கு வகையெதுவும் கண்டிலமே. நல்லோர்கள் சேரவேண்டும் நாட்டுநலம் பெருக்கவேண்டும் எல்லோர்க்கும் எல்லாமும் கிடைக்கவழி வகுக்கவேண்டும். இல்லாமை நீங்கவேண்டும் எவ்வுயிரும் மகிழவேண்டும் பொல்லாத பேதங்கள் போயொழிந்து சாகவேண்டும். கந்தவனம் கோணேஸ்வரன். 01.06.2020...