இலக்கியத்துளி 17

இலக்கியத்துளி 17


மணிமேகலை ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்று. கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மணிமேகலையின் துறவுபற்றிப் பேசுவதால் இதற்கு ‘மணிமேகலை துறவு’ என்ற பெயரும் உண்டு. விழாவறைகாதை தொடக்கம் நோற்றகாதை யீறாக முப்பது காதைகளைக் கொண்டது இந்நூல். இவ்வரிய காப்பியத்தை இயற்றியவர் மதுரையைச் சேர்ந்த கூலவாணிகனான சீத்தலைச் சாத்தனார்.


இக்காப்பியத்தில் ஒர் சுவையான காட்சி:


ஆதிரை என்பாள் கற்புடைப்பெண். மணிமேகலை பெற்ற அமுதசுரபியில் முதற்றடவையாக அன்னமிடும் சிறப்புப் பெற்றவள் இவள். இவளது கணவன் சாதுவன்.


பொருள்வயிற் பிரிந்த சாதுவன் கடல்மேல் சென்றுகொண்டிருக்கையில் மரக்கலம் அலையின் சீற்றத்தாற் சிதறிவிட மரத்துண்டொன்றைத் துணையாகப்பற்றிக் கடலலையின் உந்துதலால் ஆடையணியும் வழக்கமற்ற மலைவாழ் மக்களான நாகர் குலத்தவரின் இடம் சேர்கிறான்.
அலைச்சலின் சோர்வும் பசிக்களையும் அவனைப் பற்றிக்கொண்டதால் கரையில் அப்படியே உறங்கிவிடுகிறான்.

அவனைக்கண்ட மலைவாழ்நாகர்கள் தம் தலைவனிடம் கொண்டு சேர்க்கிறார்கள். மனிதர்களை உண்ணும் பழக்கமுடைய அவர்களின் மொழியை ஏற்கனவே சாதுவன் அறிந்திருந்ததால் அவர்களுடனும் தலைவனுடனும் இனிமையாகப் பேசி அவர்களை வசியப்படுத்தி விடுகிறான்.


“ஆங்கவள் கணவனும் அலைநீர் அடைகரை
 ஓங்குயர் பிறங்கல் ஒருமர நீழல்
 மஞ்சுடை மால்கடல் உழந்த நோய்கூர்ந்து
 துஞ்சுதுயில் கொள்ளவச் சூர்மலை வாழும்
 நக்க சாரணர் நயமிலர் தோன்றிப்
 பக்கம் சேர்த்துப் பரிபுலம் பினனிவன்
 தானே தமியன் வந்தனன் அளியன்
 ஊனுடை இவ்வுடம்பு உணவென்று எழுப்பலும்
 மற்றவர் பாடை மயக்கறு மரபின்
 கற்றனன் ஆதலின் கடுந்தொழில் மாக்கள்
 கற்று நீங்கித் தொழுது உரையாடி……”



ஆதிரையின் கணவனான சாதுவன் மேகந்தழுவிய மாபெருங் கடலால் அலைக்கழிக்கப்பட்ட சோர்வு காரணமாக நாகர் கரையில் ஓங்கியுயர்ந்த மரநிழலி;டைக் கண்ணுறங்கினான். அவன் பக்கலில் வந்த நாகரினத்தவர் சிலர்,  “இவன் தன்னந்தனியனாக இங்கு சேர்ந்திருக்கிறான். இனிமைதரு உடம்பினன். நமக்கு நல்ல உணவாவான்.” என்று தமக்குள் உரையாடியபடியே அவனை எழுப்ப,  நாகர் மொழியறிந்த சாதுவன் அவர்களுடன் இனிமையாக உரையாடவும்,  அவர்கள் அவனில் மகிழ்ந்து தீங்குசெய்யாது உரையாடினர். பின்னர் அவனுடன் தம் தலைவனின் இருப்பிடம் சேர்ந்தனர்.



ஆங்கு, தலைவன் கரடியொன்று தன் பெட்டையுடன் இருந்தாற்போல தலைவியுடன் அமர்ந்திருக்கின்றான். இந்தக் காட்சியைச் சாத்தனார் பின்வருமாறு கூறுகிறார்.


“கள்ளடுங் குழிசியும் கழிமுடை நாற்றமும்
 வெள்என்பு உணங்கலும் விரவிய இருக்கையில்
 எண்குதன் பிணவோடு இருந்தது போலப்
 பெண்டுடன் இருந்த பெற்றி …..”

கள்நிறைந்த பானையும்,  முடைநாற்றமுடைய புலாலும்,  காய்ந்த வெள்எலும்புகளுமாக விரவிக்கிடந்த இருக்கையில் எண்கு (கரடி) தன் பிணவோடு அமர்ந்திருந்தாற்போல நாகர்தலைவன் இருந்தநிலையில் ….

வுந்த காரணம்பற்றிச் சாதுவனிடம் வினவ மொழியறிந்த சாதுவன் தன்னிலையை நேர்த்தியாக எடுத்தியம்புகிறான். அவன் பேச்சால் மயங்கிய தலைவன்,


“அருந்துதல் இன்றி அலைகடல் உழந்தோன்
 வருந்தினன் அளியன் வம்மின் மக்காள்
 நம்பிக்கு இளையள்ஓர் நங்கையைக் கொடுத்து
 வெங்களும் ஊனும் வேண்டுவன கொடும்..” எனக்கூறுகிறான்.



அலைகடலில் இன்னற்பட்டு வருந்தியவன் இவன். மக்களே இவனுக்கு அழகிய இளமங்கையையும் வேண்டிய கள்ளும் ஊனும் கொடுங்கள் எனப் பணிக்கிறான்


அது கேட்ட சாதுவன் அவற்றை மறுக்க,

“பெண்டிரும் உண்டியும் இன்றுஎனின் மாக்கட்கு
 உண்டோ ஞாலத்து உறுபயன்.. உண்டெனின்
 காண்குவம் யாங்களும் காட்டுவா யாகவென…”



“பெண்களும் ஊனும் இல்லையெனில் உலகத்தில் மனிதர்களுக்கு வேறுபயனும் உண்டோ,  அவ்வாறிருக்குமாயின் நாங்களும் அறிந்துகொள்ள அவற்றைக் காட்டுவாயாக.” எனத் தலைவன் சினத்துடன் கேட்டலும் சாதுவன் அவர்களுக்கு அறநெறிகளை எடுத்தியம்பிச் சிறிதுகாலம் அவர்களோடிருந்து சந்திரதத்தன் என்பானின் வாணிகக் கப்பல் அவ்விடஞ்சேர அவர்தம் துணையுடன் தன் மனையாள் ஆதிரையைச் சேர்கிறான் .


சாதுவன் கரையொதுங்கலும், நாகர்குலத்தவர் அவனைக் காணலும்,  அவன் நாகர்குலத் தலைவனைச் சேரலும்,  தலைவன் தோற்றமும்,  மதுவும் மாதும் ஊனுமில்லையேல் வாழ்வின் பயன்வேறுண்டோ எனத் தலைவன் வெகுளலும்,  அதற்குப் பொறுமையுடன் சாதுவன் பதிலிறுத்து அவர்களை நல்வழிப்படுத்தித் தன் இருப்பிடம் மீளலும் மணிமேகலை தரும் இனிமையான இலக்கியக் காட்சிகள்.


இவ்விடங்களில் மதுரைக் கூலவாணிகச் சாத்தனாரின் கவித்திறன் உள்ளுங்தோறும் தரும் சிறப்புத் தருமியல்புடைத்து. இது தமிழுக்கும் தமிழறிந்த அறிஞருக்கும் கிடைத்த பெரும்பேறு.


கந்தவனம் கோணேஸ்வரன் 

 04.06.2020

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5