கவிதை.
கவிதை. நெஞ்சில் தோன்றும் எண்ணங்களை ஒரு நிரையில் நிறுத்தி வைத்து – வெண் மஞ்சிற் தோய்த்துத் தேனிற் பிசைந்து வரி வரியா யடுக்கி – மனம் கொஞ்சு தமிழிற் குழைத்துத் தந்தால் அதுவே கவியா கும் -- உயிர் கெஞ்சும் உணர்வுக ளோடமைந் திருந்தால் உலகுள்ள வரை வழும். சொல்ல வந்ததைத் தெளிவாய் உணர்ந்திடச் சொல்வது தான் கவிதை -- உணர் வெல்லாம் உருகிட உயரிய சிந்தனை தருவது தான் கவிதை -- மழை வெள்ளம் போலே சொற்பெருக் காகி வளர்வது தான் கவிதை -- நல் உள்ளம் நைந்து உணர்வைத் தழுவி நின்றால் அது கவிதை. அடுக்கி வைக்கும் சொற்கள் எல்லாம் அழகுக் கவி யாகா -- மொழி தடுக்கித் தடுக்கி வீழ்ந்து தொடுப்பவை தரணியில் நிலை யாகா -- உளத் துடிப்பைத் தொட்டுத் துயரைப் பிய்த்துத் தோன்றும் இன்பத் தை -- ஒரே வடிப்பில் வனப்பாய்ப் பொழியின் அதுவே வாழுங் கவி யாகும். மொழியில் அறிவு பெற்றிடப் பெற்றிட முகிழ்க்கும் நற் கவிதை -- புது வழியிற் பார்வையின் ஆழத்தைப் புதைத்திட புயலென வரும் கவிதை...