கவிதை.

கவிதை.


நெஞ்சில் தோன்றும் எண்ணங்களை ஒரு
 நிரையில் நிறுத்தி வைத்து – வெண்
மஞ்சிற் தோய்த்துத் தேனிற் பிசைந்து
 வரி வரியா யடுக்கி – மனம்
கொஞ்சு தமிழிற் குழைத்துத் தந்தால்
 அதுவே கவியா கும்  -- உயிர்
கெஞ்சும் உணர்வுக ளோடமைந் திருந்தால்
 உலகுள்ள வரை வழும்.


சொல்ல வந்ததைத் தெளிவாய் உணர்ந்திடச்
 சொல்வது தான் கவிதை  -- உணர்
வெல்லாம் உருகிட உயரிய சிந்தனை
 தருவது தான் கவிதை  -- மழை
வெள்ளம் போலே சொற்பெருக் காகி
 வளர்வது தான் கவிதை  -- நல்
உள்ளம் நைந்து உணர்வைத் தழுவி
 நின்றால் அது கவிதை.

அடுக்கி வைக்கும் சொற்கள் எல்லாம்
 அழகுக் கவி யாகா  -- மொழி
தடுக்கித் தடுக்கி வீழ்ந்து தொடுப்பவை
 தரணியில் நிலை யாகா  -- உளத்
துடிப்பைத் தொட்டுத் துயரைப் பிய்த்துத்
 தோன்றும் இன்பத் தை  -- ஒரே
வடிப்பில் வனப்பாய்ப் பொழியின் அதுவே
 வாழுங் கவி யாகும்.



மொழியில் அறிவு பெற்றிடப் பெற்றிட
 முகிழ்க்கும் நற் கவிதை  -- புது
வழியிற் பார்வையின் ஆழத்தைப் புதைத்திட
 புயலென வரும் கவிதை  -- வான்
வெளியில்,  புவியில்,  விழியில், அழகில்
 மெல்லிடும் உணர் வேந்தி  -- மனம்
மொழியும் கருத்தை வார்த்தையிற் தந்தால்
 மண்ணில் அது கவிதை.


கந்தவனம் கோணேஸ்வரன்.
10.12 2004








கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5