படையலில் தத்துவம்.
படையலில் தத்துவம்.
கந்தவனம் கோணேஸ்வரன்.
சைவசமயக் கோட்பாட்டின்படி பதி, பசு,பாசம் அநாதியானவை. அநாதி என்பதன் பொருள் தோற்றம் அற்றது என்பதாகும். தோற்றமில்லாப் பொருள்கள் எவற்றுக்கும் மறைவும் கிடையா. எனவே, அவை நிரந்தரமானவை.
பதி, பசு, பாசம் என்பவை முறையே இறைவன், உயிர்கள், மலங்கள் எனவும் வழங்கப்படும். உயிர்களின் நோக்கம் இறைவனைச் சேர்தல். ஆனால் அதற்கு இடையூறாக இருப்பவை பாசம் எனப்படும் மலங்கள். மலம் என்றாலே அழுக்கு என்பது அனைவருக்கும் தெரியும். அழுக்கு நீக்கப்பட வேண்டியதன்றோ…
ஆனால் உயிர்கள், தம்நிலை உணராது மலத்தில் அழுந்திக் கிடக்கின்றன. அழுக்கு என்ற பொருளில் மலம் என்ற சொல் அமைந்திருக்கின்ற போதும் நாங்கள் அதனை விடமுடியாமல் மயங்கிக் கிடப்பதால்தான் அதனைப் பாசம் என்றும் வழங்குகிறோம்.
உயிர்கள், இறையைத்தவிர மற்றெப் பொருளில் ஆசைகொண்டாலும் அது பாசம் எனப்படும். உயிர்கள் இறைவனை உணர்வதற்குப் பாசமே தடையாக இருக்கின்றது. உயிர்களின் துன்பங்களுக்கும் அதுவே காரணமாக இருக்கிறது. இதனால்தான் புத்தபிரானும் “ஆசையை விடு.” என்றார்.
சைவசமயம் உட்பட இந்துநெறி அனைத்திலும் இறைவனுக்கு நைவேத்தியம் வைத்து வழிபாடு செய்யும் முறை சிறப்பிடம் பெறுகிறது. உயிர்கள் பாசத்தைத் துறப்பதற்கான ஆரம்பப் படித்தரந்தான் இது.
இறைவனுக்கு நைவேத்தியப் பொருள்களாக நாம் வைப்பவை அனைத்தும் நமக்குப்பிடித்தமான பொருள்களே. இவற்றின் சுவை எம்மை வசப்படுத்தும். இந்நைவேத்தியம் இறைவனுக்கும் நமக்கும் நடுவில்தான் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. இதன் தாற்பரியம், “இறைவா, என்னை மயக்கும் பொருள்களை உன்னிடத்தில் ஒப்படைத்து விட்டேன். என்னை உன்பால் ஈர்த்தருளும்.” என்பதாகும். வசதி படைத்தோர் பொன்னையும் நிலங்களையுங்கூட இறைவனுக்குப் படையல் செய்கிறார்கள் என்பதும் நோக்கத்தக்கது.
“நைவேத்தியப் பொருள்களை இறைவன் உண்பானா?” என்று கேட்கின்ற புத்திஜீவிகள் பலருளர். “இறைவன் படைத்த பொருள்களை இறைவனுக்கே நாம் தருவது வேடிக்கையாக இல்லையா?” என்று தத்துவம் பேசுபவர்களும் உளர். இவர்கள் நுனிப்புல் மேய்ந்தவர்களேயன்றி வேறல்லர்.
நாம் படைக்கும் எந்தப் பொருளையும் இறைவன் உண்பதில்லை. ஆனால் அப்பொருள்கள் எமது என்பதும் எமது உழைப்பாற் பெறப்பட்டவை என்பதும உலகியல் உண்மை. அதன்படி அப்பொருள்கள் எமது உடைமைகளே. ஆயினும் இறைவன் முன்னிலையில் அவை வைக்கப்பட்டதும் ‘எமது’ என்ற எண்ணம் மனதிலிருந்து மறைந்து போகிறது. அது வைவேத்தியம் என்ற பெயரில் இறைஉடைமை ஆகிறது. பூஜையின்பின் நாம் அவற்றைப் பெறும்போது ‘பிரசாதம்’ எனப் பெயர்பெறுகிறது.
இறைவன் உயிர்கள் அனைத்துக்கும் எவ்வாறு சொந்தமோ, அவ்வாறே பிரசாதமும் அனைத்துயிர்களின் உடைமையாகிறது. இறைவனிடமிருந்து பெறப்பட்டவை என்ற உணர்வுடன், ஒரு சிறிய அளவிலேனும் ‘அமுதம்’ என அனைவரும் பகிர்ந்துண்டு, ஆனந்தம் பெறுகிறார்கள். எமது என்ற உணர்வுடன் நாம் படைத்த சுவையான உணவு, பிரசாதமாகி இறைவனுடையது என்ற உணர்வில் கிடைக்கும் பட்சத்தில் சிறிது பெற்றுச் சந்தோசப்படுவது பொதுவுடைமையின் வெளிப்பாடு: பற்றற்ற நிலையின் ஆரம்பப்படி.
சுரி. இறைவனே எமக்களிக்கும் பொருள்களை இறைவனுக்கே நாம் படைக்கும்போது என்ன பயன் உண்டாகிறது? இப்படிப் பார்ப்போம். ஒருதாய் கைக்குழந்தைக்கு உணவளிக்கிறாள். சாதத்தைக் கிண்ணத்திலிட்டுப் பிசைந்தூட்டுகிறாள். அந்தவேளையில் அந்த உணவு குழந்தையின் உடைமைதானே? குழந்தை ‘தனது உணவு’ என்ற நினைப்புடன் தன் சின்னக்கையால் அன்னைக்குச் சோறூட்ட முயல்கிறது. இந்த முயற்சியில் தாயின்வாயில் ஒருபருக்கைச் சோறுகூடச் சேராதிருக்கலாம். அல்லது பிள்ளை நன்றாக ஊட்டுகிறது என்று கொண்டாற்கூடத் தாயின் வயிறு நிறையப்போவதில்லை. ஆனால் மனம் நிறைந்து விடுகிறது: பாசத்தினால் மகிழ்ந்து விடுகிறது.
அன்னையால் வழங்கப்பட்ட உணவைத் தன்னுணவு என நினைக்கும் குழந்தையைப்போல, இறைவனின் குழந்தைகளான நாம், இறைவனால் படைத்தருளப்பட்டவற்றை எமது என நினைக்கிறோம். அந்த உணர்வில் குழந்தையைப்போல் அமுதூட்டுகிறோம். இறைவனும் தாயைப்போல உள்ளம் நெகிழ்ந்து போகிறான்.
இறைவன், உயிர்கள் என்று பார்த்தால் நைவேத்தியம் பாசத்தைத் துறக்கும் நிலையின் அடையாளமாகிறது. தாய், சேய் என்று பார்த்தால் நைவேத்தியம் அன்பின் நெகிழ்ச்சியாகிறது.
இதுதான் படையலிற் பொதிந்துள்ள தத்துவம்.
12.10.2019
கந்தவனம் கோணேஸ்வரன்.
சைவசமயக் கோட்பாட்டின்படி பதி, பசு,பாசம் அநாதியானவை. அநாதி என்பதன் பொருள் தோற்றம் அற்றது என்பதாகும். தோற்றமில்லாப் பொருள்கள் எவற்றுக்கும் மறைவும் கிடையா. எனவே, அவை நிரந்தரமானவை.
பதி, பசு, பாசம் என்பவை முறையே இறைவன், உயிர்கள், மலங்கள் எனவும் வழங்கப்படும். உயிர்களின் நோக்கம் இறைவனைச் சேர்தல். ஆனால் அதற்கு இடையூறாக இருப்பவை பாசம் எனப்படும் மலங்கள். மலம் என்றாலே அழுக்கு என்பது அனைவருக்கும் தெரியும். அழுக்கு நீக்கப்பட வேண்டியதன்றோ…
ஆனால் உயிர்கள், தம்நிலை உணராது மலத்தில் அழுந்திக் கிடக்கின்றன. அழுக்கு என்ற பொருளில் மலம் என்ற சொல் அமைந்திருக்கின்ற போதும் நாங்கள் அதனை விடமுடியாமல் மயங்கிக் கிடப்பதால்தான் அதனைப் பாசம் என்றும் வழங்குகிறோம்.
உயிர்கள், இறையைத்தவிர மற்றெப் பொருளில் ஆசைகொண்டாலும் அது பாசம் எனப்படும். உயிர்கள் இறைவனை உணர்வதற்குப் பாசமே தடையாக இருக்கின்றது. உயிர்களின் துன்பங்களுக்கும் அதுவே காரணமாக இருக்கிறது. இதனால்தான் புத்தபிரானும் “ஆசையை விடு.” என்றார்.
சைவசமயம் உட்பட இந்துநெறி அனைத்திலும் இறைவனுக்கு நைவேத்தியம் வைத்து வழிபாடு செய்யும் முறை சிறப்பிடம் பெறுகிறது. உயிர்கள் பாசத்தைத் துறப்பதற்கான ஆரம்பப் படித்தரந்தான் இது.
இறைவனுக்கு நைவேத்தியப் பொருள்களாக நாம் வைப்பவை அனைத்தும் நமக்குப்பிடித்தமான பொருள்களே. இவற்றின் சுவை எம்மை வசப்படுத்தும். இந்நைவேத்தியம் இறைவனுக்கும் நமக்கும் நடுவில்தான் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. இதன் தாற்பரியம், “இறைவா, என்னை மயக்கும் பொருள்களை உன்னிடத்தில் ஒப்படைத்து விட்டேன். என்னை உன்பால் ஈர்த்தருளும்.” என்பதாகும். வசதி படைத்தோர் பொன்னையும் நிலங்களையுங்கூட இறைவனுக்குப் படையல் செய்கிறார்கள் என்பதும் நோக்கத்தக்கது.
“நைவேத்தியப் பொருள்களை இறைவன் உண்பானா?” என்று கேட்கின்ற புத்திஜீவிகள் பலருளர். “இறைவன் படைத்த பொருள்களை இறைவனுக்கே நாம் தருவது வேடிக்கையாக இல்லையா?” என்று தத்துவம் பேசுபவர்களும் உளர். இவர்கள் நுனிப்புல் மேய்ந்தவர்களேயன்றி வேறல்லர்.
நாம் படைக்கும் எந்தப் பொருளையும் இறைவன் உண்பதில்லை. ஆனால் அப்பொருள்கள் எமது என்பதும் எமது உழைப்பாற் பெறப்பட்டவை என்பதும உலகியல் உண்மை. அதன்படி அப்பொருள்கள் எமது உடைமைகளே. ஆயினும் இறைவன் முன்னிலையில் அவை வைக்கப்பட்டதும் ‘எமது’ என்ற எண்ணம் மனதிலிருந்து மறைந்து போகிறது. அது வைவேத்தியம் என்ற பெயரில் இறைஉடைமை ஆகிறது. பூஜையின்பின் நாம் அவற்றைப் பெறும்போது ‘பிரசாதம்’ எனப் பெயர்பெறுகிறது.
இறைவன் உயிர்கள் அனைத்துக்கும் எவ்வாறு சொந்தமோ, அவ்வாறே பிரசாதமும் அனைத்துயிர்களின் உடைமையாகிறது. இறைவனிடமிருந்து பெறப்பட்டவை என்ற உணர்வுடன், ஒரு சிறிய அளவிலேனும் ‘அமுதம்’ என அனைவரும் பகிர்ந்துண்டு, ஆனந்தம் பெறுகிறார்கள். எமது என்ற உணர்வுடன் நாம் படைத்த சுவையான உணவு, பிரசாதமாகி இறைவனுடையது என்ற உணர்வில் கிடைக்கும் பட்சத்தில் சிறிது பெற்றுச் சந்தோசப்படுவது பொதுவுடைமையின் வெளிப்பாடு: பற்றற்ற நிலையின் ஆரம்பப்படி.
சுரி. இறைவனே எமக்களிக்கும் பொருள்களை இறைவனுக்கே நாம் படைக்கும்போது என்ன பயன் உண்டாகிறது? இப்படிப் பார்ப்போம். ஒருதாய் கைக்குழந்தைக்கு உணவளிக்கிறாள். சாதத்தைக் கிண்ணத்திலிட்டுப் பிசைந்தூட்டுகிறாள். அந்தவேளையில் அந்த உணவு குழந்தையின் உடைமைதானே? குழந்தை ‘தனது உணவு’ என்ற நினைப்புடன் தன் சின்னக்கையால் அன்னைக்குச் சோறூட்ட முயல்கிறது. இந்த முயற்சியில் தாயின்வாயில் ஒருபருக்கைச் சோறுகூடச் சேராதிருக்கலாம். அல்லது பிள்ளை நன்றாக ஊட்டுகிறது என்று கொண்டாற்கூடத் தாயின் வயிறு நிறையப்போவதில்லை. ஆனால் மனம் நிறைந்து விடுகிறது: பாசத்தினால் மகிழ்ந்து விடுகிறது.
அன்னையால் வழங்கப்பட்ட உணவைத் தன்னுணவு என நினைக்கும் குழந்தையைப்போல, இறைவனின் குழந்தைகளான நாம், இறைவனால் படைத்தருளப்பட்டவற்றை எமது என நினைக்கிறோம். அந்த உணர்வில் குழந்தையைப்போல் அமுதூட்டுகிறோம். இறைவனும் தாயைப்போல உள்ளம் நெகிழ்ந்து போகிறான்.
இறைவன், உயிர்கள் என்று பார்த்தால் நைவேத்தியம் பாசத்தைத் துறக்கும் நிலையின் அடையாளமாகிறது. தாய், சேய் என்று பார்த்தால் நைவேத்தியம் அன்பின் நெகிழ்ச்சியாகிறது.
இதுதான் படையலிற் பொதிந்துள்ள தத்துவம்.
12.10.2019
கருத்துகள்
கருத்துரையிடுக