வாணியே நின் திருப்பாதம் தொழுதேன். (அரங்கக் கவிதை)

வாணியே நின் திருப்பாதம் தொழுதேன்.
(அரங்கக் கவிதை)

அன்னை கலைவாணி
 அகிலாண்ட ஈஸ்வரியே
உன்னைப் பதம்பிடித்தேன்
 உய்விக்க வேண்டுமம்மா.

வெள்ளைக் கலையுடுத்தி
 வீணை இசைப்பவளே
பிள்ளை நான்தொழுதேன்
 பேறருள வேண்டுமம்மா.

வீணை தனையிசைக்கும்
 வித்தியா தத்துவமே
மோனை எதுகைக்கவி
 முன்மொழிய வேண்டுமம்மா.

உன்றன்திருப் பாதத்தில்
 உலகே சுழலுதம்மா
என்றன் வாழ்வெல்லாம்
 என்தாயே நின்சரணம்.

ஆறிவால் உயர்ந்திடவே
 அம்மா நீயருள்வாய்
நெறியாய் நடப்போரை
 நீகாக்க வேண்டுமம்மா.

புதிய கலைகள்தாயே
 பூப்பதெல்லாம் உன்னாலே
எதிலேயெவர் சிறப்புறினும்
 எல்லாமே உன்னருளே.

தாமரை மலர்கள்செய்த
 தவம்நாங்கள் செய்தோமில்லை
சாமரம் வீசும்சோலை
 தனில்இலையாய்த் தளிர்த்தோமில்லை.

இசையைச் சுமந்துவரும்
 இளங்காற்றாய் அமைந்தோமில்லை
அசைந்து வீழருவி
 அதன்நீராய்த் தவழ்ந்தோமில்லை.

உன்றன் கைவீணை
 ஒலியாக நானிருந்தால்
மன்றில்என் புகழ்சொல்ல
 மாநிலத்தில் எவர்க்கியலும்?

முன்றலில்பூத்து உன்றன்
 முகம்பார்க்கம் மல்லிகையாய்
இன்றிங்கு நானிருந்தால்
 என்பெருமை எவர்க்குண்டு?

மல்லிகைப் பூவுமல்ல
 மணம்சுமக்கும் காற்றுமல்ல
வல்லியே உனைச்சூழ்ந்த
 வனப்பான தோப்புமல்ல.

உன்னைச் சுற்றியுள்ள
 உயர்பொருள்நா னிலையெனினும்
என்னை நீசுற்றி
 இருந்துதவ வேண்டுமம்மா.


உலகாய் ஒளியாகி
 ஒளியாய்க் கலையாகி
கலையாய்க் கவினாகிக்
 காலத்தைச் சமைப்பவளே.

விழியாய் எனக்கிருப்பாய்
 வுpத்தியா கூடமிங்கு
ஓளியாய் நீயமர்ந்து
 உலகுய்ய வேயருள்வாய்.

உன்னொளி பெறாக்கல்விக்
 கூடமும் கூடமாமோ?
வெண்ணிலா இல்லாவானம்
 பௌர்ணமி எனலுந்தகுமோ?

பௌர்ணமி உண்டேல்வானம்
 பளிச்சிடும் அதுபோல்தானுன்
கருணையும் உண்டேல்கல்விக்
 கூடமும் கனன்றுஎழும்.

  அறிவொளி இங்கேதோன்றும்
     அமைதியின் வித்துமீண்டும்
  பரவிட வழிகள்தோன்றும்
    பலப்பல நன்மைதோன்றும்.

மானுடம் சிறந்துஓங்கும்
 மனங்களில் மகிழ்ச்சிபொங்கும்
வீணர்கள் வாதம்தூங்கும்
 விடிவுற வழிகள்துலங்கும்.


வள்ளுவன் குறளில்தந்த
 வாழ்க்கையும் இங்கேதோன்றும்
தௌ;ளு தமிழின்பெருமை
 தெருவெலாம் ஒலிக்கும்சிறக்கும்.

இங்குளோர் துயரம்விலக
 எங்களின் அறிவுஉதவும்
மங்கலம் மலியும்நாட்டில்
 மனிதர்கள் உளமுந்தெளியும்.

அவளருள் இருந்தால்நாட்டில்
 அனைத்துமே நன்றாய்நடக்கும்
அவளொளி வீசில்உலகில்
 அமைதியே அரசாய்அமரும்.

அன்னையே பணிந்தோம்தாயே
 அனைத்துயிர் வாழ்வுசிறக்க
நின்திருப் பாதம்தொழுதேன்
 வாணியே சரணம்தாயே.

கந்தவனம் கோணேஸ்வரன்.

(1994இல் நவராத்திரிக் கவியரங்கில் பாடிய கவிதை.)














கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5