உறவில் தமிழின் விருந்து.

உறவில் தமிழின் விருந்து.

             கந்தவனம் கோணேஸ்வரன்.

உறவுமுறைச் சொற்கள் எல்லா மொழிகளிலும் உள. அதுபோல் அவை தமிழ்மொழியிலும ஆட்சி செலுத்துகின்றன. ஆனால் அவை எந்த உறவைக் குறிக்கத் தோற்றம் பெற்றனவோ அந்த உறவு முறையுடன் மட்டும் நின்று விடுகின்றனவா என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். காலமாற்றத்தாலும் சூழல் மாற்றத்தாலும் அவை தாம் உருவான நோக்கத்துக்கு அப்பாற்சென்று வேடிக்கை காட்டுகின்றன.


அப்பா என்ற சொல் தந்தையைக் குறிக்கும். அப்பா என்ற சொல்லுடன் ஒரு “டா” வையும் இணைத்து விட்டால் “அப்பாடா” ஆசுவாசப்படுத்திக் கொள்கிறது. “இஞ்சேரும் அப்பா உம்மைத்தான்..” என்று பள்ளி மாணவி அழைத்தால் அப்பா தோழியாகி விடுகிறது. “ஏனணை அப்பா நான் சொல்லுறதைக் கேட்க மாட்டியோ?” என்று குடும்பத்தில பேசிக் கொண்டால், பேசுபவர் பெண்ணாக இருந்தால் கணவனை விளிக்கும் சொல்லாகவும், ஆணாக இருந்தால் மனைவியை விளிக்கும் சொல்லாகவும் உருப்பெற்று விடுகிறது.


“அப்பா”வுக்குக் கடைசியில்வரும் “அரவை” நீக்கிவிட்டு “ன்” சேர்த்துவிட்டால் “அப்பனும் நீ அம்மையும் நீ..” என்று இறைவனைத் தேடிச்செல்கிறது. “அம்மையே அப்பா ஒப்பிலா மணியே..” என்றால்,  அப்பா இறைவனாகி விடுகிறது. “அப்பனே முருகா!” எனும்போது “அப்பனே”யில் எவ்வளவு ஆனந்தம் கலந்து விடுகிறது… சிறுவர்கள் வயதுமுதிர்ந்த பெரியோரை அப்பா என்றால் மரியாதையும் பண்பும் தெரிகிறது. பெரியோர்கள் சிறுவர்களை “அப்பா இங்கே வா.” என்றால் அன்பும் பாசமும் பொங்கி வழிகிறது. என்னதான் சுவைகள் இருந்தாலும் கணவன்மார் மனைவிமாரிடம் கொப்பன் என்று “அ”வுக்குப் பதிலாகக் “கொ” போட்டுவிட்டால்ää பெண்ணின் தந்தைமேல் இளக்காரமல்லவா ஏறிவிடுகிறது.


அம்மா என்றால் சும்மாவா? கன்றுகூடப் பசுவை அம்மா என்று அழைப்பதாகத்தானே கூறுகிறார்கள். இங்கிலாந்தில் பிறந்தாலென்ன இலங்கையில் பிறந்தாலென்ன ஆவின் கன்றுகள் எல்லாம் தமிழ்தானே பேசுகின்றன? அப்பாமேல் அவைக்கு என்ன கோபமோ தெரியவில்லை எந்தக் கன்றும் இறக்கும்வரை அப்பா என்று ஒப்புக்குத்தானும் அழைக்கவில்லையே.


அம்மா என்றால் தாய். அன்பு பொழியும்  ஒரு சிறந்த வார்த்தை. வாசலில் நின்று பிச்சைக்காரன் அழைக்கும்போது வரும் “அம்மா” சில்லறை நோக்கம் கொண்டது. வீட்டில் விறகு கொத்திப் போடுபவன் வேலைமுடிந்ததும் தலையை ஒருவிரலாற் சொறிந்தபடி போடும் “அம்மா” கூலியைக் குறைக்காமல் விரைவாகத் தந்துவிடு என்ற கருத்தைக் கொண்டது. வயோதிபர்கள் அம்மா என்றால் “மகளே” என்றாகும். சமவயதுடைய ஆண்கள் அம்மா என்றால் மரியாதை என்று பொருள்.


அலுவலகங்களில் இறுதியில் போடும் அம்மா…”உங்களைத்தான் பார்க்க வந்தேன் அம்மா.” தங்கை என்று கூறும் சொல்லாகும். வயதுகூடிய ஆண் சிற்றூழியர்கள் உத்தியோகத்தர்கள் தரத்திலிருக்கும் பெண்களிடம் இந்த “அம்மா” கூறிச் சமாளித்து விடுவார்கள். ஆனாலும் பெண் அதிகாரிகளிடம் போடும் “அம்மா” பயம் மரியாதை கலந்து அதிகாரத்துக்கு வணக்கம் செலுத்துகின்ற தன்மையைப் பெற்றுவிடுகிறது. அரசியலில் அம்மா சர்வசக்தி பெற்ற சொல்லாகி விடுகிறது.


அம்மாவில் “மா” போய் “மை” இணைந்து அம்மை தோன்றினால் பயஙகரமான தொற்று நோயல்லவா வந்துவிடுகிறது. என்றாலும் அம்மைக்குமுன் காளி, மாதுமை, துர்க்கை என்று சேர்த்துவிட்டால் சர்வசக்தி படைத்த பெண்தெய்வம் நின்று அருள் புரிகிறது. அம்மாவை சற்றே மாற்றி “ஆத்தா” என்று கூறினால் பல தமிழகக் கிராமங்களில் அன்பான அன்னையைக் குறிக்குமாயினும் காளி மாரி என்ற முன்சொற்களை இணைத்துக் கொண்டால், குற்றங்களைப் பொறுக்காத சக்தியாக அல்லவா மாறிவிடுகிறது.


பெற்றோர் மகளை அம்மா என்றுஅ அழைத்தால் “மகளே” என்று அர்த்தம். அண்ணாமாரோ அக்காமாரோ தங்கையை அம்மா என்ற அழைத்தால் “பாசமுள்ள தங்கை” நிற்பாள். அதற்காக அக்காவை அம்மா என்ற அழைத்தால் கண்களில் தீப்பொறி பறக்கும் அக்காதான் நிற்பாள். என்றாலும் கணவன் மனைவியை அம்மா என்று அழைத்தால் “இன்பப் பெட்டகமே” என்ற பொருள் பொதிவதால் ஏற்காத மனைவியரும் உண்டோ?


“அண்ணா” என்று அழைத்தால் தமிழகத்தின் சக்திவாய்ந்த தலைவரைக் குறிக்கும். “தம்பி” என்று அழைத்தால் ஈழத்தமிழின் தனிப்பெரும் தலைவரைக் குறிக்கும். “அண்ணாச்சி” என்று அரசியல்வாதி அழைத்தால், “என்ன செய்வது..  .இன்றைக்கு நீங்கள் பெரியவர். ஆனாலும் தருணம் கிடைக்கும் போது காலை வாரிவிட்டு நான் பெரியவனாகிவிட மாட்டேனா?” என்ற நீண்ட பொருள் காணப்படும். அக்கா என்று அழைக்க நேரின் பலதடவை யோசிக்க வேண்டும். “நான் என்ன மூத்தவளா?” என்று கேட்டுச் சீறி விழவுங்கூடும். மூத்தவள் என்றால் மூதேவி எனற ஒரு கருத்தும் இருக்கிறதாம். மூச்….


                 (19.09.2004 ஞாயிறு தினக்குரலில் வெளிவந்தது)

   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5