ஒரு பிரார்த்தனை.

ஒரு பிரார்த்தனை.

 கந்தவனம் கோணேஸ்வரன்.


வேதனையில் துவள்கிறது
 வெதும்பிநெஞ்சம் வெடிக்கிறது
சோதனையோ இதுஎன்று
 சோர்ந்துமனம் அழுகிறது.

யார்கண் பட்டதுவோ
 யார்சாபம் இட்டனரோ
பாரெங்கும் தமிழர்மனம்
 பதைபதைத்துத் துடிக்கிறது.

எங்கள்தமிழ் வீரர்களால்
 இறுமாந்த மக்களின்று
பங்கப்பட்டு அழுகின்ற
 பாவம்ஏன் சூழ்ந்ததுவோ

வடக்கென்ன கிழக்கென்ன
 வண்டமிழர் பூமியன்றோ
திடமாகச் செயலிபட்டால்
 தேனாறு பாயுமன்றோ.

இரண்டுகர வோசையிங்கு
 இடியன்றோ எதிரிகட்கு
இரண்டுபட்ட சேதிவந்தால்
 இதமன்றோ அவர்களுக்கு.


எதுநீதி எதுநியாயம்
 எங்களுக்கு அவைவேண்டாம்
பொதுநீதி ஒற்றுமையே
 புரிந்துசெயல் படுக:போதும்

இருபத்து ஆண்டுகளாய்
 எல்லாமாய் ஆனவர்கள்
துருவங்கள் ஆவதனால்
 துயர்என்றும் தமிழருக்கே.

பிரபாவும் கருணாவும்
 பேசரிய வீரர்களே
பெருவாழ்வைத் தமிழர்பெறப்
 பேறாகி உழைத்தவரே.

வேறாகிப் போவதென்றால்
 வெந்துநாங்கள் மடிந்திங்கு
நீறாகிப் போவதன்றி
 நிகழ்கின்ற காட்சியென்ன?

இருவரும் சிந்தியுங்கள்
 இதயத்தால் பேசிடுங்கள்.
உருவாகி வருங்காலம்
 உமக்கேவல் செய்துநிற்கும்.

(போராளிகள் பிளவுபட்டபோது எழுதப்பட்ட கவிதை. 28.03.2004 வீரகேசரி வாரவெளியீட்டில் வெளியானது.)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5