கவிதை எழுதுதல்.
கவிதை எழுதுதல். கவிதை என்பது ஓர் இனிய கலை. கவிதை யாத்தல் எல்லோர்க்கும் கைவரா. ஆனால் கவிதை படித்தலும் அதன் சிறப்பை நுகர்தலும் இரசனையுள்ள எவர்க்கும் இயலுமான இன்பமே. இங்கே இரசனை என்பதுதான் முக்கியம். கலையுணர்வு கிஞ்சிற்றேனும் அற்ற கழுதைகளும் ( கழுதை என்று மனைவியைத் திட்டிவிட்டு, கழு – அழகிய, தை – பெண்: எனவே அழகிய பெண்ணே என்று தமிழை வளைத்து மனைவியின் தாள்பணிந்த புலவனைப் போலல்லாமல் ) இருக்கத்தான் செய்கிறார்கள். இப்போது மட்டுமல்ல எப்போதும் இருந்தார்கள்: இருக்கிறார்கள்: இருப்பார்கள். இவர்களுக்குக் கற்பூர வாசனை தெரியாது என்று விட்டுவிட வேண்டியதுதான். பலர் கவிதை எழுதிப் பார்ப்பதுண்டு. சிலர் வெற்றி பெறப் பலர் தோற்றுப் போய் விடுகிறார்கள். ‘நூறு கவிதைகளை வாசித்தால் நூற்றோராவது கவிதையை எழுதிவிட என்னால் முடியும்.’ என்று வீண்பெருமை பேசுபவர்களும் இருக்கிறார்கள். ஆயிரம் கவிதைகளைப் படித்தாலும் அரைக்கவிதைகூட அவர்களுக்கு வராது என்பது செயலில் இறங்கும்போதுதான் புரியும். அதற்காக, அவர்களுடன் பொருதுவதில் என்ன நியாயம் கிடைக்கப் போகிறது? சிலருக்குக் கவிதை இலகுவாகவே வந்துவிடும். ‘கருவிலேயே திரு’ ...