தம்பி தில்லைமுகிலன் பற்றிய ஒரு பதிவு.


தம்பி தில்லைமுகிலன் பற்றிய ஒரு பதிவு.

ம்பி தில்லைமுகிலன் எனது தந்தையாரின் தாய்வழித் தமையனாரின் மகன். அதாவது என் பெரியய்யாவின் மகன். பெரியய்யாவின் பெயர் தம்பிப்பிள்ளை. யாழ் வடமராட்சி பொலிகண்டியைச் சேர்ந்தவர். முகிலனின் தாயார் பத்தாம் குறிச்சியைச் சேர்ந்தவர். பெயர் தெய்வானைப்பிள்ளை. தம்பி தில்லைமுகிலனின் இயற்பெயர் துரைவீரசிங்கம் என்பதாகும். இலக்கிய ஆர்வம்காரணமாகத் தானே சூட்டிக்கொண்ட புனைபெயர்தான் தம்பி தில்லைமுகிலன். தம்பி என்பது தந்தையாரின் பெயரின் முதற்பகுதி. தில்லை என்பது அவரது உறவினர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட தில்லையம்பலம் என்ற அவரது பெயரின் முதற்பகுதி. முகிலன் என்பது அவர் விரும்பிச் சூடிய பெயர். இதுதான் தம்பி தில்லைமுகிலன் என்பதன் சாரம்.

தம்பி தில்லைமுகிலன் திருக்கோணமலையிற் பிறந்தவர். என்னைவிட நான்கு வயது மூத்தவர். பிறந்தபோதே தாயாரை இழந்துவிட்டார். தாயின் தங்கையார் வள்ளிநாயகத்திடம் தாய்ப்பாலருந்தி வளர்ந்தார். பிறந்தபோதே தாயாரை இழந்ததாலும் பொலிகண்டிக் குடும்பவழியில் மூத்த குழந்தையாகப் பிறந்ததாலும் பொலிகண்டியிலும் பத்தாம்குறிச்சியிலும் அபரிதமான செல்லக்குழந்தையாக வளர்க்கப்பட்டார். தங்கள் வம்சத்தின் தவப்பேறாகக் கருதப்பட்டு அவர் தவராசா எனவும் அழைக்கப்பட்டார்.

தம்பி தில்லைமுகிலனின் தந்தையார் தம்பிப்பிள்ளை, வடிவேல்அன்டபிறதர்ஸ் கப்பற்கம்பனியில் கணக்குப்பிள்ளையாகப் பணிபுரிந்தார். அவர் வாழுங்காலத்தில் பிறருக்கு உதவுகின்ற உபகாரியாகவும், மிகச் சிறந்த மனிதர்களுள் ஒருவருமாகத் திருக்கோணமலையிற் பிரபலம் பெற்றிருந்தார். யாருடனும் சினக்காத சிரித்த முகமுடைய ஒரு பெரியய்யாவாகத்தான் நான் அவரைப் பார்த்திருக்கிறேன். அவரால் உயர்வுபெற்ற பலகுடும்பங்களை நானறிவேன். அக்குடும்பங்களின் வாரிசுகள் தம்பி தில்லைமுகிலன்மேல் மரியாதை வைத்திருப்பவர்களாக இருப்பதையும் அறிவேன்.

மனைவியை இழந்த பெரியய்யா இரண்டாவது திருமணம் முடித்தார். கண்டியைச் சேர்ந்த செல்லம்மாவை வாழ்க்கைத் துணையாக்கினார். இவர்மூலம் தம்பி தில்லைமுகிலனுக்கு ஒரு தங்கை இருக்கிறார். தம்பி தில்லைமுகிலனைவிட ஆறுவயது இளையவர் அவர். ஈஸ்வரி எனவழைக்கப்படும் தங்கை இப்போது இறக்கக்கண்டி வாழையூற்றில் வாழ்ந்து வருகிறார்.

தனது பதினேழாவது வயதில் தந்தையாரை இழந்தார். அதுவரையில் கவலைகளற்ற செல்லப்பிள்ளையாக வாழ்ந்த முகிலன் அநாதரவானதாக உணர்ந்தார். சிற்றன்னைக்கும் அவருக்குமிடையில் முரண்பாடுகள் வளர்ந்தன. அமைதியான குடும்பம் அல்லற்படத் தொடங்கியது. சேமிப்பில் ஆர்வம்காட்டாத பெரியய்யா குடும்பத்துக்கு மக்களின் மனவாழ்த்துகளைச் சேர்த்து வைத்ததைத் தவிர பொருள் சேர்த்துவைத்ததாக நான் உணரவில்லை.

பெருந்தெரு தமிழ்க்கலவன் பாடசாலையில் (இப்போது விக்நேஸ்வரா மகாவித்தியாலயம்) க.பொ.த. சாதரணதரம் வரைக்கும் கல்விபெற்ற தம்பி தில்லைமுகிலனுக்குத் தொடர்ந்து படிக்கக் குடும்பச்சூழல் இடங்கொடுக்கவில்லை. பள்ளிக்கல்விக்கு முழுக்குப்போட்டார். என்றாலும் தேடல் அவரிடம் நிறைந்திருந்தது. பொருள்முதல்வாதத் தத்துவம் பேசினார். இடதுசாரித்துவ விளக்கங்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டார். கவிதை, சிறுகதை, நாடகம், மேடைப்பேச்சு எனப் பலதுறையில் ஆளுமை செலுத்தத் தொடங்கினார். நான் பிரமித்துப் பார்க்கும் அண்ணனாக வலம்வந்தார்.

செல்லக்குழந்தை என்று உறவினர்களால் பாராட்டி வளர்க்கப்பட்டதாலோ என்னவோ தான் கொண்ட கொள்கையைச் சரியெனத் தாபிக்கும் ஆற்றலும் அவரிடம் வளர்ந்தது. சுயநம்பிக்கை கொண்டவராகத் திகழ்ந்தார். அறுபதுகளின் பிற்பகுதியிலும் எழுபதுகளிலும் திருக்கோணமலை நாடகத்துறையில் மிகச்சிறந்த இடத்தைப் பெற்றிருந்தார். கதை, வசனம், பாடல், ஒப்பனை, நடிப்பு எனப் பல்வளம் கொண்ட நாடகக் கலைஞராக வாழ்ந்தார். அவருடைய நாடகம் என்றால் மக்கள் தாமாகத் திரளுமளவுக்குப் புகழ்பெற்றிருந்தார். மேடையில் அவ்வப்போது நேரக்கூடிய இடையூறுகளைச் சமயோசிதமாக் கையாளுவதில் வல்லவரெனப் பலராலும் பாராட்டப்பட்டார். மக்கள் நாடகமன்றம், எங்கள் நாடகமன்றம் எனத் தன் நாடகக்குழுக்களுக்குப் பெயரிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தினார்.

நல்ல குரல்வளமும் சிந்தனைவளமும் பெற்றிருந்ததன் காரணமாகச் சிறந்த மேடைப்பேச்சாளராகத் திகழ்ந்தார். 1970 பொதுத்தேர்தலில் குச்சவெளி, திரியாய் சாம்பல்தீவு மேடைகளில் தமிழரசுக்கட்சி சார்பில் தீவிரமான பரப்புரைகள் செய்தார். இலக்கிய மேடைகளிலும் பலர் ரசிக்கும் பேச்சாளராக வலம்வந்தார். எந்தவொரு தலைப்பானாலும் மேடையில்பெற்று எழுதாமலேயே கவிதை சொல்லும் ஆற்றல் அவரிடம் காணப்பட்டது. எனினும் ஏனைய கவிஞர்கள் அத்தகைய முயற்சிக்குத் தயாராக இல்லாத நிலையில் அப்படியொரு மேடையைத் திருக்கோணமலை சந்திக்காமற் போயிற்று.

அறுபத்தைந்துகளில் திருக்கோணமலையில் அல்லி, ஆனந்தி, தமிழ்மகள், கன்னித்தமிழ், அறிவுச்சுடர், மாலைநிலா என வெளிவந்த கையெழுத்துப் பத்திரிகைகளுக்குக் கவிதை, சிறுகதை, நாடகங்கள் எனவெழுதித் தன்னாற்றலை வளர்த்துக் கொண்டதோடு கையெழுத்துப் பத்திரிகைகளின் வளர்ச்சிக்கும் பங்களித்தார். நூல்களைத் தேடி வாசிப்பதில் மிகுந்த ஈடுபாடு காட்டினார். வாசித்த விடயங்களை நண்பர்களுடன் பகிர்ந்து விவாதப் பொருளாக்கி ஆற்றலைப் பெருக்கிக்கொண்டார். அவரது புதியவீடு இப்போதிருக்கும் இடத்தில் அந்தநாட்களில் தந்தையாரால் கட்டப்பட்டிருந்த சிறுசிறு அறைகளாகப் பிரிக்கப்பட்டிருந்த தொடர்வீடுகள் அமைந்திருந்தன. அதிலொரு சிறியவீடு தந்தையாரால் அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. செங்கற்கள் வைத்துக் களிமண்ணாற் கட்டப்பட்ட சுவரும் தென்னோலையால் வேயப்பட்ட கூரையுமாக அமைந்திருந்த இல்லமே அவரது அலுவலகமாகவும் நண்பர்கள் கூடிப்பேசும் சபாமண்டபமாகவும் நீண்ட நாட்கள் இருந்தது.

எனது வாசிக்கும் ஆற்றல் வளர்ந்ததற்கு அவரின் தூண்டுதலும் ஒரு காரணியாயமைந்தது.  எனது இளவயதில் அவரைப் பார்த்துப் பலமுறை வியந்திருக்கிறேன். இவ்வளவு திறமைகளிருந்தும் படுமோசமாக நாத்திகவாதம் பேசியதாலும் இடக்குமுடக்கான உரையாடல்களே தன்பலம் என்று கருதிக் கைக்கொண்டதாலும் நெருக்கமான உறவினர்களிடமிருந்து சற்றே விலகி நிற்கும் நிலைக்கு ஆளானார். கடவுளை மதிக்காதவன் என மூத்த உறவினர்களால் அடையாளப்படுத்தப் பட்டார்.

கடற்படைத்தளச் சிவில் ஊழியராக அவருக்கு வேலை கிடைத்தது. பெரியோர்கள் தம்பி தில்லைமுகிலனுக்குப் பெண்பார்த்தனர். பருத்தித்துறையைச் சேர்ந்த நாகேஸ்வரியைப் பெரியோரின் இசைவுப்படி மணம்முடித்தார். பத்தாவுக்கேற்ற பதிவிரதையாக மனையாள் வாய்த்தார்.. வன்னம் என்பது நாகேஸ்வரிக்கு இன்னோரு பெயர். முகிலன் அவரை அப்படி அழைப்பதிற்றான் விருப்பம் கொண்டிருந்தார். அவரது வாழ்வும் மனைவியின் வருகையால் சிறந்தது. மகிழ்ச்சி பெருகியது. உறவினர், நண்பர்களுடனான தொடர்பும் சிறப்படைந்தது.

போராட்ட அமைப்புகள் மக்கள்மத்தியில் வளர்ச்சியடையத் தொடங்கிய காலம் எல்லா இயக்கத் தம்பிமாரும் தில்லைமுகிலனுடன் தொடர்புகளைப் பேணிவந்தனர். அவ்வப்போது அவரிடம்வந்து, ஆலோசனை பெறுவதும் கருத்துப்பரிமாற்றங்கள் செய்வதும் மனஆறுதல் பெறுவதுமாக இருந்தனர். அவரது கருத்தாளுகையும் மொழிவெளிப்பாடும் தம்பிமாரைப் பெரிதும் கவர்ந்திருந்தன.

வடக்குக் கிழக்கு மாகாணஅரசு வரதர் தலைமையில் அமைந்தபோது, அவர் தன்னை முழுமையாக அவர்களுடன் இணைத்துக்கொண்டார். இதன்பிறகு ஏனைய அமைப்புத் தம்பியர் அவருடைய தொடர்புகளைக் குறைத்துக் கொண்டனர். பத்மநாபா, வரதர் சுரேஸ் போன்றோரின் நெருக்கமான தொடர்புகளும் கிடைத்தன. எனினும் மாகாண அரசுகலைந்தபோது வரதரின் பொதுசனத் தொடர்பு அதிகாரிகளில் ஒருவராகப் பணியாற்றிய தம்பி தில்லைமுகிலனும் குடும்பத்துடன் ஒரிசாவுக்கு இடம்பெயர வேண்டியவரானார்.

இக்காலகட்டம் அவரது வாழ்க்கையில் துன்பகரமான நாட்களாக அமைந்திருந்தன. கையறு நிலையில் இந்தியாவிலிருந்து திரும்பியபோது பொருளாதாரத்தில் மிகப் பின்னடைவான நிலையிலிருந்தார். மனைவியின் தளராத ஊக்கத்தால் மெல்லமெல்லத் தலைநிமிர்ந்தார். வாழ்க்கையிற் பொருளாதாரம் சீர்பெறத் தொடங்கிய காலத்தில் மனைவியின் இழப்பு நேர்ந்தமை அவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய துயரானது. ஐம்பத்தேழு வயது நிரம்பிய மனைவி காலமானபோது தான் பாதி மரணமடைந்து விட்டதாகவே உணர்ந்தார்.

மூத்தமகனும், அடுத்துப்பிறந்த மூன்று மகள்மாரும் நல்ல நிலையில் வாழ்கின்ற போதும் மனைவியின் பிரிவு காரணமாகத் தனிமையே அவர் நெஞ்சில் நிறைந்திருந்தது. தனிமையைப் போக்குவதற்காக நண்பர்களைத் தேடினார். இலக்கிய நிகழ்வுகளிற் கலந்துகொண்டார். எதுவும் அவருக்கு ஆறுதல் தரவில்லை. மதுவை நாடினார். வார்த்தைகளாற் குழம்பினார். மன அமைதியின்றித் தவித்தார். அந்தக் குழப்பநிலைதான் தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளுமளவுக்கு அவரைத் தூண்டியிருக்க வேண்டும்.

சிறுவயதுமுதல் அவரது போக்கின் இயல்பு காரணமாகத் தன் திறமைகளை ஒழுங்குபடுத்த விரும்பவில்லை. திறமை இருக்கிறது: அது போதும் என நம்பினார். தேவைப்படும்போது தன்னால் எதையும் சாதிக்கமுடியும் என்ற நம்பிக்கை அவரிடம் அதிகமாகக் காணப்பட்டது. எனினும் பிற்காலத்தில் அவையே அவரது அமைதியின்மைக்குக் காரணமாயின.

மனைவியின் பிரிவுக்குப் பின் மதுவில் அதிக நாட்டம் கொண்டார். அப்படியாவது அமைதியைக் கொண்டுவந்து விட முடியாதா என நினைத்தார். மெல்லமெல்ல உறவினர்களிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் தன்னைத் தனிமைப்படுத்தத் தொடங்கினார். இனம்புரியாத துயரத்தில் அவரது கலையுள்ளம் சுழன்றது. அவரது உறுதியான வாழ்வின் முன்னால் இத்தகைய இறுதி முடிவு எவ்வாறு தலைநிமிர்ந்தது என்பது ஆச்சரியமே. ஆனாலும் அதுதான் உண்மை.

நான் சிறுவனாக இருந்தபோது அவருக்குப் பின்னாற் திரிந்த நாட்கள் அதிகம். அது எனக்குப் பெருமையாகவும் இருந்தது. எனினும் பிற்காலத்தில் பலவிடயங்களில் அவருக்கும் எனக்கும் முரண்பாடுகள் எழுந்தன. நான் அவருடன் பேசிமகிழ்ந்த தருணங்களைவிட முரண்பாடுகள் காரணமாகப் பேசாதிருந்த தருணங்களே அதிகம். எனினும் ஒருநாளாவது நான் அவரை எதிர்த்துப் பேசியது கிடையாது. அவர் ஒரு நல்ல அண்ணன் என்பதில் நான் உறுதியாகவே இருந்தேன்.

திருக்கோணமலை மண் நல்ல இலக்கிய ஆளுமையை இழந்து நிற்கிறது. துணிச்சலுடன் கருத்துக்கூறும் ஒரு வல்லோனைப் பறிகொடுத்து நிற்கிறது. எதிரியும் போற்றும் கலைஞரைக் காவு கொடுத்துவிட்டுத் துடிக்கிறது. நான் எனது அண்ணனை இழந்து நிற்கிறேன். இதயக்கசிவோடு இதனைப் பதிவுசெய்கிறேன்.

அவரது ஆன்மா அமைதி பெறுவதாக. அவர் நினைவுகள் எம்முடன் வாழ்வதாக. அவரைத் தொந்தரவு செய்யாதிருப்போம். அதுதான் நாம் செய்யக்கூடிய கைம்மாறு. 
01.04.2018. 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5