இந்துசமய விளக்கம் 10
இந்துசமய விளக்கம் 10
இறைவனைப் பற்றிய அறிவுமட்டும் நம்மை இறைவனிடம் கொண்டு சேர்க்குமா?
நிச்சயமாக இல்லை. இறையுணர்வு அல்லது இறைபக்திதான் நம்மை இறைவனிடம் கொண்டு சேர்க்கும். உலகநடைமுறை பற்றி நன்கு அறிந்த ஒருவர் தன் அறிவுத்திறமையால் எவரும் அறியாமல் தீயநடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டே, நல்லவர்போல் தோற்றம் தரலாம். அல்லது சமூகத்தின்பால் எவ்வித அக்கறையுமின்றிக் காலம் கடத்தலாம். இதனால் அவர் சமூகத்தைப்பற்றி அறிந்திருக்கவில்லை என்றாகிவிடாது. சுமூகத்தின்பால் பற்று இருந்தால்மட்டுமே அவர் மேன்மையானவராக வாழமுடியும்.
இவ்வாறே இறைவன்பால் பக்தி கொண்டவரால் மட்டுமே இறைவனை எளிதில் அடையமுடியும். இதைச் சுருக்கமாகக் கூறுவதாயின் சமூகஅறிஞர்கள், ஆசாரமறிந்தோர் எனப்படுவோரெல்லாம் பக்தி இருந்தாலன்றி இறைவனை நெருங்குவதில்லை. ஆனால் இறைபக்தி உள்ள ஒருவரோ, சமய உண்மைகள், ஆசாரங்கள் என்பவற்றை அறிந்திராதபோதிலும் - அவற்றைக் கடைப்படிக்காத போதிலும் - இறையுட்கலந்து விடுகிறார். இதனைத்தான் ‘ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில் அவர் கண்டீர் நாம்வணங்கும் கடவுளாரே.’ ஏன்று திருமுறையும் போன்றுகிறது.
வசதிகளாலோ, அறிவாலோ இறைவனை அடையமுடியாது என்பதை விளக்க நமது புராணத்தில் ஒரு கதையுண்டு. அறிவிற் பெரியரான பிரம்மதேவனுக்கும் வசதியிற் பெரியரான திருமாலுக்குமிடையியே யார் உயர்ந்தவர் என்பதில் மோதல் ஏற்பட்டது. அப்பொழுது எல்லாம்வல்ல சிவபிரான் சோதிமயமாகத் தோன்றி இச்சோதியின் முடியையோ அடியையோ உங்களில் எவரேனும் கண்டுகொண்டால் அவரே உங்களில் உயர்ந்தவர் என்று கூறினார்.
அறிவின் வல்லமையைக் கொண்டு பிரம்மன் உயரப்போய் முடியைக் காண முயன்றார். செல்வத்தின் சக்தியைக் கொண்ட விஸ்ணு கீழ்நோக்கிச் சென்று சோதியின் அடியைக் காண முயன்றார். ஈற்றிலே இருவரும் தோல்வியுடன் திரும்பிவந்து தமது இயலாமையை ஏற்றுக்கொண்டனர். அறிவாலோ, செல்வத்தாலோ இறைவனைக் கட்டுப்படுத்த முடியாமற்போன இக்கதையை விளக்கத்தான் நம் ஆலயங்களில் சொக்கப்பனை எரிக்கின்ற சம்பவம் இடம்பெறுகின்றது. சொக்கப்பன் என்றால் எம்மை அன்பினாலே வசப்படுத்திய தலைவன் என்பது பொருளாகும்.
திருமாலுக்கும் பிரமனுக்கும் கட்டுப்படாத இறைவன், மதுரையிலே செம்மனச்செல்வி என்ற கிழவிக்காகக் கூலியாளாகி, பிட்டுக்கு மண்சுமந்து, மன்னன் கட்டளையால் பிரம்படியும்பெற்றார் என்பதை நோக்கின் பக்தியின் பெருமையும் சிறப்பும் புரியும்.
கருத்துகள்
கருத்துரையிடுக