கவிதை எழுதுதல்.
கவிதை எழுதுதல்.
கவிதை என்பது ஓர் இனிய கலை. கவிதை யாத்தல் எல்லோர்க்கும் கைவரா. ஆனால் கவிதை படித்தலும் அதன் சிறப்பை நுகர்தலும் இரசனையுள்ள எவர்க்கும் இயலுமான இன்பமே. இங்கே இரசனை என்பதுதான் முக்கியம். கலையுணர்வு கிஞ்சிற்றேனும் அற்ற கழுதைகளும் ( கழுதை என்று மனைவியைத் திட்டிவிட்டு, கழு – அழகிய, தை – பெண்: எனவே அழகிய பெண்ணே என்று தமிழை வளைத்து மனைவியின் தாள்பணிந்த புலவனைப் போலல்லாமல் ) இருக்கத்தான் செய்கிறார்கள். இப்போது மட்டுமல்ல எப்போதும் இருந்தார்கள்: இருக்கிறார்கள்: இருப்பார்கள். இவர்களுக்குக் கற்பூர வாசனை தெரியாது என்று விட்டுவிட வேண்டியதுதான்.
பலர் கவிதை எழுதிப் பார்ப்பதுண்டு. சிலர் வெற்றி பெறப் பலர் தோற்றுப் போய் விடுகிறார்கள். ‘நூறு கவிதைகளை வாசித்தால் நூற்றோராவது கவிதையை எழுதிவிட என்னால் முடியும்.’ என்று வீண்பெருமை பேசுபவர்களும் இருக்கிறார்கள். ஆயிரம் கவிதைகளைப் படித்தாலும் அரைக்கவிதைகூட அவர்களுக்கு வராது என்பது செயலில் இறங்கும்போதுதான் புரியும். அதற்காக, அவர்களுடன் பொருதுவதில் என்ன நியாயம் கிடைக்கப் போகிறது?
சிலருக்குக் கவிதை இலகுவாகவே வந்துவிடும். ‘கருவிலேயே திரு’.என்பார்களே அதேபோல! கவிதையை அணுஅணுவாக உடைத்து வைத்துக்கொண்டு மூலக்கூறுகளைப் பிரமிக்கும்படி விளக்க முடிந்த பண்டிதர்களாற்கூட ஒரு கவிதை தானும் எழுதமுடியாமற் போவதும் பரிதாபந்தான்! சிறுமணலில் விரலூன்றி அகரம் எழுதத் தொடங்கும்போதே சிலர் தமிழுடன் இணைந்து விடுகிறார்கள்: சொக்கி விடுகிறார்கள். படிக்கும் ஒவ்வொரு தமிழ்ச் சொல்லிலும் சிந்தையைப் பதித்து விடுகிறார்கள். இப்படியானவர்களிடம் பிற்பாடு தமிழாள் பணிந்து போகும்போது வியத்தகு கவிதைகள் பிறக்கின்றன. ஒரு கம்பன், பாரதி, கண்ணதாசன் என்ற அழியாப் புகழ் பெற்று விடுகிறார்கள்.
சிலர், சொற்குவியல்களை வைத்துக் கவிதை என்று பெயரிட்டு விடுவார்கள். ‘இது கவிதையா’ என்று கேட்க எவரையும் அனுமதிக்க மாட்டார்கள். யாராவது மடைத்தனமாகக் கேட்டுவிட்டால், மரபுகளை மீறிய புதுக்கவிதை என்றும், புரட்சிகரச் சிந்தனையின் வெளிப்பாடு என்றும் கூறி, “வெல்வது வேண்டி வெகுண்டுரைக்கும் நோன்பினர்களாகி” கேட்டவரைப் படாதபாடு படுத்தி விடுவார்கள். வீட்டிற் போயமர்ந்து ‘எனது ஆக்கத்தையும் கவிதை என்று ஏற்கவைத்து விட்டேனே’ எனத் தங்கள் சாமர்த்தியத்தைத் தாமே புகழ்ந்து கொள்வார்கள்.
கவித்துவ வீச்சுக்கு மரபுக் கட்டுமானங்கள் தடையாக அமைந்துவிடக் கூடாதே என்று சில விதிகளைப் புரட்சிகரமாக மீறிய தமிழ்வல்லாளார் - மீறுதல்மூலமும் தமிழுக்கு வளம் சேர்த்த பெரியார்கள் - தங்கள் புரட்சிக்குள் ஒளிந்துகொண்டு சிரங்கு சொறியும் இவர்களைக் கண்டு தலை குனிந்து கொள்வதைத் தவிர வேறு வழியேது?
இத்தகைய சிரங்கு சொறிவாளர்களை மனதிலிருத்தித்தான் கவியரசு கண்ணதாசன் ஒரு திரைப்படப் பாடலில் ‘அம் மெனும் முன்னே ஆயிரம் பாட்டை அள்ளியள்ளி வீசட்டுமா? அப்போதும் உனக்குப் புரியாதிருந்தால் சொல்லிச் சொல்லி அடிக்கட்டுமா? வல்லினம், மெல்லினம், நல்ல இடையினம் எனும் கம்பையெடுத்து, வெண்பா, விருத்தம் எனும் விதம்விதமான சாட்டை தொடுத்து, நான் போட்டால் தெரியும் போடு, தமிழ்ப் பாட்டால் அடிப்பேன் ஓடு.’ என்று எகிறிக் குதித்தாரோ என்னவோ?
அவர் கவியரசு. குதிக்கலாம்: ஓடஓடத் துரத்தலாம். கவியரசு என்று தனக்குத்தானே பட்டம் வைத்துக் கொண்ட எல்லோரும் கவியரசரைப்போல் குதிக்கத்தான் முடியுமா? குதித்தால் தமிழுலகம்தான் ஏற்றுக் கொள்ளுமா?
சிலர் அப்பா அம்மா பார்த்து வைத்த பெயர்களை உதறித்தள்ளிவிட்டு, புதுப்பெயரைச் சூட்டிக்கொள்வது கவிதை எழுதுவதற்கான ஒரு சிறப்பு என்றும் நினைத்துக் கொள்வதுண்டு. ஏதேனும் அடங்காப்பற்றுக் காரணமாகப் பெயர் சூட்டிக் கொள்வாருமுளர். ஆயினும், நின்றசீர் நெடுமாறன் என்று பெயரைச் சூடிக்கொண்டு மூன்றடி உயரமே உள்ள ஒருவர் கவிதை எழுதப்புகுந்தால் பார்ப்பவர் வாய் விட்டுச் சிரியாரோ? சூடிக்கொள்ளும் பெயர் திறமைக்கும் பற்றுக்கும் பொருத்தமாக இருப்பின் உலகம் வியந்து நோக்கும். இல்லையேல் சினந்து தாழ்த்தும்.
கண்ணன்மேல் வைத்த பற்று கண்ணதாசனையும், பாரதிமேல் வைத்த பற்று பாரதிதாசனையும் உயர்த்துவதற்கு அவர்களது தமிழ் வல்லாண்மையுந்தான் காரணமாக நின்றது. இதைவிடுத்து, ஒட்டக்கூத்தன் என்று எனக்கு நானே பெயரிட்டுக் கொண்டபோதும் தமிழ் பணிய மறுத்துவிட்டால்…? முதலாம் குலோத்துங்கன், இரண்டாம் குலோத்துங்கன் என்று கூற என்ன இராஜவம்சமா?
இப்படித்தான் ஒருவன் தனக்குத்தானே ஒட்டக்கூத்தன் என்று பெயர் வைத்துக் கொண்டான். செய்யுள் என்றுகூறி ஏதேதோ எழுதித் தள்ளினான். இது செய்யுள்தானா என்று கேட்க எவருக்குத் துணிவு வரும்? ஓட்டக்கூத்தனுக்கு நிகராக தமிழ்ப்புலமை தனக்கும் இருப்பதாகக் கற்பனை பண்ணிக்கொண்டு மேடைகள்தோறும் வலம் வந்தான். இன்றிருக்கும் ஒட்டக்கூத்தர்கள் போலவே அவனும் தந்திரமாகப் பெயரெடுத்து வந்தான். பகட்டான ஆடைகள்: விரல்களில் பளபளக்கும் மோதிரங்கள்: கைதட்டிப் பாராட்ட ஒரு கூட்டம் என்று ஒரே அமர்க்களம்…
“விரகர் இருவர் புகழ்ந்திட வேண்டும்
விரல்நிறைய மோதிரங்கள் வேண்டும் - அரையதனில்
பஞ்சேனும் பட்டேனும் வேண்டும்……
என்பதை அவன் நன்றாக அறிந்து வைத்திருந்தான். அதனால் “அவன் கவிதை (நஞ்சேனும் வேம்பேனும்) நன்றாம்.” என்று சொல்ல வேண்டிய நிலை கேட்பவர்களுக்கு. எனினும், தீமைகண்டு பொங்குவான் ஒருவனேனும் இல்லாமற் போவானா? ஒரு மேடையிற் பொங்கி எழுந்து விட்டான்.
“ பறியாரோ நின்வாயிற் பல்லதனைப் பாரோர்
முறியாரோ நின்முதுகின் முள்ளை – சிறியதொரு
மட்டப்பேர் போதாதோ? வாக்கிதுவே ஆனாக்கால்
ஒட்டக்கூத் தராமோ உனக்கு.”
அப்பன் அம்மை வைத்தபெயர் போதாவிட்டால் வேறொரு மட்டமான பெயரை வைத்துக்கொள் என்று சீறி விழுந்தான்.
பூனையைக் காணாதவிடத்துக் கிளி பெரும் பேச்செல்லாம் பேசும். பூனை வந்து விட்டாலோ கீச்சுக் கீச்சென்றுதானே கத்தும். அந்தநிலைதான் இந்தப் போலி ஒட்டக்கூத்தருக்கு.
சிலபுலவர்கள் எதைப் பாடியேனும் பிழைத்துக் கொள்வார்கள். அவர் நாவில் தமிழ் புரளும் அளவுக்கு நரம்புகளில் தன்மானம் புரள்வதில்லை. அதிகாரி வீட்டுத் தும்புக்கட்டைக் கூட
“ஆகா தும்புக்கட்டு அழகான தும்புக்கட்டு
ஓகோ தும்புக்கட்டு உயர்வான தும்புக்கட்டு
வாகாய்த் தரைகூட்டும் வளமான தும்புக்கட்டு
பாகாய் இனிக்குதடி பைந்தமிழன் என்மனமே."
என்று வியந்துபாடி அதிகாரியின் விரலால் தனது முதுகில் அணிற்பிள்ளைக் கோடு போன்று மூன்று கோடுகள் பெற்று மகிழ்ந்து துள்ளும் மனம் அவர்களுக்கு.
"யாரைநம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க…. என்காலம் வெல்லும் வென்றபின் வாங்கடா வாங்க." என்று உரத்துச் சொல்லவோ 'மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ உன்னையறிந்தோ தமிழை ஓதினேன்?' என்று நிமிர்ந்து கேட்கவோ தைரியமற்றவர்கள் இவர்கள்.
“செங்கண் களிறாடு செங்களம் கண்ணிற் காணாதோரை”, “நல்யாழ் விரும்பிக் கேளாதோரை”, “தமிழ்ச்சுவை தேராரை”, “ஒவ்வாக் கானகத்து உயர்மரம் பழுத்த துவ்வாக் கனியென எவர்க்கும் பயன்படாதோரை”, இந்திரன் என்றும், சந்திரன் என்றும் புகழ்ந்து ஏதேனும் இலாபம் தேடும் புலவர்கள் அன்றும் இருந்தார்கள்: இன்றும் இருக்கிறார்கள். அதிகாரிகளிடம் அடிபணிந்து பலன் பெறுகிறவர்களும் உளர்: பலன் பெறமுடியாமற் பரிதவித்துத் திட்டித் தீர்க்கிறவர்களும் உளர்.
இப்படித்தான் அன்றொரு புலவர் செல்வந்தனான ஒருவனிடம் போனார். அவனைப் புகழ்ந்து பாடினால் பரிசு கிடைக்கும் என நம்பினார். பாவம் அந்தப் புலவர்: அவன் உலோபி என்பதை அறிந்திருக்கவில்லை. அந்த உலோபியைப் பார்த்து 'சீருலாவிய காமதேனுவே.. தாருவே… சிந்தாமணிக்கு நிகரே..' என்றெல்லாம் வருணிக்கத் தொடங்கினார். அவனோ மூர்க்ககுணம் மிக்கனாய், கண்கள் சிவக்க, 'யாரை நீ மாடு, (காமதேனு) மரம், (கற்பகதரு), கல் (சிந்தாமணி) என்று இகழ்ந்து கூறினாய்? அது மட்டுமல்லாமல் அரிச்சந்திரன் என்ற அடாத சொல்மூலம் அழைத்து விட்டாயே.. நான் யாரிடம் அடிமைப்பட்டேன்? யாரிடம் பெண்டை விற்றேன்? இந்தக் களங்கத்தை எப்படி நான் துடைப்பேன்? ஏன ஜகம்புரளக் கத்த ஆரம்பித்து விட்டான்.
பயத்தினால் ஓடித்தப்பிய புலவரோ, தன் நிலையை ஆடல்வல்லான் தில்லை மன்றானிடம் முறையிடுகிறார், அழகிய பாடலாகவே:
“வாரும்நீர் யார்என்ன வித்துவான் எனவும்
மதிமோசம் வந்ததென்றே
வாய்குளறி மெய்யெலாம் மிகநடுக் குற்றுநீர்
வந்தகாரி யம்ஏதெனச்
சீருலா வியகாம தேனுவே தாருவே
சிந்தா மணிக்குநிகரே
செப்புவச னத்துஅரிச் சந்திரனே எனலும்
சினந்துஇருக ணும்சிவந்தே
யாரைநீ மாடுகல் மரமென்று சொன்னதும்
அலால்அரிச் சந்திரன்என்றே
அடாதசொற் சொன்னையே யார்க்கடிமை யாகினேன்
யார்கையிற் பெண்டுவிற்றேன்
தீருமோ இந்தவசை என்றுரைசெய் வெகுகொடிய
தீயரைப் பாடிநொந்தேன்
திருமன்றுள் நடுநின்று நடம்ஒன்று புரிகின்ற
தென்தில்லை நடராசனே.”
பாவம் புலவர்கள்: “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ்.” என்று வீராப்புடன் கூறிக்கொண்டு, காணிநிலம் வேண்டும்: தூணில் அழகியதாய் நன்மாடங்கள் தூயநிறத்தினதாய் கட்டித்தர வேண்டும் என்ற பராசக்தியை இறைஞ்சுவதைத் தவிர என்னதான் செய்துவிட முடியும்?.
(1997. ஜனவரி 19ஆந் திகதியன்று எழுதப்பட்ட கட்டுரை இது.)
கருத்துகள்
கருத்துரையிடுக