இந்துசமய விளக்கம் 15
ஆன்மநேய ஒருமைப்பாடு பற்றிப் பேசும் எமது மதத்தில் மிருகங்களைப் பலியிடும் வழக்கம் எவ்வறு தோன்றியது? இதன் பொருள் என்ன? இந்துமதம் பரந்த சிந்தனையின் ஊற்றாகும். வழிபாட்டு முறையிலோ வேறு விடயங்களிலோ இறுக்கமான கட்டுப்பாடுகள் எவற்றையும் எவருக்கும் விதிக்கவில்லை. அடிப்படை விதிகளை வகுத்து வைத்திருக்கின்ற அதே நேரத்தில், உலக நடைமுறைக்கும் பக்தனின் இயல்புக்கும் ஏற்ப நெகிழ்ச்சித் தன்மையையும் அது அனுமதித்து ஏற்றுக்கொண்டிருக்கிறது. உதாரணமாக, கண்ணப்பநாயனார் தன் வாயிலிட்டுச் சுவைத்த இறைச்சியை இறைவனுக்கு நிவேதனமாகப் படைத்த செயலைக் குறிப்பிடலாம். இங்கே கண்ணப்பர் இறைவன்மேல் கொண்ட அன்பின்முன், ஆசார நடைமுறைகள் செயலிழந்து போகின்றன. ஆனால், அதற்காக நாமும் இறைச்சியைப் படைத்தாலென்ன என்று நினைப்பது பக்தியின் பாற்படாது. விதண்டா வாதத்தின் வகைப்பட்டு அகங்காரத்தில் வந்து நிற்கும். இந்த விஷயத்தை விளங்கிக் கொள்வதன்மூலம் மிருகங்களைப் பலியிடுவதன் தன்மையையும் ஓரளவு விளங்கிக் கொள்ளலாம். மனித மனத்துள் ஏராளமான விலங்குகளும் பறவைகளும் குடிகொண்டிருக்கின்றன. மற்றவரைக் கபடத்தால் வீழ்த்தும்போது நம்முள் நரி தலையெடுக...