கல்வெட்டு - அமரர் இளையதம்பி பரமநாதன்.
தோற்றம். 27.06.1934 மறைவு. 15.07.2018
அமரர் இளையதம்பி
பரமநாதன்.
மறைவு தினப்பா.
சீராளும் விளம்பியாண்டு சிறப்புநிறை
ஆனித்திங்கள்
நேராளும் பூர்வபக்கத் திருதியையே – பேராளும்
இளையதம்பி பரமநாதன் இகம்புகழும் நல்லூரான்
கழலடிசேர் நாளென் றியம்பு.
துணைவிழைப்பா.
வான்நிலவு
விளக்கேற்ற வண்ணமலர் அழகுமிழ
வாய்மணக்கத் தமிழ்பேசும் நாடு
தேன்நிகர்த்த
மாவலியாள் தென்றல்தலை சீவிவர
தென்பாங்கில் கடல்தழுவும் நாடு
மான்விழியார்
மஞ்ஞையென மயல்பேசி நடைபழக
வயமிழக்கும் மறவர்வள நாடு
வான்வியக்கும்
பனைமரமும் வளஞ்சேர்க்கும் தெங்குகளும்
வளர்சோலை யாயமைந்த நாடு
பொழிகின்ற வானம்
போதுமென்ற மண்வளம்
போதவிழ்ந்து குலுங்குகின்ற பூவனம்
அழிகின்ற பேதம்
அரவணைக்கும் வேதம்
அறிஞர்தம் நாவிலே அரன்நாமம்
தெளிகின்ற இளமை
தேர்ந்தெடுக்கும் புதுமை
தேனமுதம் எனவுயிர்க்கும் தமிழ்ப்பெருமை
ஒழிகின்ற
பொய்ம்மை ஓங்கிவரும் வாய்மை
உள்மனதில் கிளர்ந்தொளிரும் உண்மை
கடலாடி வாழ்வளிக்கும்
காளையர்கள் ஓர்புறமாம்
கைவினை யாளர்கள் ஓர்புறமாம்
திடமாக நிலமுழுது
செந்நெல்லால் மலையமைத்து
செல்வந் தருமிளைஞர் ஓர்புறமாம்
உடலாலும்
மனதாலும் ஒழுக்கநெறி ஓம்பிநிற்கும்
ஒப்பற்ற மெய்த்தமிழர் ஓர்புறமாம்
நடமாடும்
தெய்வங்கள் போல்சான்றோர் ஓர்புறமாம்
நல்லசிவ பூமிவாழ்வே பேரறமாம்.
ஒரு மலரின் பயணம் நிறைவுறுகிறது…..
உலகம் ஒரு பூந்தோட்டம்.
அதன் சொந்தக்காரன் இறைவன்.
அவன் உரமிடுகிறான்: செடி வைக்கிறான்: விருப்பமான வகையில் பூக்களையும் மலரச்
செய்கிறான்.
சில மலர்கள் மணந்தருகின்றன: சில மலர்கள் அழகைச் சொரிகின்றன.
சில மலர்களோ அழகுடன் மணத்தையும் உமிழ்கின்றன: அது இறைவனின் விருப்பம்.
எதுவாயினும் மலர்களின் ஆயுட்காலம் ஏறத்தாழ ஒருநாள் தானே!
ஒருநாள் என்று வருத்தப்படுவதும், இருபத்துநான்கு மணித்துளிகள் என்று பூரித்துப் போவதும், ஆயிரத்துச் சொச்சம் மணித்துளிகள் என்ற
அலுத்துக் கொள்வதும் மலர்களின் உரிமை.
தோட்டக்காரன் விரும்பும்போது மலர்களைப் பறித்து விடலாம் யாரும் மறுத்துப்
பேசமுடியாது. அதுதானே நியதி…?
அரும்பு தெரிந்தவுடன் அடுத்துள்ள பூக்கள் ஆரவாரத்துடன் குதூகலிக்கின்றன: புதிய
அரும்பு தாங்கள் பூத்திருக்கும் மரத்திலேயே தோன்றியதால் அது தங்கள் உறவென்று
உள்ளம் பூரித்துப் போகின்றன. தம் வம்சத்தின் வளர்பிறை எனக் கொண்டாடுகின்றன.
அதனைப் பாதுகாக்கின்றன: சீராட்டுகின்றன: தாலாட்டுகின்றன: பெயர்கூடச்
சூட்டுகின்றன: விழாக்கள் வைத்துப் பூரித்துப் போகின்றன.
எனினும் தோட்டத்தின் எந்தப் பூவும் எந்த நேரத்திலும் வீழ்ந்து போகலாம்:
காற்றடித்துக் கரைந்தும் போகலாம்: வண்டு ஊதி வதங்கியும் போகலாம்.
இறைவன் பறித்துக் கொள்ளும் மலர்கள் அதிஷ்டமானவை. அவன் விரும்பியல்லவா அவற்றைப்
பறித்துக் கொள்கிறான்? அழகில் - மணத்தில் - மயங்கியல்லவா தன்வயம்
ஈர்த்துக் கொள்கிறான்?
அந்த ஈர்ப்பு இரண்டொரு மணித்துளிகளிலேயும் நிகழலாம்: இருபது மணிநேரம் ஆனபின்னும் நேரலாம்.
இளமை என்பதும், நடுத்தரம் என்பதும், முதுமை என்பதும்
மணித்துளிகளின் கணக்குத்தானே!
விருப்பு வெறுப்பு அற்ற இறைவனே விரும்பியேற்கும் பூக்களின் அதிஷ்டத்தை
என்னவென்பது?
இறைவன் திருப்பாதங்களை அடைந்த பூக்கள் மீண்டும் செடிகளில் வடிவம் எடுக்கப்
போவதில்லை.
இதைத்தான் இந்துமதம் சொல்கிறது: இறப்பின் பின்னர் எல்லா உயிர்களுக்கும்
சொர்க்கமோ நரகமோ இருக்கத்தான் போகின்றன: ஆனால் சில உயிர்களுக்கே இறைவனின் திருவடி
நிழல் கிடைக்கிறது. இதைத்தான் முத்தி என்கிறது.
சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ செல்கின்ற மலர்கள் மீண்டும் வடிவமெடுக்கின்றன.
வினைப்பயன் தீர்ந்ததும் திரும்பிவர வேண்டிய நிலை அவற்றுக்கு.
பிராப்தத்துடன் அவை உலகுக்கே வருகின்றன. இந்தப் பிறவியில் நாம் அனுபவிக்க
வேண்டிய வினைகளின் கூட்டே பிராப்தம். நல்லவர், தீயவர், ஏழை, பணக்காரன், ஆரோக்கியம்,
உடனலக் கோளாறு
என்பவையெல்லாம் பிராப்தம் தருகின்ற பலன்களே. வசதியான வாழ்க்கை பெறுவதும் வறுமையில்
வாடிஉழல்வதும் பிராப்தம் தந்த பரிசுகளே.
சஞ்சித வினைகளையும் அவை ஒருபுறம் சுமந்து கொண்டு தானிருக்கின்றன. நாம்
முற்பிறப்பிற் சேர்த்துவைத்த வினைப்பயன்களில், இப்பிறப்பு
அனுபவத்துக்கென ஒதுக்கப்பட்ட பிராப்த வினைகள் போக எஞ்சியிருப்பவையே அவை. சஞ்சித
வினைகள் அதிகமாக இருப்பின் இனிவரும் பிறவிகளும் அதிகமாகும் என்பது பொருள். குறைவாக
இருப்பின் பிறவிகள் குறைகின்றன என்பது அர்த்தம்.
இப்பிறப்பில் நாம் தேடிக்கொள்ளும் புதிய வினைப்பயன்களை ஆகாமியம் என்கிறோம்.
பிறவிகள் தொடர்வதிலும் குறைவதிலும்
ஆகாமியத்துக்கும் பெரும் பங்குண்டு.
ஓருயிருக்கு, இறைவன் தனு,
கரண, புவன போகங்களைக் கொடுப்பதன் காரணம், மலங்கள் நீங்கி அது புனிதத் தன்மை பெறவேண்டும்
என்பதற்காகத்தான். மல நீக்கத்தின் மூலம் சஞ்சித, பிராப்த, ஆகாமிய வினைகளை அறுத்து இருவினையொப்பு
பெறவேண்டும் என்பதற்காகத்தான்.
தனு என்பது உடல்: கரணம் என்பது உடலால் உலகுடன் தொடர்பை ஏற்படுத்தக்கூடிய
பொறிகளும், புலன்களும்:
புவனம் என்பது உலகம் முதலான பிரபஞ்சம்: போகம் என்பது உயிர்கள் தனு, கரண புவனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் பெற்றுக்
கொள்கின்ற அனுபவம்.
இவற்றைச் சரியாகப் பயன்படுத்துவதன் மூலம்தான் உயிர்கள் உச்சநிலையை அடைகின்றன.
மலங்களை முற்றாகக் களையும் இருவினையொப்பு நிலையைத் தொடுகின்றன.
இருவினையொப்பு என்பது நன்மை தீமைக்கும், பாவங்களுக்கும் புண்ணியங்களுக்கும் வித்தியாசம்
உணராத நிலை. இறைவன் ஆட்டுவிக்கிறான் நான் ஆடுகிறேன் என்ற மனோபாவம். என் செயல்
யாதொன்றும் இல்லை: எல்லாம் அவன் செயலே என்ற பக்குவம்.
இந்தப் பக்குவம் இலகுவில் அமைந்துவிட மாட்டாது. ‘நான்’ என்ற அகங்காரம் அவ்வளவு எளிதில் அற்றுப் போய்விடாது.
‘நான்’ என்ற ஆணவம்
வினைகளைத் தூண்டுகின்றன: வினைகள் ஆணவத்துக்கு உரமிடுகின்றன: மாயையில் மயங்க
வைக்கின்றன. இப்படித்தான் உயிர்கள் தளைகளில் சிக்கிக் கொள்கின்றன.
உலகப் போகங்கள் நிரந்தரமானவையல்ல: நமது வாழ்க்கை எந்நேரமும் அற்றுப் போகலாம்
என்பதை உணர்ந்தாலே மும்மலங்களில் ஒன்றான மாயையிலிருந்து விடுபடுவதற்கான வழி
திறந்து விட்டது என்பது பொருள்.
உலக நிலையாமையைப் புரிந்துகொண்டால், வாழ்வுதாழ்வு, இன்பத்தில் மயக்கம், துன்பத்தில் கலக்கம் என்பன அற்றுப் போகும்.
அடுத்த தளையான கன்மத்தின் வலிமையும் குறையத் தொடங்கும்.
உலக இன்பங்கள் நிரந்தரமற்றவை என்ற உணர்வு இப்பிறப்பின் கன்மவினைகளான
ஆகாமியத்தை அழித்துவிட நான் என்ற அகங்காரமும் மெல்லமெல்ல விலகத் தொடங்கும். அந்த
அகங்காரம்தான் ஆணவமலம் எனப்படுகிறது. ஆணவமும் வலிமை குறைந்துவிட்டால் அதுதான்
உயிர்களின் ஈடேற்றத்துக்கான அத்திபாரம்.
ஆணவத்தை அழித்த உயிர்கள் மீண்டும் பிறப்பதில்லை. இறைவனுடன் இரண்டறக் கலந்து
விடுகின்றன. இக்கலப்பு சொர்க்கமன்று. சொர்க்கத்துக்கு வழிகாட்டுவது சைவசமயத்தின்
நோக்கமுமன்று.
தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத்தருஞ் சக்தியான எம்பிரான் தன்னோடு உயிர்களை
அணைத்துக் கொள்கின்ற உன்னத நிலை அது.
அந்தநிலையை அடைவதற்கு ஒரு பக்குவம் வேண்டும். அது எல்லோருக்கும் வாய்த்து
விடுவதில்லை.
அப்படிப் பக்குவம் பெற்ற புனித ஆன்மாக்களில் ஒன்றுதான் இளையதம்பி பரமநாதன்.
இவரது வருகை 27.06.1934 இல் தமிழர்பழம்பதி
வட்டுக்கோட்டை கிழக்கில் நிகழ்ந்தது.
சுப்பர் வழித்தோன்றல் கணபதியார் பெற்ற இளையமகன்
இளையதம்பி இவரது தந்தையார்.
முத்துத் தாண்டவர் வழிவந்த சின்னத்தம்பியின்
மகள் தங்கமுத்து இவரது தாயார்.
தாய் தந்தையருடன் இவரைத் தாலாட்டவும் தூக்கி முத்தமிடவும் முப்பெருந்தேவியராக
கமலாம்பிகை, நகுலேஸ்வரி, தையல்நாயகி என அக்காமார்.
இவர் விளையாட, முத்தமிட அன்புபொழிய தங்கையாகச் செல்வநாயகியும்,
தம்பியாக ஜெயநாதனும்.
பரமநாதனாருக்கு என்ன குறை? அன்புக்குக்
குறைவில்லாத குடும்பம். அரவணைப்புக்குப் பஞ்சமில்லாத உறவினர்கள்.
வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரியும் யாழ்ப்பாணக்
கல்லூரியும் இவருக்குப்
பாடம் சொல்லிக் கொடுத்தன.
ஏழாவது வயதில் தீட்சை பெற்றார். சைவ
உணவுக்காரரானார். சமய ஈடுபாட்டுடன்
வளர்ந்தார்.
கலை இரசனை இவரை ஆட்கொண்டது: நாடகம் பார்த்தார்: நாட்டியக் கலைரசனையில் தன்னை
மறந்தார்.
நண்பர்களோடு குலாவுவதும் விருந்துண்பதும் இவருக்குப் பிடித்தமான
பொழுதுபோக்குகளாயின.
சிரேஷ்ட கல்வித் தராதரப்பத்திரம் எனப்படுகின்ற
அப்போதைய எஸ்.எஸ்.சி யுடன் தன்
படிப்பை நிறைவு செய்து கொண்டார். அன்றைய காலகட்டத்தில் அப்படிப்பு
போதுமானதாகவே இருந்தது.
அரசியல் வகுப்புகளில் பங்குபற்றினார்: இடதுசாரிக் கொள்கைகளில் நாட்டம்
கொண்டார். தன் அறிவைப் பரந்த நிலைக்கு வளர்த்துக் கொண்டார். அமைதியான ஒரு பல்கலை
விற்பன்னர் என ஊராரால் மதிக்கப்பட்டார். நல்ல மனிதர் என ஊர்மக்களால்
விதந்துரைக்கப்பட்டார்.
கலை ஈடுபாடு காரணமாக சினிமாசார் துறையையே தொழில்வாய்ப்புத்
துறையாகவும் மகிழ்ச்சியாகத் தேர்ந்தெடுத்தார். யாழ் வெலிங்டனில், கண்டி வெம்பிளியில் எனத் தொடங்கி சினிமாஸ் லிமிட்டெட்
தியேட்டர் மனேஜராய்த் தொழில்புரிந்து
ஓய்வு பெற்றார்.
தென்னக்கும்புறவில் அமைந்திருந்த சச்சிதானந்தசுவாமிகளின் யோகாச்சிரம மடத்தைப் பின்னாளில்
சினிமாஸ் லிமிட்டட் கொள்வனவு செய்தபோது அவ்வாச்சிரமத்து மண்ணினதும் கட்டடத்தினதும்
புனிதம் கெடாமற் பராமரித்ததோடு, அக்காணியிலிருந்த
தென்னைகளின் பயன்களை கண்டி கட்டுகலை பிள்ளையார் ஆலயத்துக்கு அர்ப்பணிப்புச் செய்து
அதை ஒழுங்காக நிறைவேற்றியும் வைத்தார்.
பேராதனைக் குறிஞ்சிக்குமரன் ஆலயத்தின் நிர்வாகத்தருள் ஒருவராகி அவ்வாலயத்தின்
வளர்ச்சிக்குத் தன்னாலானதைச் செய்தார்.
காரைநகரில் குடிபுகுந்திருந்த சகோதரி
வீட்டுக்குச் சென்றவேளை கண்களுட் புகுந்தவர்தான் இவரது மனைவி பரமேஸ்வரி.
காரைநகர் சுப்ரமணியம் பூரணம் தம்பதியின் மகள்
பரமேஸ்வரியை முறைப்படி பெண்கேட்டுப் பெரியோர் பெற்றோர் சம்மதத்துடன்
துணைவியாக்கிக் கொண்டார். சுப்ரமணியம் பரமேஸ்வரி திருமதி பரமேஸ்வரி பரமநாதன்
எனவானர். அந்த நன்னாள் 14.12.1959 எனவாயிற்று.
பரமநாதன் பரமேஸ்வரியின் இனிய இல்லற விழுதுகளாயினர் எண்மர்;.
நாகேஸ்வரி, நித்தியானந்தன், கமலாம்பிகை, ரேணுமதி, தங்கமணி, விஜயலட்சுமி, யோகநாயகி, சிவசுப்ரமணியம் என்போர் பெற்றோர் பெருமையுறும் தளிர்களாக
வளர்ந்தனர்.
கல்வி அறிவு, கேள்வி அறிவு,
ஒழுக்க நேர்த்தி என்பவை
குழந்தைகளின் வாழ்க்கைப் பாதைகளாயின. உரியகாலத்தில் உரியகலைகள் பயிற்றுவிக்கப்
பட்டதால் வாழ்க்கையின் உன்னத நிலைக்கு உயர்ந்தனர் பிள்ளைகள்.
கமலாம்பிகை இளவயதிலேயே தவறிப்போனார். அந்தப் பிரிவு பரமநாதனாரை படாதபாடு
படுத்திவிட்டது. ஏனைய குழந்தைகள் எழுவரினதும் முகம்பார்த்து ஆறுதல் கொள்வதைத் தவிர
வேறுவழி இருக்கவில்லை.
பிள்ளைகள் வளர்ந்தனர். மணப்பருவம் எய்தினர்.
நாகேஸ்வரிக்கு நகுலேஸ்வரனைத் துணையாக்கினார்: அவர்கள் வாரிசாக ராஜ்நாராயணன்,
கௌரீஸ்வரி, சாமினி துஷ்யந்தன் என நால்வரைப்
பேரர்களாகப் பெற்றார்.
நித்தியானந்தனுக்கு சம்பிகாவை மனையாளாக்கி மகிழ்ந்தார். சரித்தவை அவர்வழிப்
பேரனாகக் கண்டார்.
ரேணுமதியின் இணையானார் தங்கராஜா. அவ்வழிப்
பேரர்களாயினர் சந்தீப், ஜெகதீப்.
தங்கமணியைச் சந்திரமௌலீஸ்வரன் வரித்துக் கொண்டார். இவர்கள் வழியில் அமிர்தவர்ஷினி,
மோஷிகவர்ஷினி பேர்த்திகளாயினர்.
பேர்த்தி அமிர்தவர்ஷினி செந்தூரனின் மனங்கவர்ந்தார்: சேயோன் முதற்
பூட்டனானார்.
விஜயலட்சுமி ரவீந்திரனின் மனையாளானார்: அவர்வழிப் பேரர்கள்
சன்ரா, ஸ்டீபன், சுல்வியா.
யோகநாயகி சிவசோதியின் கரம்பற்றினார்: இனியன் பேரரானார்.
இதயம்நிறைந்த இல்லாள், ஏழு வண்ணங்களெனப்
பிள்ளைகள், அவர்கள் துணைகளாக
அன்பான ஆறு மருமக்கள், மகிழ்ச்சிதரப்
பதின்மூன்று பேரர்கள், ஒரு பூட்டன் எனக்
குறையில்லாத வாழ்வு.
தன் உடன்பிறப்புகளில் அறுவர் அமரரான நிலையில், தங்கை செல்வநாயகியின் முகம்பார்க்கும்
ஆறுதல்.
மனையாள் பரமேஸ்வரியின் உடன்பிறப்புகளில் கமலாம்பிகை. சிவப்பிரகாசம்
வாழ்வை நீத்துக்கொள்ள மகாலட்சுமி, சிவலிங்கம், இராமாசி ஆகியோர்மேற் காட்டும் அன்பு.
இனியசுற்றம், மனம்நிறை
நண்பர்கள், அமைதியான்
மனப்போக்கு, எதற்கும்
அலட்டிக்கொள்ளாத ஆன்மபக்குவம், நேரிய
வாழ்க்கைமுறை, நிமிர்ந்த நன்னடை, எல்லாம் அவன்செயலே என்ற சாந்தம்…….என,
உலக வாழ்க்கையில் உன்னத நிலையிலிருந்தார் பரமநாதனார். அமைதியான உள்ளமும்
அன்பான விழிகளும் அவருக்கு மெருகேற்றின.
சூழல் மாறியது… உடனலப் பாதிப்பு…மனைவிமக்கள் உற்றார் உறவுகளின் கவலை. சிலநாள்
படுக்கை… ஒருநாள் உலகைத்
துறந்து அமைதி பெற்றார்.
பக்குவமடைந்த ஆன்மா தனது பிறவித்தளையை
அறுத்துக் கொண்ட தினம் ஜூலை 15, 2018 எனவானது ஆங்கிலத்தில். தமிழர் கணிப்பில்
விளம்பியாண்டு ஆனித்திங்கள் 15 ஞாயிற்றுக்கிழமை என்றாயிற்று.
அன்னாரின் ஆன்மா இனி இந்தப் பூமிக்கு வரப்போவதில்லை. அது இறையுடன் சங்கமமாயிற்று.
அவ்வான்மா இனி வழிபாட்டுக்குரியது.
யாரும் கவல் கொள்ளத் தேவையில்லை. எல்லாம் சிவமயம்.
ஓம் நமசிவாய.
மனைவி துயரம்.
சிந்தையிலே
பூப்போட்டுத் தினம்தினமும் மகிழ்ந்திருந்தேன்
சிறியதொரு தேர்கட்டி வடம்பூட்டி இழுத்துவந்தேன்
முந்தையிலே
செய்தவத்தால் முகிழ்த்தவாழ்வு என்றிருந்தேன்
முற்றத்து மல்லிகையாய் வீடெங்கும்
மணத்திருந்தேன்
எந்தையிலாக்
குறைபோக்கும் என்னவராய்க் கண்டிருந்தேன்
என்நோவைத் தன்நோவாய் ஏற்றதுணை யென்றிருந்தேன்
வந்தஅந்தக்
காலனுன்னைக் காவுகொள்ளப் பார்த்திருந்தேன்
வழியற்ற பாவியாய் இன்றேங்கி நிற்கலானேன்.
கவிதைசொல்லிக்
கதைகள்சொல்லிக் காதல்சொல்லி வாழ்ந்தார்
கருத்துடனே வாய்த்தநல்ல கணவரெனத் திகழ்ந்தார்
சிவிகையமர்
மகிழ்வினிலே எனைத்திளைக்க வைத்தார்
சிந்தையெலாந் தமிழ்மணக்கும் சிறந்தவாழ்வு
தந்தார்
புவிதனிலே
பலர்போற்றப் பெருமைகொள்ளச் செய்தார்
புத்திரரைச் சிறக்கவைத்து என்மனதை வென்றார்
அவமாகி நொந்தழுது
இன்றுஅல்லலுற விட்டார்
ஐயன்எனைப் பிரிந்ததாலே அலமந்தேன் ஐயகோ!
பிள்ளைகள் துயரம்.
தந்தையாய்த்
தோழனாய் தமிழ்சொன்ன ஆசானாய்
தரணியிலே எமைக்காத்து நின்ற அப்பா
சிந்தையிலே
இறைநாமம் செய்கையிலே நேர்மையென
செவ்வழியைக் காட்டியெமை வளர்த்த அப்பா
முந்தையர்தம்
பண்பாடு மூத்ததமிழ் வரலாறு
முற்றுணர்ந்து எமக்குணர்த்தி வைத்த அப்பா
நொந்தின்று
வாடுகின்றோம் நொய்ந்நூலாய்த் துவள்கின்றோம்
நெடுந்தூரம் எமைவிட்டுச் சென்றீரே அப்பா!
துயர்சுமந்து
புயல்கடந்து திடமனத்த ராய்நின்று
துளிர்களெமை விருட்சமென வளர்த்த அப்பா
மயல்கொண்டு
நாமுயரக் கல்விதனை யூட்டி
மகிழ்ச்சியுடன் வாழவழி வகுத்த அப்பா
வெயில்மறைந்து
வசந்தமென வாழ்வுயரும் போது
விண்ணகந்தான் ஏகிவிட்ட தேனோ அப்பா?
செயல்மறந்தோம்
உனைக்காக்குந் திறனிழந்தோம் சேய்கள்நாம்
செய்வதறி யாதுலகில் திகைத்தோம் அப்பா.
மருமக்கள் துயரம்.
மருகரெமை
மக்களெனப் பார்த்த மாமா
மகிழ்வூட்டி எமையணைத்துக் காத்த மாமா
வருதுயரை
வளர்தமிழால் ஒறுத்த மாமா
வல்லசக்தி காக்குமென்று உரைத்த மாமா
வருநாளில்
உம்நினைவில் வாழ்வோம் மாமா
வடிவேலன் தாளிருந்து அருள்வாய் மாமா.
பேரப்பிள்ளைகள் துயரம்.
பேசத்
தெரியவில்லை பேசுமுறை பயிலவில்லை
பெறற்கரிய பாட்டனாரே எங்கே போனாய்?
வாசத் தண்டுகளாய்
வாடியிங்கே துடிக்கின்றோம்
வாய்திறந்து சொல்லும்வகை அறியோம் ஐயோ
நேசத் தோடுனது
மடியமருரும் இனிமைதனை
நினைப்பதற்குக் கூடஇனி முடிய வில்லை
தேசு நாமிழந்தோம்
தேடரிய சொத்திழந்தோம்
தெய்வமே உனையிழந்து போனோம் ஐயோ!
பூட்டப்பிள்ளை துயரம்.
ஓடிவிளை
யாடிவந்து உங்கள்மடி மீதமர்ந்து
ஓய்வெடுக்கும் மகிழ்ச்சியினி மீள்வதுண்டோ?
நாடிநல்ல
கதைகள்சொல்லி என்மனதில் உவகைபொங்க
நல்லபூட்டன் என்றென்னை யார்சொல்வார்?
தேடியழு
தாலுமுங்கள் தெய்வமுகம் காண்பதுண்டோ?
தெருவில்வீழ் பூமாலை யாகினேனே
கோடிகொடுத்
தாலும்நீங்கள் கூடவாழ்தல் ஆகுமாமோ
கொழுகொம்பு இழந்தகொடி யானேன்யானே!
தங்கை துயரம்.
அண்ணா அண்ணாவென்
றழைக்கின்ற போதிலெல்லாம்
அருகிருந்து துயர்துடைத்த தந்தையானாய்
கண்ணான
தங்கையெனக் கனிவுடனே எனையணைத்துக்
கண்போலக் காத்துநின்ற இனியஅண்ணா
விண்ணேகிப்
போயினையே வேதனையால் புலம்புகிறேன்
விழிதிறந்து தங்கையெனைப் பாராயோநீ?
கண்ணீரில்
மிதக்கின்றேன் கரமிழந்து துடிக்கின்றேன்
கருணையிலை யோவுனக்கு அண்ணாஅண்ணா!
மைத்துணர், மைத்துணிமார் துயரம்.
புன்னகை
தவழும்முகம் பொன்னிகர்த்த உயர்ந்தமனம்
புலர்பொழுதுச் சூரியனாய் உதவுங்குணம்
இன்னமுதாய்
மொழிவீச்சு எல்லோரும் மகிழ்பேச்சு
எவர்தமக்கும் ஊறில்லா இனியபண்பு
தன்னலம்
பேணாவாண்மை உறவோடு இசைந்தவாழ்க்கை
தமர்பிறர் எனப்பாரா இனியசேவை
இன்னமும்
பலவாய்நின்ற அத்தானை இழந்துநாங்கள்
எரிதழல்வீழ் புழுவாகத் துடிக்கின்றோமே.
உறவினர் துயரம்.
நிழல்தந்து
எமைக்காக்கும் தருவாய் நின்றாய்
நேர்மைநற் குணங்களால் எம்மை வென்றாய்
பழகாத
பேர்கள்மீதும் பரிவு கொண்டாய்
பக்குவமாய் நல்வழிகள் எடுத்துச் சொன்னாய்
அழஎம்மை
வைத்துஇன்று எங்கே சென்றாய்
ஐயகோ எட்டாத தூரம் போந்தாய்.
தேற்றப்பா.
கறந்தபால்
முலையேறா காய்ந்தமலர் உயிரேறா
இறந்தவுடல்
மீண்டெழுந்து நடமாடா – திருந்திழையே
ஈசன் வகுத்தவழி
இருந்துநாம் செல்வதன்றி
பேசுதற்கு ஏதுமுண்டோ
சொல்.
கந்தவனம் கோணேஸ்வரன்,
திருக்கோணமலை.( 2018.08.03)
026 222 1869.
புத்தகம் அமைய
வேண்டிய விதம்:
முன்னட்டை :
இதில் தெய்வப்படம் போடலாம். வண்ணத்தில் வருவது
சிறப்பு.
(எழுதப்படவேண்டியது)
‘யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை கிழக்கைச் சேர்ந்த
அமரர் இளையதம்பி பரமநாதன்
அவர்களின்
அந்தியேட்டி நினைவு தின மலர்.
விளம்பி ஆண்டு ஆடித்திங்கள்
முப்பதாம் நாள்.
(15.08.2018) புதன்கிழமை.’
(திருத்தங்கள் செய்யலாம்)
உள்பக்கம்:
அமரரின் படமும் மறைவுதினப்பாவும்.
அதன்பிறகு:
1.
தேவார
திருவாசகங்கள்;
2.
துணைவிழைப்பா
(தனிப்பக்கத்தில் அமையவேண்டும்)
3.
ஒரு மலரின் பயணம்
நிறைவுறுகிறது. (வசனங்கள் நான் தந்தவாறே
தனித்தனியாகப் பந்தி பிரித்தாற்போல் வரவேண்டும். தடித்த எழுத்துகள் அப்படியே
வரவேண்டும். எந்த மாற்றத்துக்கும் அனுமதிக்கக்கூடாது. முடிகின்ற பக்கத்தில்
இடமிருந்தாலும் அதை வெற்றிடமாகவே விடவும்)
4.
துயரப்பாக்கள். (பாடல்களின் பந்திகள்
குலைக்கப்படக்கூடாது. இடம் இல்லாவிட்டால் புதுப்பக்கத்தில் போடவும்.)
5.
தனது எழுபதுகளில்
தன் தந்தையாரைப்பற்றி அமரர் இளையதம்பி பரமநாதன் எழுதிவைத்த குறிப்பு.
6.
அன்புள்ள
அப்பா. (எழுதியவரின் பெயர் காட்டப்பட
வேண்டும்.)
7.
My Father (writer’s name should be indicated)
8.
நான் பார்த்த
தாத்தா.
9.
முதியோர்
நற்பணிமன்றக் கடிதத் தலைப்பு விடயம்.
10.
நன்றி மரணச்சடங்கில் கலந்து கொண்டோருக்கு,
துயர் பகிர்ந்தோருக்கு,
ஆறுதல் கூறியோர்க்கு,
மலர் வளையம் வைத்தோருக்கு,
உதவி, ஒத்தாசைகள் புரிந்தோருக்கு,
இன்றைய அந்தியேட்டி
நிகழ்விற் கலந்து சிறப்பித்தோருக்கு….
கருத்துகள்
கருத்துரையிடுக