இந்துசமய விளக்கம் 15
ஆன்மநேய ஒருமைப்பாடு பற்றிப் பேசும் எமது மதத்தில் மிருகங்களைப் பலியிடும் வழக்கம் எவ்வறு தோன்றியது? இதன் பொருள் என்ன?
இந்துமதம் பரந்த சிந்தனையின் ஊற்றாகும். வழிபாட்டு முறையிலோ வேறு விடயங்களிலோ இறுக்கமான கட்டுப்பாடுகள் எவற்றையும் எவருக்கும் விதிக்கவில்லை. அடிப்படை விதிகளை வகுத்து வைத்திருக்கின்ற அதே நேரத்தில், உலக நடைமுறைக்கும் பக்தனின் இயல்புக்கும் ஏற்ப நெகிழ்ச்சித் தன்மையையும் அது அனுமதித்து ஏற்றுக்கொண்டிருக்கிறது.
உதாரணமாக, கண்ணப்பநாயனார் தன் வாயிலிட்டுச் சுவைத்த இறைச்சியை இறைவனுக்கு நிவேதனமாகப் படைத்த செயலைக் குறிப்பிடலாம். இங்கே கண்ணப்பர் இறைவன்மேல் கொண்ட அன்பின்முன், ஆசார நடைமுறைகள் செயலிழந்து போகின்றன. ஆனால், அதற்காக நாமும் இறைச்சியைப் படைத்தாலென்ன என்று நினைப்பது பக்தியின் பாற்படாது. விதண்டா வாதத்தின் வகைப்பட்டு அகங்காரத்தில் வந்து நிற்கும்.
இந்த விஷயத்தை விளங்கிக் கொள்வதன்மூலம் மிருகங்களைப் பலியிடுவதன் தன்மையையும் ஓரளவு விளங்கிக் கொள்ளலாம்.
மனித மனத்துள் ஏராளமான விலங்குகளும் பறவைகளும் குடிகொண்டிருக்கின்றன. மற்றவரைக் கபடத்தால் வீழ்த்தும்போது நம்முள் நரி தலையெடுக்கிறது. பிறர்பொருளைக் கவரும்போது காகம் பறக்கிறது. பிறருடைய நல்ல குணங்களை ஒதுக்கிவிட்டுக் கூடாக் குணங்களைச் சுவைபட நாம் அலசும்போது, காகம் கழிவுகளில் சுகம் காண்பதுபோல் நாமும் சுகம் காண்கிறோம். பிறரைத் தாக்கும்போது சிங்கமாகவும் புலியாகவும், சிந்தனைகள் நிலையற்றுத் தாவும்போது குரங்காகவும், எண்ணங்களைத் தூரஇடங்களில் அலைய விடும்போது கழுகாகவும் நாம் செயல்படுகிறோம். இவ்வாறெனில் நாம் மனிதராகச் செயல்படுவது எப்போது?
இதனால்தான் எங்களிடமுள்ள மிருகங்களைப் பலியிட வேண்டுமென்றும், நல்ல மனிதனாக வாழத் தடையாக அமைந்திருக்கும் கட்டுகளை – விலங்குகளை – பலியிட வேண்டும் என்றும் இந்துமதம் கூறுகிறது. ஆனால், இந்த விளக்கத்துக்குத் தவறான பொருள் கொண்டவர்கள் சிலரால், உண்மையாகவே மிருகங்களைப் பலியிடும் நடைமுறை உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இதனால், மனிதனில் தங்கி வாழ்கின்ற அப்பாவி ஜீவன்களான ஆடு, சேவல் என்பன பலியிடப்படுகின்றன.
மனிதன் சுதந்திரமானவன்; சுயமாகச் சிந்திக்கக்கூடியவன்: தானாகச் செயல்படக் கூடியவன் என்ற இந்து மதத்தின் பரந்த கோட்பாடுகளின் காரணமாக, இத்தகைய நடைமுறைகளுக்கு எவராலும் இறுக்கமான நடவடிக்கைகள் எடுக்க முடிவதில்லை. அவர்களாக உணர்ந்து நடைமுறைகளை மாற்றிக் கொள்வதற்கு வாய்ப்புக் கொடுப்பது மட்டும்தான் இன்று செய்யக்கூடியதாகும்.
எனினும் ஒரு விடயத்தை நாம் அவதானிக்கலாம். மிருகங்களைப் பலியிடும் வழக்கம் கிராமிய மக்களிடையேதான் அதிகமாகக் காணப்படுகின்றன. பலிபெறுந் தெய்வங்கள்கூட கிராமத் தேவதைகளாகவோ, அல்லது சிறுதெய்வங்களாகவோதான் இருக்கின்றன. பெரிய ஆலயங்களிலோ சிவன், முருகன், கணபதி, விட்டுணு கோயில் கொண்டருளும் சிறு ஆலயங்களிலோ கூட மிருகங்களைப் பலியிடும் வழக்கம் இருப்பதில்லை. இதிலிருந்தே பிழையான பொருள் கொள்ளலால்தான் சிறு தெய்வ ஆலயங்களில் மிருகங்கள் பலியாகின்றன என்பது தெரியும்.
ஆகம விதிப்படி அமைந்த ஆலயங்களிலெல்லாம் கொடி மரத்தையடுத்துப் பலிபீடம் அமைக்கப்பட்டிருக்கும். இதன் அர்த்தம், ஆகக் குறைந்தது இறைவன் சந்நிதானத்துக்கு வரும் போதாகிலும் எங்களுடைய உய்வுக்குத் தடையான தளைகளை – விலங்குகளை – மனதில் தோன்றும் மிருக எண்ணங்களை பலிகொடுத்து இறைவனின் அன்பைப் பெறவேண்டும் என்பதுதான்.
நிறைவு.
கருத்துகள்
கருத்துரையிடுக