சைவநெறித் தத்துவம் -3



இறையின்  இயல்பு.

இறையின் இயல்பை இத்தகையது என்று வார்த்தைகளிற் பகர முடியாதாயினும் பிறப்பெடுக்கும் ஆன்மாக்கள் விளங்கிக்கொள்ளும் பொருட்டு அதன் இயல்புகள் சிலவற்றை சிவநெறி உரைக்க முற்படுகிறது.

இறை தோற்றமும் ஒடுக்கமும் அற்றது. நுண்ணியவற்றுள் மிகநுண்ணியதாகவும், பெரியவற்றுள் மிகப்பெரியதாகவும் விளங்க வல்லது.

பிரபஞ்சத்தை ஒடுக்கவும் விரிக்கவும் வல்ல ஆற்றல் கொண்டது. உயிர்களோடு தொடர்புகளை ஏற்படுத்தி அவற்றை மலத்தளையிலிருந்து மீட்டெடுத்துத் தன்னுடன் இணைத்துக்கொள்ளும் சக்தி கொண்டது.

இன்பதுன்பம் ஏற்றத்தாழ்வுகளுக்கு உட்படாதது. இன்னஉருவமுடையது என்றோ இன்ன அமைப்புக் கொண்டது என்றோ அடையாளங் காணமுடியாதது. ஆணென்றோ பெண்ணென்றோ அல்லது ஈரியல்பும் கொண்டதென்றோ கொண்டாட முடியாதது.

உலகமாகவும் உலகத்துக்கு அப்பாலாகவும், பிரபஞ்சமாகவும் பிரபஞ்சங் கடந்ததாகவும் நிலைத்து நிற்பது. தோற்றமும் விரிவுமாகி ஒடுக்கமும் மறைவுமாகி ஒவ்வொன்றிலும் இரண்டறக் கலந்து நிற்பது. உயிருக்குள் உயிராகவும் உயிரை நெறிப்படுத்தும் திருவாகவும் செயல்படுவது.

இறைவனை எண்குணத்தன் எனச் சிவநெறி உரைக்கிறது. தன்வயத்தனாதல், தூய உடம்பினனாதல், இயற்கை உணர்வினனாதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களினின்றும் நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றல் உடைமை, வரம்பிலின்பமுடைமை ஆகியவையே அவ்வெண் குணங்களாம்.

எல்லையற்ற அறிவு (அனந்தஞானம்), எல்லையற்ற செயற்பாடு (அனந்தவீரியம்),  எல்லையற்ற பண்பு (அனந்தகுணம்), எல்லையற்ற காட்சி (அனந்ததெரிசனம்), பெயரின்மை (நாமமின்மை), கோத்திரமின்மை, அவாவின்மை, அழியாவியல்பு என்பவற்றை இறைவனுக்குரிய எண்குணங்களாக வகுத்துள்ளார் பரிதியார் என்பதும் ஈண்டு அறியற்பாலது.
பரிதியார் திருக்குறளுக்கு உரைதந்த தலைசிறந்த அறிஞர்களில் ஒருவர். 

தனக்கெனவோர் உருவமும் நாமமுமில்லாத இறைவன் உயிர்கள் உய்யும் பொருட்டுச் சிவனாகத் தோற்றங் கொள்கிறார். தென்னாடுகளில் அவர் சிவன் என அழைக்கப்பட பிறநாடுகளில் வெவ்வேறு பெயர்களில் ஆராதிக்கப்படுகிறார். ‘தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' என்பதன் தாற்பரியமும் இதுதான்.

இறைவனை ஒருவனாகக் காண்போருக்கு அவர் ஏகனாகவும், பலமூர்த்தங்களிற் காண விழைவோருக்கு அநேகனாகவும் அருள்புரிகிறார். ‘ஏகன் அநேகன் இறைவனடி வாழ்க’ எனத் திருவாசகம் கூறுவது இதனைத்தான்.

சைவர்களுக்குச் சிவனே முழுமுதற் தெய்வம். சிவனன்றி வேறெதுமில்லை. நாமம் கடந்த இறைவன் பிறப்பெடுக்கும் உயிர்கள் புரிந்து கொள்வதற்காக சைவர்களிடையே சிவன் என்ற நாமத்தில் அறிமுகமாகின்றார். மேலும் படியிறங்கி வந்து சிவசக்தியாக பிரபஞ்ச இயக்கத்திற் கலக்கிறார். பக்தர்களின் மனப் பக்குவத்துக்கேற்ப பல்வேறு தோற்றங்களையும் பெற்று உலகளாவிய இறை சிந்தனையாளர்களுக்குத் துணையாக இருக்கிறார். பக்தர்கள் விரும்பும்வண்ணம் அவர்களோடு பல்வேறு மூர்த்தங்களில் உறவாடுகிறார்.

சிவமூர்த்தங்கள் இருபத்தைந்து என்கிறது சைவநெறி. அவையாவன: இலிங்கோற்பவர், சுகாசனர், உமாபதி, கல்யாணசுந்தரர், அர்த்தநாரீசர், சோமாஸ்கந்தர், சக்கரவரதர், திரிமூர்த்தி, ஹரியத்தர், தெட்சணாமூர்த்தி, பிட்சாடனர், சரபமூர்த்தி, நீலகண்டன், திரிபாதர், ஏகபாதர், பைரவர், இடபாரூடர், கங்காளர், காமாரி, காலசம்காரி, சலந்தராரி, திரிபுராரி, சந்திரசேகர், நடராஜர், கங்காதரர்.

எவ்வாறெனினும் இறைவன் ஒன்றே என்பதுதான் சைவசித்தாந்த முடிபு. அவரைச் சிவபெருமான் என விளிப்பது சைவர்களின் மரபு.

19.08.2018




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5