தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 03 - பகுதி 01
புணரியல் 1 இரண்டோ அல்லது அதற்கும் மேற்பட்ட சொற்களோ ஒன்றோடொன்று இணைந்து கொள்வதைப் பற்றிய தெளிவைத் தருவது புணரியல் ஆகும். நிலைமொழி – வருமொழி. சொற்கள் ஒன்றோடொன்று இணையும்போது இணைப்பை எதிர்பார்த்திருக்கும் சொல் நிலைமொழி என்றும் வந்து இணைகின்ற சொல் வருமொழி என்றும் இலக்கணநூல் இயம்பும். மரம் - வேர் ஆகிய சொற்களை எடுத்துக்கொண்டால் மரம் என்பது இணைப்பை எதிர்பார்த்திருக்கும் சொல்லாகையால் அது நிலைமொழி என்றாகிறது. வேர் இணைகின்ற சொல்லாகையால் வருமொழி எனவாகிறது. இயல்புப் புணர்ச்சி. இவ்வாறு இணையும் சொற்கள் இயல்பாக இணைவதுண்டு. இத்தகைய புணர்ச்சி இயல்புப் புணர்ச்சி என்று பெயர் பெறுகிறது. தம்பி + வந்தான் ஆகிய இருசொற்களையும் எடுத்துக்கொண்டால் அவை இணையும்போது எந்தவித மாற்றத்தையும் பெறுவதில்லை. தம்பி வந்தான் என்றே எழுத வேண்டியிருக்கிறது. எனவே இது இயல்புப் புணர்ச்சியின் பாற்படுகிறது. பூமரம், கலைவளம், கடல்வழி, பனைவெல்லம் என்பவையும் இயல்புப் புணர்ச்சியைச் சார்ந்தனவே. இயல்புப் புணர்ச்சியில், நிலைமொழி ஈற்றில் மெய்யெழுத்து அமைந்து வருமொழியின் தொடக்க எழுத்து ...