சைவநெறித் தத்துவம் (1)


சைவநெறியின்படி பதி பசு பாசம் ஆகிய முப்பொருளும் நிரந்தரமானவை. இவை ஒருபோதும் அழிவதில்லை. பதி என்பது இறைவன். பசு என்பது உயிர்கள் பாசம் என்பது உயிரைப் பற்றியிருக்கும் மலங்கள்.

பதியாகிய இறைவன் ஒருவனே. அதனால் இறைவனுக்கு ஏகன் என்றும் பெயருண்டு. ஆயினும் உயிர்களுக்கு உதவும்பொருட்டு பதி பலதோற்றங்களைப் பெறுகிறது. பலதோற்றங்களைப் பெறுவதால் இறைவனுக்கு அநேகன் எனவும் பெயருண்டு.

உயிர்கள் எண்ணிறந்தவை. இவை பிறப்பெடுப்பதன் நோக்கம் மலங்களின் பிடியிலிருந்து விடுபட்டு தம்மைத் தூய்மைப்படுத்திக் கொண்டு ஈற்றில் இறையுடன் இரண்டறக் கலப்பதேயாம். அனைத்து உயிர்களும் இறைவனுடன் சேரும்வரை மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்குந் தன்மையின.

பாசம் களையப்படவேண்டியது. பாசம் விட்டகன்றால்தான் உயிர்களுக்கு விமோசனம். பாசம் உயிர்களை அநாதியாகவே பீடித்திருக்கிறது. பாசத்துக்கு மலம் என்றும் பெயருண்டு. இந்தப் பெயரே அது அகற்றப்பட வேண்டியது என்ற கருத்தைத் தாங்கி நிற்கிறது.

பாசம். அல்லது மலம் மூவகைப்படும். ஆணவம் கன்மம் மாயை என்பவையே அவை. ஆணவத்தை மூலமலம் என்றும் சொல்வர். உயிர்களை விட்டு ஆணவம் இலேசில் அகலாது.

ஆணவம் நான் என்கிற அகங்காரத்தைத் தருகிறது. கன்மம் நமது செயல்களால் விளைகிறது. மாயை எம்மைச் செயல்படத் தூண்டுகிறது.

மாயை இந்த உலகத்தில் நிகழ்கின்ற இன்பதுன்பங்களை உண்மையானவை என நம்பவைக்கிறது. எப்படியேனும் உலகில் பேரோடும் புகழோடும் வாழ்வதுதான் வாழ்க்கையின் வெற்றி என ஏமாற்றுகிறது. பிறர் அன்றாடம் இறப்பதைக்கண்டும் ‘நான் இறக்கமாட்டேன்.’ என எண்ணத் தூண்டுகிறது. சுருங்கச் சொலின் உலக ஆசையைக் குறையவிடாமற் பார்ப்பதுதான் மாயையின் சிறப்பு.

கன்மம் நாம் செய்யும் செயல்கள்மூலம் விளைகிறது. பாவபுண்ணியங்களைச் சேர்ப்பது கன்மத்தின் வேலையாகும்.. பாவ புண்ணியங்களுக்கேற்ப உலகில் பிறவி வாய்க்கிறது. புண்ணியங்கள் மூலம் பிறவிதோறும் நல்வாழ்க்கையும் பாவங்களினால் துயரநிலையும் தீர்மானிக்கப்படுகின்றன.

மாயைமூலம் நிலையில்லா வாழ்க்கையை நிலையென்று நம்பியும் கன்மத்தின்மூலம் பாவ புண்ணியங்களைப் பெருக்கியும் திண்டாடும் ஆன்மாவுக்குத் தான் என்ற அகங்காரத்தைக் கொடுத்து ஆட்சிபுரிய வைக்கிறது ஆணவமலம்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5