இந்துசமய விளக்கம் 13


இறைவனுக்கு நைவேத்தியம் செய்வது, அழகான பூக்களைக் கொண்டு மாலையிடுவது, பூத்தூவுவது என்பவற்றின் நோக்கங்கள் என்ன? நைவேத்தியங்களை இறைவன் சாப்பிடுவதில்லையே… மலர்களும் வீணாகத்தானே போகின்றன…?

இவை இறைவன்மேல் மனிதர்கள் கொண்டிருக்கும் அன்பின் வெளிப்பாட்டுக்குக் கொடுக்கப்படும் உருவங்களாகும். நைவேத்தியத்தை இறைவன் உண்பதில்லை யென்பது சிறுகுழந்தைகளும் அறிந்த உண்மை. அப்படியிருக்க, காலங்காலமாக ஏன் இவ்வாறு நடந்துகொள்கிறோம் என்றால் அது எளிமையான, இனிமையான தத்துவத்தைக் கொண்டிருப்பதுதான்.


உங்களுக்கு ஒருவயது நிரம்பிய சிறுகுழந்தை இருப்பதாக வைத்துக்கொள்வோம். அந்தக் குழந்தைக்கு நீங்கள்தான் உணவூட்டவேண்டும்: குளிப்பாட்ட வேண்டும்: தலைசீவ வேண்டும். ஆனால், குழந்தை தன் பிஞ்சுக்கரங்களால் தனக்குக் கிடைத்த உணவில், கையில் அள்ளக்கூடியதை எடுத்து உங்கள் வாயில் வைக்கும்போது, அதன் பாசத்தை எண்ணி நீங்கள் நெகிழ்ந்து போவதில்லையா?


அந்த உணவை உண்பதால் நீங்கள் பசியாற முடியாது. அதுவுமல்லாது அது உங்களால் குழந்தைக்கென வழங்கப்பட்ட உணவின் சிறுபகுதியே. இவ்வாறிருக்க, உள்ளம் ஏன் நெகிழ்ந்து போகிறது? இங்கே உணவோ, அதன் பெறுமானமோ, பெற்றுக் கொள்கிறவருக்கு அது எவ்வளவு பயன்படுகிறதோ என்பவை முக்கியமல்ல. குழந்தையின் அன்புதான் முக்கியத்துவம் பெறுகிறது.


அதேபோல்தான், இறைவன் என்ற அளப்பரிய அன்னையால் எமக்களிக்கப்பட்ட உணவில் ஒரு சிறுபகுதியை, குழந்தை தனக்குக் கிடைத்த உணவைத் தன்னுடையது என்று நினைத்துக் கொள்வதுபோல, நாமும் எமது திறமையால் பெற்றுக் கொண்டதாகக் கருதிக்கொண்டு, இறைவனுக்குக் காணிக்கையாக்குகிறோம்.


நைவேத்தியம் படைக்கப்படுவதில் இன்னொரு சிறப்பும் இருக்கிறது. படைப்பதற்கு முன்னர் அது வெறும் உணவாகிறது. படைத்தபின்னர் பிரசாதம் எனப் பெயர் பெறுகிறது. இறைவனுக்கு எம்மால் வழங்கப்பட்ட உணவை இறைவன் மனதார ஏற்றுக்கொள்கிறார் என்ற இனிய நம்பிக்கைதான் அதற்குப் பிரசாதம் என்ற பெயர் வரக் காரணமாகிறது.


பிரசாதத்தை எவரும் தனியாக அமர்ந்து வயிறுபுடைக்க உண்பதில்லை. நைவேத்தியம் செய்தவர், பிரசாதத்தைப் பலருக்கும் பங்கிட்டுக்கொடுத்து, அவர்களைத் திருப்தியுறவைத்துத் தானும் திருப்தி காண்கிறார். இது பிறருக்குக் கொடுத்து உண்ணவேண்டும் என்ற பண்பைத் தூண்டுகிறது. தனக்குக் கிடைக்கக்கூடிய இறையருள், எல்லோருக்கும் கிடைக்கவேண்டும் என்ற பரந்த சிந்தனையை வளர்க்கிறது. இவற்றால் சமூக உறவு வளர்ச்சியுறுகிறது.


இதேபோன்றுதான் மலர்களை இட்டு வழிபாடு செய்வதும். மலர்களை இறைவனின் பாதக்கமலங்களிற் தூவுவதன்மூலம் அன்பை வெளிப்படுத்துகிறோம். இயற்கையில் எங்களாற் பெறக்கூடிய அழகானதும் மென்மையானதுமான பொருளாகிய மலரை இறைவனுக்கு அர்ப்பணிப்பதன்மூலம், அவரை அழகுசெய்து பார்க்க ஆசைப்படுகிறோம். மனிதகுலத்தின் ஜீவநாடியான இந்த அழகுணர்ச்சிதான் இன்றுவரை உலகை வாழ்வித்துக் கொண்டிருக்கிறது என்பது ஆழ்ந்து நோக்கிற் புலனாகும். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5