சைவநெறித் தத்துவம் (2)

பதியின் ஐந்தொழில்களும் ஆன்ம ஈடேற்றமும்.

உயிர்களை உய்விக்கும் பொருட்டு இறைவன் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து செயல்களை ஆற்றுகிறார். ஒரே இறைவன் தான் ஆற்றுகின்ற தொழில்களுக்கு ஏற்றவாறு தோற்றங்களைப் பெறுகிறார். 

படைத்தற் தொழிலைப் பிரம்மா என்ற தோற்றத்தில் இறைவன் ஆற்றுகிறார். படைத்தல் என்பது ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு தனு கரண புவன போகங்களை ஆக்குதலாகும். 

தனு என்பது இறைவனால் ஆன்மாக்களுக்கு வழங்கப்படுகின்ற உடம்பு. கரணம் என்பது உடம்பால் ஆன்மாக்கள் உய்த்துணரக்கூடிய ஆற்றல்சார் உணர்வு. புவனம் என்பது பால்வெளி அடங்கலாகவும் அதற்கப்பாலுமாகவும் பரந்து விரிகின்ற பிரபஞ்சம். நமது உலகமும் இதிலடங்கும். போகம் என்பது தனு எனப்படும் உடலால் இவ்வுலகிற் பெறக்கூடிய அனுபவங்களும் அவற்றின் பலாபலன்களுமாம்.

தனு கரண புவன போகங்களைப் பயன்படுத்தி இறையுடன் இரண்டறக் கலத்தலே உயிர்களின் இறுதி இலக்கு. அதுவரையில் அவை தமது வினைகளுக்கேற்பப் பிறவிகளை எடுத்துக் கொண்டேயிருக்கும்..

புண்ணிய வினைகளைச் சேர்த்த ஆன்மாக்கள் சொர்க்கத்தை அனுபவிக்கலாம். பாவ வினைகளைச் சேர்த்த ஆன்மாக்கள் நரகத்தை அனுபவிக்கலாம். சொர்க்கமும் நரகமும் ஆன்மாக்களின் இலக்கு அல்ல. சேர்க்கின்ற புண்ணிய பாவங்களுக்கேற்ப அவற்றின் பலாபலன்களை அனுபவிக்கின்ற நிலைகளே அவை. அந்நிலை முடிந்ததும் இறையுடன் கலக்கின்ற காலம் வரும்வரை அவை மீண்டும் பிறவி எடுக்கின்றன.

இறையுடன் கலக்கின்ற பேறு அடைதற்குமுன் ஆன்மா இருவினையொப்பு என்ற நிலையைப் பெறவேண்டும். இருவினையொப்பு என்பது பாவத்தையும் புண்ணியத்தையும் சமனாக மதித்தலாகும். அதாவது நன்மை தீமை அறியா நிலை. இது ‘தான்’ என்ற அகங்காரம் அற்றுப்போன ஆன்மாவுக்கே தோன்றும். அதுவரையில் பிறவிகள் தொடரும்.

ஆன்மாக்களின் பிரபஞ்ச வாழ்க்கைக்கு ஊறுநேராமற் பாதுகாத்தலே காத்தற் கடவுளான விட்டுணுவின் கடமை. தீயவற்றால் நல்லவை பாழ்பட்டுப் போகாமல் அவர் பாதுகாக்கிறார். தீயவை பலம் பெறுங்கால் இறைவனே அவதாரம் எடுத்து அவற்றைப் பலங்குன்றச் செய்து உலகைக் காக்கிறார்.

பிரபஞ்ச அசைவு என்பது அழிவிலும் ஆக்கத்திலும்தாம் தங்கியுள்ளது. இதுதான் அடிப்படை விதி. எனவே ஆக்கத்துக்கேதுவாக வேண்டாதவை அழிக்கப்படுகின்றன. இந்தப் பணியைச் செய்பவர் உருத்திரன் எனப் பெயர் பெறுகிறார்.

பிறவிகளால் பக்குவமடைகின்ற ஆன்மாக்களுக்கு உலக அனுபவங்களாற் கிடைக்கும் நிலையற்ற சுகதுக்கங்களிலிருந்து விடுபட உதவுகிறார் மகேஸ்வரன். இது மறைத்தல் எனப்படுகிறது.

பாவபுண்ணியங்களில் உழன்று பக்குவமடைந்த ஆன்மாக்களுக்கு அருள்புரிந்து அவற்றை அணைத்துக் கொள்ளும் பணியைச் செய்பவர் சதாசிவன். இதுவே அருளல் எனப்படுகிறது.

எத்தொழிலை எத்தோற்றத்திற் செய்தாலும் எப்பெயர் கொண்டு அழைக்கப்பட்டாலும் இறைவன் ஒருவனே. அவரே சிவபெருமான்.

14.07.2018

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5