மதங்களும் மனிதர்களும்.

இக்கட்டுரைத் தொடர் கடந்த நூற்றாண்டின் இறுதிக்காலப்பகுதியில் தம்பி மைக்கல் கொலினை ஆசிரியராகக் கொண்டு மட்டக்களப்பிலிருந்து வெளியான தினக்கதிர் பத்திரிகையின் ஞாயிறு தின இதழ்களில் என்னால் எழுதுப்பட்ட கட்டுரைகளில் ஒன்றாகும். இது 1999இல் நூல்வடிவம் பெற்றது. இன்றைய தலைமுறையனரின் வாசிப்புக்காக……..

மனக்கோலங்கள் 1


மதங்களும் மனிதர்களும்.


உலகிலுள்ள எந்த மதமும் தீயவழிகளைப் போதிப்பதில்லை. மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்றதான் அவை கூறுகின்றன. ஆனாலும் இந்த உலகத்தில் உண்மையான மனிதர்கள் அருகிக் கொண்டே போகிறார்கள்.

எந்த மதமும் பிறருடைய அமைதியைக் கெடுத்து வாழ் என்றோ, பிறருக்குத் தீங்குசெய்து உயர்ந்துகொள் என்றோ யாருக்கும் எந்தச் சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. ஆனாலும் இவையே இன்றைய வாழ்க்கைப் போக்காக மாறிக் கொண்டிருப்பதை நாம கண்கூடாகக் காண்கிறோம்.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்துதர்மம் போதிப்பதை,  இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாகப் புத்தமதம் கூறுவதை,  இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கிறிஸ்தவ,  இஸ்லாமிய மதங்கள் வலியுறுத்துவதை எத்தனை மனிதர்கள் பயபக்தியுடன் கேட்டு, அதன்படி நடக்கிறார்கள் என்றால் விடை மிகமிகக் கவலைக்குரியதாகவே இருக்கிறது.


இப்படியான சூழ்நிலையில்,  மதங்கள் போதிக்கும் நல்வழியில் நடக்கத்துணியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், .இந்து என்றோ,  பௌத்தன் என்றோ,  கிறிஸ்தவன் என்றோ,  இஸ்லாமியன் என்றோ,  மார்தட்டவோ,   எம்மை நாமே அடையாளப்படுத்திக் கொள்ளவோ பின் நிற்பதில்லை. மதங்கள் போதிப்பவையே எமது வாழ்க்கை நடைமுறையென்று நெஞ்சாரப் பொய் வேறு சொல்லி; வைக்கிறோம்.


ஏன்… மதங்கள் வாழ – மதக்கோட்பாடுகள் வாழ,  யுத்தங்கள்கூட நடத்தியிருக்கிறோம். இந்த யுத்தங்களில் அப்பாவித்தனமாக ஈடுபட்டு அழிந்து போனவர்களைப் புனிதமானவர்கள் எனப்போற்றி உயர்த்துகிறோம். இப்படி உயர்த்துவதன்மூலம் இன்னோரு யுத்தத்துக்குத் தேவை வரும்போது ஆட்களைத் திரட்டிக்கொள்ள வகை செய்கிறோம்.


அரசியல்வாதிகள் பாதுகாப்பாக இருந்துகொண்டு,  அப்பாவி மனிதர்களை ‘வீரர்கள்’ என்று ஏய்த்து,  யுத்தகளத்திற் பலிகொடுத்துத் தங்கள் சொகுசுகளைக் காப்பாற்றிக் கொள்வதில்லையா…..? அது போல்தான் வரலாறுகளில் சமயச்சண்டைகள் இடம்பெற்றிருக்கின்றன. மதத்தலைவர்கள் பாதுகாப்பாக இருந்துகொள்ள வெறியேற்றப்பட்ட சாதாரண மக்கள்தாம் உயிர் துறந்திருக்கிறார்கள்.


இவை ஏன்? நாம் சிந்தித்ததுண்டா?


இறைவனைத் தேடும் மதங்கள் இங்கே ஏன் சண்டையிட்டுக் கொள்ள வேண்டும்? பொய்,  களவு,  கொலை,  காமம்,  பொறாமை என்பவற்றை எல்லாமதங்களும் ‘தீயவை வேண்டாதவை’ என்று கூறுகின்ற போதிலும் தமக்குள் ஏன் இவை வேறுபட்டிருக்க வேண்டும்? இவற்றால் தவிர்க்கப்பட்ட பாவங்களும்,  இவற்றால் ஏற்கப்பட்ட புண்ணியங்களும்,  இவற்றின் இலக்காகக் கொள்ளப்பட்டிருக்கும் கடவுளும் ஒன்றாக இருக்கும்போது, இவற்றில் பிளவு நிற்பதெப்படி?


இங்கே விழிப்பாக இருப்பவன் மனிதனாகிறான். மயக்கம் கொள்பவன் மனச்சஞ்சலம் அடைகிறான்.

நாங்கள் விழித்திருப்பதா,  மயங்கிப்போவதா என்பதைத் தீர்மானிக்கும் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டீருக்கிறோம்.

மதங்கள் எப்போதும் புனிதமானவை.

அவை கொண்டிருக்கும் கோட்பாடுகளும் நடைமுறைகளும் பவித்திரமானவை என்பதில் எவருக்கும் கருத்து வேறுபாடில்லை.

மதங்களை மனிதர்கள் சார்ந்திருக்கும்போது தெய்விகத் தன்மையும்,  மதங்கள் மனிதர்களைச் சார்ந்திருக்கும்போது பைசாசத் தன்மையும் ஏற்படுவதை நாம் கண்கூடாகக் காணமுடிகிறது.


மதம் மனிதர்களைச் சார்ந்திருக்குமானால்,
எனது மதம் உயர்ந்தது, அதன் கோட்பாடுகளே சிறந்தவை, பிறமதங்கள் சரியான வழியைக் காட்ட வல்லன அல்ல, என்பவை போன்ற திமிரான எண்ணங்கள் அப்பாவித்தனமாக அம்மனிதனில் குடியேறும்.


இதன் பலனாக,  பிறமதங்களை இழித்துரைப்பதில் இன்பம்காணும் சுபாவமும்,  தனது மதத்துக்கு வலைபோட்டு ஆட்களைப் பிடிக்கும் தன்மையும் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகின்றது.


மதச் சண்டைகள், மத வேறுபாட்டு உணர்வுகள், இத்தகைய சிறுபிள்ளைத்தனமான மனிதர்களால்தான்  ஏற்படும்.

ஆனால், மதங்களை மனிதர்கள் சார்ந்திருக்கும்போது,  அவை காட்டும் நல்வழிகளும் அவை வகுத்துள்ள வாழ்க்கை முறைகளுமே அம்மனிதர்களை ஆட்கொள்கின்றன. மதங்களின் நற்போதனைகளால் ஆட்கொள்ளப்படும் மனிதருக்கு அல்லாவும்,  சிவனும்,  கர்த்தரும்,  புத்தரும் ஒன்றாகத் தெரிவார்கள்.
இறைவன் ஒருவனே,  எப்பெயரிட்டு அழைத்தாலும் இறைவன் அவனே,  என்ற தெளிவு ஏற்படும். பிறரின் நியாயமான வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்காமல் வாழ்வதே சரியான வாழ்க்கை என்ற உணர்வு ஏற்படும்.


இவர்கள் பிறமதங்களை இழித்துரைக்க மாட்டார்கள். எல்லா மதங்களிலும் வழிகளிலும் நியாயங்கள் உண்டென ஏற்றுக்கொள்வார்கள்.

புpறமதங்களையும் பிறரையும் இரண்டாந்தரமாக எண்ணி இழிவுபடுத்தி,  அமைதியின்மைக்குக் காரணமான மனிதனாக வாழப்போகிறோமா,  அல்லது எல்லோரும் எம்மவரே, எல்லாமதங்களும் நேரியவையே என்ற மனிதநேயங் கொண்டவராக வாழப்போகிறோமா, என்று நாம் நிதானித்துத் தீர்மானித்துக் கொள்ளவேண்டும்.


வுழிபாட்டுமுறைகளும், அவை சம்பந்தமாகக் கொண்டிருக்கும் கருத்துகளும்தான் ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்தை வேறுபடுத்திக் காட்டுகின்றனவே யொழிய, கடவுள் சம்பந்தமாக அவை கொண்டிருக்கும் நம்பிக்கையிலோ கருத்திலோ அல்ல என்பதை விளங்கிக் கொண்டால் பல பிரச்சினைகள் தாமாகவே மறைந்து போகும்.


ஏந்த மதத்தைச் சார்ந்திருந்தாலும் உண்மையான பக்தன் ஒருவனுக்குக் கடவுள் உருவமுடையவரா அல்லரா என்பதிலோ,  உருவவழிபாடு சரியானதா அல்லதா என்பதிலோ ஒருபோதும் பிரச்சினை எழமாட்டாது.


கடவுளே இல்லை என்று ஒருவன் அடித்துச் சொன்னாலும்கூட,  “கடவுளே! இவனை மன்னித்துவிடு.” என்று வேண்டிக்கொண்டு அமைதிகாக்கும் சுபாவம்தான் அவனது தெய்வ நம்பிக்கைக்குச் சான்றாகிறது.


மதங்களின் சடங்கு,  சம்பிரதாயங்கள்,  நடைமுறை வழக்குகள் எல்லாம் அவை தோன்றிய இடத்தையும்,  காலத்தையும்,  சமூகஅமைப்பையும் பொறுத்தன.


கீழைத்தேய தர்மமான இந்துமதம் குளித்துத் தோய்த்துலர்ந்த ஆடையணிந்து,  அங்கவஸ்திரம் அணியாமல் கோயிலுக்குப் போ என்ற வற்புறுத்துவது சுத்தம் பேணும் நடவடிக்கையே என்பதை உணர்ந்தால்,  கனடாவில் வசிக்கும் கிறிஸ்தவன் அவன் தர்மப்படி ‘கோட்சூட்’ சப்பாத்து சகிதம் கோயிலுக்குள் நுழைவதும் சுகம்பேணும் நடவடிக்கை என்று ஏற்றுக்கொள்வதில் சிரமம் இருக்காது.


பாலைவனம் சார்ந்த மக்கள் திசையை வணங்கியது சூழல் அமைப்புக் கருதியே என்பதைத் தெரிந்துகொண்டால்,  இந்திய மக்கள் கடவுளுக்குக் கருங்கல்லிலே உருவங் கொடுத்ததும் சூழலிற் கிடைக்கக்கூடிய அழியாப்பொருள் என்பதினாலேயே என்பதும் தெளிவாகிவிடும்.


கட்டட அமைப்புகளைப் பாருங்கள்: யன்னல் கதவுகள் வைத்த மூடிக்கட்டிய குளிர்வலயக் கிறிஸ்தவ ஆலயங்கள்போல் நம்நாட்டுக் கோவில்களை அமைத்தால் வழிபட வருபவன் வெந்து மடிந்து போகமாட்டானா?


காற்றும் ஒளியும் தாராளமாகப் புகுந்து வரத்தக்க நம்நாட்டு ஆலயக் கட்டடஅமைப்பில் இங்கிலாந்துக் கிறஸ்தவ தேவாலயம் அமைக்கப்பட்டால் அங்குள்ள பக்தன் குளிரால் நொந்து நடுங்கிப் போய்விட மாட்டானா?


கட்டடத்தால்,  வாழிடத்தால்,  சமூகஅமைப்பால்,  பழக்கவழக்கங்களால் விளைந்த இடத்துக்கு இசைவாக அமைந்த முறைகளிலோ, m கோட்பாடுகளிலோ நாம் ஏன் பேதம் பார்க்க வேண்டும்? உயர்வு தாழ்வு நோக்க வேண்டும்?


குளிர்காலத்துக் கம்பளிச் சட்டையிலும்ää கோடைகாலத்துப் பருத்திச் சட்டையிலும் ஏற்றத்தாழ்வு பார்ப்பது எவ்வளவு மடைத்தனம்?


அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.
‘உன்மதக்கோட்பாடுகள் சரியில்லை;: என் மதத்துக்கு வா.’ என்று அறிவிலித்தனமாக மதமாற்றம் செய்ய முயல்கிறோம். இறைவனிடம் எங்களை இட்டுச்செல்வதற்காக எம் முன்னோர்களால் காட்டப்பட்ட வழிகளுக்கு உயர்வு தாழ்வு பூசி ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டுகிறோம்.


மதங்களை உலக ஆசாபாசங்களுக்கு அடிமைப்படுத்தும் அசிங்கமான காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறோம்.

இதைத் தவிர்ப்பது எப்படி?


நீ எந்த மதத்தில் பிறந்தாயோ அந்த மதத்தை ஏற்றுக்கொண்டு வாழ்வதுதான் தர்மம் என்று உறுதியாக நம்பு.
எனக்க என் தாய் உயர்ந்தவள் என்பதுபோல அயலானுக்கும் அவன் தாய் உயர்ந்தவள் என்பதில் உறுதியாக இரு.

ன் வழிபாட்டு முறை – கொள்கைகள் சரியானவை என்றும் உயர்ந்தவை என்றும் நம்புகின்ற அதேவேளை அயலான் வழிபாட்டு முறையோ கொள்கைகளோ பயனற்றவை என்ற கனவிலும் எண்ணாதே.

உன்னைப்; போல் பிறரையும் நேசித்து ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.’ ஏன்ற சிந்தனை உனக்குள் உருவானால், ‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்று ஒவ்வொரு மனதிலும் இனிய சிந்தனை தோன்றும்: அமைதி ஓங்கும்.
:


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5