நறுந்தொகை.

நறுந்தொகை.


கொற்கைத் துறையின் முத்தின் வனப்பும்
பொற்கைப் பாண்டியன் புகழ்நெறிச் சிறப்பும்
உற்ற தமிழ்வளர் பாண்டி நாட்டில்
நற்றமிழ் செய்த நாயக வாழி.


நறுந்தொகை யென்னும் வெற்றி வேற்கை
தருமறி வுரைகள் தவிர்த்திடல் தகுமோ
பெருவளங் கொண்ட பண்புடை வேந்தன்
அதிவீர ராம பாண்டிய வாழி.


நாற்றிசை புகழும் நறுந்தொகை யாற்றி
வேற்கை தாங்கிடும் வெற்றியைப் போற்றி
நூற்பயன் வியந்திட நுவலருங் கவிதரு
நாற்படைத் தலைவ: நின்றமிழ் பெரிது.


அழகு என்பது அவரவர் இயல்பும்
பழகு தொழிலும் சார்ந்திடக் கண்டு
உழவன் வேந்தன் குலமகள் விலைமகள்
பழுதறு கல்வி பார்ப்பனர் செல்வர்.


மந்திரி பெண்டிர் வைசியர் அறிஞர்
தந்திரி வறிஞர் தம்மழ குரைத்து
செந்தமிழ் சிறக்க நறுந்தொகை செய்த
நந்தமிழ்த் திருவை நானிலம் வியக்கும்.


பிறப்பாற் குலத்தாற் பெருமைகள் ஏதுள
சிறப்புடைக் கல்வியிற் தானே சீர்மை
பொறுப்புடன் அதைத்தரு குருவே இறைவன்
இரப்பினுங் கல்வியைப் பெறுதல் இனிதே


பெற்றமும் கழுதையும் மேய்புல் நிலமொரு
கொற்றம் பெற்று உயர்தலு முண்டு
முற்றம் நிறைந்த மாடி மனைகளும்
சுற்றம் இழந்து போதலும் உண்டு


நாளும் கிழமையும் நலிந்தோர்க் கேதவர்
வாழும் வகைதான் வையகச் சிறப்பு
கூழிடுஞ் சாலையைச் செல்வரு மடைவர்
பாழ்நிலை யோர்கோன் பக்கலும் அமர்வர்


இவையே உலகில் இயல்தரு நிலையென
அவையில் வைத்தனன் அறிந்து ஒழுகி
சுவைதமிழ் பருகி நறுந்தொகை அழகில்
இயைபுடை வாழ்க்கை அமைத்திடு வோமே.


கந்தவனம் கோணேஸ்வரன்
13.04.2020

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5