காதலை வாழி மதி

குறள்மொழியின்பம்    குறள் 1118

காதலை வாழி மதி

என்னவளும் வெண்ணிலவும் ஒப்புகையில் ஒன்றாமோ
என்னவளின் இளஞ்சிரிப்பு வெண்ணிலவில் உண்டாமோ
தண்ணிலவு குளிர்கொடுக்கும் தளிர்க்கரங்கள் அதுதருமோ
என்னவளின் தளிர்க்கரங்கள் தந்தசுகம் போல்வருமோ


என்னவளின் முகஞ்சுற்றி எப்போதும் கருமேகம்
வெண்ணிலவே உனைச்சுற்றி மழைவந்தால் தான்மேகம்
கண்மறைக்கும் இருளில்தான் உந்தனொளி துலங்கும்
பொன்மயிலாள் தருமொளியோ பகலிரவாய் விளங்கும்


வளர்ந்திருப்பாய் தேய்ந்திருப்பாய் வானிலன்றோ நீயிருப்பாய்
தளர்வறியா என்னவளோ தமிழ்போல  அருகிருப்பாள்
களங்கமிலா முகமலர்வால் கவிதையெனக் கனிந்திருப்பாள்
விளங்குகின்ற என்னவளை நீநிகர்த்தல் எவ்விதமோ?


உன்னழகு கவிஞர்கட் குறுபொருளாய் ஆவதுண்டு
மன்னவர்தம் வமிசத்து வளர்பெயராய் அமைவதுண்டு
என்னவளோ எனக்குமட்டும் இலக்கியத்துக் கருவாவாள்
வெண்ணிலவே காதலில்நீ பொதுவான பொருளாவாய்.


சிவனாரின் செஞ்சடையில் சிறுநிலவாய்த் தானிருப்பாய்
தவமாளும் பார்வதியின் நெற்றிக்கே ஒப்பாவாய்
நவமான என்னவளோ நாயகியாய் நெஞ்சமர்ந்தாள்
உவமானம் வேண்டாமே உயர்மதியே நீவாழி..


கந்தவனம் கோணேஸ்வரன்.
06.05.2020


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5