கவிகாளமேகம்.

கவிகாளமேகம்.


திருக்குடந்தை யிற்பிறந்தார் திருவரங்கத் தில்வளர்ந்தார்
திருவானைக் காமோகனாங்கி வடிவினிலே தனையிழந்தார்
விருப்புமே லிட்டதனால் விட்டுணு வையும்மறந்து
விரைந்துசைவத் திருவெனவே வாழ்துணைக்காய் வந்தார்.


மோகனாங்கி வருகைக்காய்க் காத்திருந்து செயலிழந்து
தாகமுடன் இருளினிலே தனியாகச் சோர்ந்திருந்தார்
அகிலாண்ட தேவியவள் அழகிய சிறுபெண்ணாய்
மகிமைபெறு தாம்பூல எச்சிலையவர் வாயுமிழ


காதலிதா னென்று கண்மயங்கிப் போதையிலே
ஆவலுட னதையேந்தி அவர்சுவைத்து மகிழந்ததனால்
போதவிழ்ந்த மலரெனவே புதுப்புனலின் ஊற்றெனவே
தீதகற்று தமிழ்க்கவிதை கொட்டும்காள மேகமானார்.


.வஞ்சகமாய்ப் பகழ்ந்தார் வளர்சிலேடை தந்தார்
அஞ்சு ‘டு’ வைத்து அரியவெண்பா தான்படைத்தார்
வெஞ்சினங்கள் பொழிந்தார் வித்துவத்தில் திளைத்தார்
அஞ்சலிலாக் கவிபடைத்து அன்னைத்தமிழ் பணிந்தார்.


திருமலை ராயன்மனையில் செருக்கோடு வீற்றிருந்த
அதிமதுரக் கவியென்பான் அகந்தையை அடக்கிவைத்தார்
அறுபத்து நான்குபேரின் அகந்தைநிறை தலைக்கவியைச்
சிரந்தாழ்த்தி வணங்கவைத்துச் செயற்றிறனில் உயர்ந்துநின்றார்.


திருமலை ராயன்முன் வாணிதரு வாசனத்தில்
பெருமிதமாய் அமர்ந்திருந்து இம்மெனில்எழுநூறு அம்மெனி லாயிரம்
பொருதுகவி பிறக்காதோ என்றுரைத்த பெருமகனார்
யமகண்டம் பாடியங்கு வாதுவென்ற திருமகனார்.


தமிழன்னை பெற்றெடுத்த தணியாத கவிக்கொடையன்
அமிழ்தாக அன்னைக்கு அணிசேர்த்த பெருங்கவிஞன்
கவிகாள மேகமென்னும் கவியுலகின் பெருந்தலைவன்
புவிபோற்றும் புலவோனைப் பேறுணர்ந்து வாழ்த்துதுமே.



கந்தவனம் கோணேஸ்வரன்
08.03.2020

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5