எனது மண்பெற்ற இளைய தலைமுறைக்கு…

 எனது மண்பெற்ற இளைய தலைமுறைக்கு………

அரசியலுக்கு வருபவர்கள் நேர்மை,  ஒழுக்கம்,  அறிவு,  துணிவு,  செயலாண்மை ஆகிய ஐந்து திறன்களைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு அமையின்தான் நாடு நலம்பெறும்: மக்களும் நன்மையடைவர்கள். துரதி~;டவசமாக இலங்கையில் இத்தகைய சிறப்புகள் அரசியல்வாதிகளிடம் காணப்படுவதில்லை.


நேர்மை இல்லாதவர்கள் அரசியலுக்க வந்தால் பெரியவர்கள் போலவும் சாதனையாளர்கள் போலவும் தோற்றம் பெறக்கூடும்; ஆனால் மக்கள் மனதிலே அவர்கள் நிறைவான இடத்தைப் பெறமாட்டார்கள். பல அரசியல்வாதிகள் கோடிகோடியாகச் சொத்துச் சேர்த்தமைக்கு நேர்மையின்மைதான் பிரதான காரணம். இவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்காமல் வாழ்ந்து மறைந்தும் விடலாம். ஆயினும் மக்கள் இவர்களைத் திருடர்கள் வரிசையிலேதான் வைத்திருப்பார்கள்.


பலபேரை நாம் கண்முன்னாலேயே பார்க்கிறோம்: நேற்றுவரை தெருவில் சுற்றிக் கொண்டிருந்தவர்கள் அரசியலுக்கு வந்து சிலகாலத்துக்குள்ளாகவே தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்திப் பரம்பரைத் தனவந்தர்கள் போலப் பவனி வருகிறார்கள். இவர்களுக்கு இத்துணைச் சிறியகாலத்துள் எவ்வாறு அவ்வளவு சொத்துகள் சேர்ந்தன என்ற யாரும் கேள்விகேட்க முடியாது. யாராவது ஒருவேளை கேட்டு விட்டால்கூடச் சரியான பதில் கிடைப்பதில்லை.


ஏதாவதொரு குற்றச்செயலில் இவர்கள் சிக்கினாலன்றிப் புலனாய்வுத்துறைகூட இவர்களுக்குச் சொத்துச் சேர்ந்த விதம் பற்றி அலட்டிக் கொள்வதில்லை. இத்தகைய சமூகவிரோதிகளால் புதிதாக அரசியலுக்கு வருகின்ற இளைஞர்கள்கூடக் கெட்டுப் போய்விடுகிறார்கள். ஏமாற்றி உழைப்பதுதான் கெட்டித்தனமான அரசியல் என்ற நம்பியும் விடுகிறார்கள். பிறகென்ன, அரசியலுக்கு வருவது உழைப்பதற்காகத்தானே என்று முடிவும் செய்து விடுகிறார்கள்.


இலங்கையில் தொழில் செய்பவர்களைவிட அரசியல் செய்பவர்களிடம்தான் அதிகமாகப் பணம் புரள்கிறது. அந்த அளவுக்கு அரசியற்துறை கெட்டுப்போய்க் கிடக்கிறது. படித்தவர்களைக் கொண்டு அரசியலின் பிழையானபோக்கை நேர்ப்படுத்தி விடலாமா என்றுபார்த்தால் அதுவும் பகற்கனவாகவே தெரிகிறது. அரசியலுக்குள் காலடிவைக்கும்போது படித்தவர்,  பண்பான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றெல்லாம் அறியப்பட்டவர்களிற் பெரும்பாலானோர் அரசியலை  நெறிப்படுத்துவதற்கு மாறாகத் தாமும் அரசியல் அழுக்குகளைத் தம்முதுகின் மேலேற்றிக் கொண்டு அதற்கு நியாயம் சொல்லும் கலையிலும் கைதேர்ந்தவர்களாகி விடுகிறார்கள்.


நேர்மையின்மை என்பது பணம்புரட்டுவது மாத்திரமல்ல. நாக்குப் பிறழ்வதுகூட நேர்மையின்மைக்கான அடையாளந்தான். பதவியைக் கைப்பற்றுவதற்கும் கைப்பற்றிய பதவியைத் தற்காத்துக் கொள்வதற்கும் அவர்கள் படும்பாடு சொல்லி மாளாது. பதவிச்சுகம் அவ்வாறு அவர்களை ஆட்டிவைக்கிறது. பதவியை இழந்தவர்கள்கூட வீட்டில் நித்திரையின்றித் தவிக்கிறார்கள். நாட்டைக் குழப்பியேனும் பதவி பெற்றுவிடலாகாதா என யோசிக்கிறார்கள். பணம்செலவழித்தேனும் இன,  மத,  மொழிப் பிரச்சினைகளைத் தூண்டிவிட்டு அவற்றை அணைப்பார்போல வேடமிட்டு மக்களைத் தம்பக்கம் திருப்பி அதிகாரசுகத்தை மீளப் பெற்றுவிட முடியாதா எனச் சிந்திக்கிறார்கள்.


கொள்கை வழிநின்று மக்களைக் கவர்வதற்குப் பதிலாகப் பலர் கட்சித் தலைவரின் காலடியிற் கிடந்து பதவி பெற்றுவிடலாமெனக் கனவு காண்கிறார்கள். இயற்கைக் கடன் கழிப்பதற்குக்கூடக் கட்சித் தலைவரின் அனுமதி பெறுவது விசுவாசத்தின் வெளிப்பாடு என நம்புகிறார்கள்.. இந்த பத்திசாலித்தனமான விசுவாசம் அவர்களுக்கு ஒருவேளை பதவியைப் பெற்றுத்தரவும் கூடும். பணங்கொட்டும் மரமாகப் பதவி மாற்றமடையவுங் கூடும். என்ன பயன்.. மக்கள் இவர்களைப் அரசியற் பதராகத் தான் நினைக்கிறார்கள்.


வேறுசிலர்,  தேர்தல்கள் நெருங்குஞ் சமயத்தில் கூலிக்கு அடியாட்களைத் தேடிப்பிடித்து ஆதரவாளர்கள் போல நடிக்க ஆலோசனை வழங்கிக் கட்சித் தலைவரின் வீட்டுக்கே அனுப்பிவிடுகிறார்கள். பணம் வாங்கியவர்களும் “அண்ணன் அழகனுக்கு டிக்கட் கொடுக்காவிட்டால் கட்சியை உடைத்துத் தளிளிவிடுவோம்.” என்ற பாணியில் கூட்டமாகக் கோசம்போட்டுக் கட்சித் தலைவரைப் பயமுறுத்தியும் விடுவார்கள். அவர்கள் பணத்துக்காகச் செயல்படுகிறார்கள் என்பதை நன்கறிந்தும் கட்சித் தலைவரால் அதுபற்றிக் கேட்க முடிவதில்லை. கேட்டால் ஜனநாயகத்தை மதியாமல் தலைவர் தொண்டர்களை அவமதித்து விட்டார் என்ற அவப்பெயர் பரவிவிடும் என்றபயம் தலைவருக்கு. ஆனால் அழகன் அண்ணனோ சாந்தசொரூபியாகப் பின்னர் வந்து ஏதுமறியார்போல் தலைவரிடம் அன்பு காட்டுவார். தலைவரும் கொடுப்புக்குள் சிரித்தபடியே அவருடன் அன்பாக உரையாடுவார்.


அரசம்பளம் பெறுகின்ற பதவிகளில் அறுபதுவயதுவரை காலங்கடத்திவிட்டுப் பிறகு சிலர் அரசியலுக்கு வருகிறார்கள். ஓய்வகாலத்தில்கூட வீட்டில் நிம்மதியாக இருக்க அனுமதிக்காத குடும்பங்களைச் சேரந்தவர்கள் அவர்கள். வீடு அனுமதிக்கவில்லை என்பதற்காக அரசியலுக்கு வந்து மக்களைப் பாழ்படுத்துகிறோமே என்று இவர்கள் யோசிப்பதில்லை. மாறாக இறக்கும்வரை ஏதாவது பதவியில் ஒட்டிக் கொள்வதே அவர்களது ஆசை. அதற்காக, தான் ஏற்கனவே வகித்த அரசபதவியூடாக மக்களுக்குச் சேவையாற்றியதாகக கதைசொல்வார்கள். சேவை வேறு: பெறுகின்ற சம்பளத்துக்குச் செய்யும் கடமை வேறு என்பதைப் புரியாத சக்கைகள் இவர்கள்.


அரசியலுக்குத் தொண்டுமனப்பான்மை உள்ள மனிதர்களே இன்று தேவை. குறிப்பாகத் தமிழர் அரசியலுக்காகப் குளிர்ப்பதனி பூட்டிய அறையில் இருந்து சேவைசெய்வதாகப் போக்குக் காட்டாமல் மக்களுடன் அடிமட்ட நிலையில் பழகி அவர்களது மனவோட்டங்களையும் தேவைகளையும் புரிந்து செயலாற்ற வல்லவர்களே தேவை. இலகுவாகச் சொல்லப்போனால் ஐயாக்களைவிட அண்ணன்மார்களே இன்று மக்களுக்குத் தேவை. புள்ளிவிபரவியலாளர்களை விட மக்களுடன் இயைந்து நடைபோடுபவர்களே தேவை.


இவற்றுக்குத் தீர்வு காணவேண்டுமானால் தொண்டு மனப்பாங்குடைய இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும். இப்போதுள்ள கசடர்களதும் காக்கா பிடிப்பவர்களதும் ஆதிக்கத்தைத் தகர்த்தெறிய வேண்டும். போலிகளை ஓடஓட விரட்டவேண்டும். அது இளைஞர்களால் மட்டுமே முடியும்..
போலித்தனமற்ற உண்மையான இளைஞர்களைத் திருக்கோணமலைத்தாய் எதிர்பார்த்து ஏங்குகிறாள். தாயின் கனவை நனவாக்க வேண்டாமா? இளைஞர்களே முன்வாருங்கள். இந்த மண்ணுக்கு விடிவு தாருங்கள்.


கந்தவனம் கோணேஸ்வரன்
26.02.2020

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5