இலக்கியத்துளி 14
இலக்கியத்துளி 14
சொக்கநாதப் புலவர் சிறந்த சிவபக்தர். சிவனல்லால் வேறு தெய்வமும் உளதோ என்று கேட்பவர். பலநாள் சிவனை வழிபட்டும் சிவனின் அருள் தனக்குக் கிடைக்கவில்லையே என்ற கவலை அவருக்கு. யார் யாருக்கோவெல்லாம் அருளும் பெருமான் தன்னைக் கண்டு கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் அவரை வாட்டிற்று. சிவபிரானைத் திட்டித் தீர்ப்பது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.
அம்பலவாணரிடம் நேரே செல்கிறார். “சாக்கிய நாயனார் உன்னைக் கல்லால் அடித்தார்: அருச்சுனன் உன்னை வில்லால் அடித்தான்: கண்ணப்ப நாயனார் செருப்பாலேயே அடித்தார்: நீ வந்திக்குக் கூலியாளாகப் போனபோது பாண்டியன் பிரம்பால் அடித்தான். இவர்களுடைய செய்கைகளையெல்லாம் பொறுத்துக் கொண்டு அவர்களை நல்லவர்கள் என்றெண்ணி அருள் புரிந்த சிவனே, இப்படியான எதனையும் செய்யாது உன்மீது மலர்களை எறிந்த மன்மதனை எரித்த நீதியென்னை?” என்று கடிந்து கொள்கிறார்
.
அப்போதும் புலவரின் கோபம் தீரவில்லை. தொடர்கிறார்.
“நற்குலப் பெண்ணான உமாதேவிக்கு இடப்புறத்தைத் தியாகம் செய்தவனே, கல்லால் எறிந்தவருக்கும், செருப்பால் உதைத்தவருக்கும், வில்லால் அடித்தவருக்கும் அருள் புரிந்த தியாகேஸ்வரனே, கண்களில் நீர்சொரிய எல்லாம் உன்னருளே என்று பக்தி செலுத்தி வாழ்கின்ற என்போன்றோருக்கு எதுவும் கொடுக்காமல் இருக்கிறாயே…இது நியாயமா?” என்றுங் கேட்கிறார்.
புலவரின் கோபத்திற் பிறந்த பாடல்கள் இவைதாம்:
“செல்ஆரும் பொழில்சூழ் புலியூர் அம்பலவாண தேவாஉம்மைக்
கல்லாலும் வில்லாலும் செருப்பாலும் பிரம்பாலும் கடிந்துசாடும்
எல்லோரும் நல்லவரென் றெண்ணிஅரு ளீந்ததென்ன இகழ்ச்சியொன்றும்
சொல்லாமல் மலரால்விட் டெறிந்தவனைக் காய்ந்ததென்ன சொல்லுவீரே”.
(செல்ஆரும் பொழில் -- மேகங்கள் நிறைந்துலவும் சோலை)
“நல்லாளை இடமருவுந் தியாகையா உமதிடத்தில் நியாயங்காணோம்
கல்லாலே எறிந்தோர்க்கும் செருப்படியா லுதைத்தோர்க்கும் கடிந்துபோரில்
வில்லாலே அடித்தோர்க்குங் கொடுத்தீரே யல்லாமல் விழிநீர்சோர
எல்லாமுன் செயலென்றே இருப்போர்க்கு யாதேனும் ஈகிலீரோ?”
பக்தியிற் பிறக்கும் கோபங்கூடத் தமிழன்னைக்கு இனிய பாடல்களைத் தருகின்றனவே…
கந்தவனம் கோணேஸ்வரன்
10.02.2020
சொக்கநாதப் புலவர் சிறந்த சிவபக்தர். சிவனல்லால் வேறு தெய்வமும் உளதோ என்று கேட்பவர். பலநாள் சிவனை வழிபட்டும் சிவனின் அருள் தனக்குக் கிடைக்கவில்லையே என்ற கவலை அவருக்கு. யார் யாருக்கோவெல்லாம் அருளும் பெருமான் தன்னைக் கண்டு கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் அவரை வாட்டிற்று. சிவபிரானைத் திட்டித் தீர்ப்பது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.
அம்பலவாணரிடம் நேரே செல்கிறார். “சாக்கிய நாயனார் உன்னைக் கல்லால் அடித்தார்: அருச்சுனன் உன்னை வில்லால் அடித்தான்: கண்ணப்ப நாயனார் செருப்பாலேயே அடித்தார்: நீ வந்திக்குக் கூலியாளாகப் போனபோது பாண்டியன் பிரம்பால் அடித்தான். இவர்களுடைய செய்கைகளையெல்லாம் பொறுத்துக் கொண்டு அவர்களை நல்லவர்கள் என்றெண்ணி அருள் புரிந்த சிவனே, இப்படியான எதனையும் செய்யாது உன்மீது மலர்களை எறிந்த மன்மதனை எரித்த நீதியென்னை?” என்று கடிந்து கொள்கிறார்
.
அப்போதும் புலவரின் கோபம் தீரவில்லை. தொடர்கிறார்.
“நற்குலப் பெண்ணான உமாதேவிக்கு இடப்புறத்தைத் தியாகம் செய்தவனே, கல்லால் எறிந்தவருக்கும், செருப்பால் உதைத்தவருக்கும், வில்லால் அடித்தவருக்கும் அருள் புரிந்த தியாகேஸ்வரனே, கண்களில் நீர்சொரிய எல்லாம் உன்னருளே என்று பக்தி செலுத்தி வாழ்கின்ற என்போன்றோருக்கு எதுவும் கொடுக்காமல் இருக்கிறாயே…இது நியாயமா?” என்றுங் கேட்கிறார்.
புலவரின் கோபத்திற் பிறந்த பாடல்கள் இவைதாம்:
“செல்ஆரும் பொழில்சூழ் புலியூர் அம்பலவாண தேவாஉம்மைக்
கல்லாலும் வில்லாலும் செருப்பாலும் பிரம்பாலும் கடிந்துசாடும்
எல்லோரும் நல்லவரென் றெண்ணிஅரு ளீந்ததென்ன இகழ்ச்சியொன்றும்
சொல்லாமல் மலரால்விட் டெறிந்தவனைக் காய்ந்ததென்ன சொல்லுவீரே”.
(செல்ஆரும் பொழில் -- மேகங்கள் நிறைந்துலவும் சோலை)
“நல்லாளை இடமருவுந் தியாகையா உமதிடத்தில் நியாயங்காணோம்
கல்லாலே எறிந்தோர்க்கும் செருப்படியா லுதைத்தோர்க்கும் கடிந்துபோரில்
வில்லாலே அடித்தோர்க்குங் கொடுத்தீரே யல்லாமல் விழிநீர்சோர
எல்லாமுன் செயலென்றே இருப்போர்க்கு யாதேனும் ஈகிலீரோ?”
பக்தியிற் பிறக்கும் கோபங்கூடத் தமிழன்னைக்கு இனிய பாடல்களைத் தருகின்றனவே…
கந்தவனம் கோணேஸ்வரன்
10.02.2020
கருத்துகள்
கருத்துரையிடுக