இலக்கியத்துளி 13.
இலக்கியத்துளி 13.
ஓட்டக்கூத்தர் ஒரு பெரும்புலவர். தன் மன்னனான சோழனுக்குப் பெண்கேட்டுப் பாண்டியனிடம் செல்கிறார். பாண்டியனும் அவரைச் சீண்ட வேண்டுமென்ற எண்ணத்தினாலோ என்னவோ, பாண்டியர் குடும்பத்திற் பெண் எடுப்பதற்குச் சோழனுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்டுவிட்டான்.
ஓட்டக்கூத்தருக்குக் கோபம் வந்துவிட்டது. “சோழன் ஏறும் குதிரையான கோரத்துக்கு நீ ஏறும் குதிரையான கனவட்டம் நிகராகுமா? சோழநாட்டு நதியான காவிரிக்கு உன்னாட்டு நதி வைகையை ஒப்பிடக்கூடுமோ? ஆத்திமாலைக்கு உன் வேப்பம்பூ மாலை இணையாகுமா? சோழன் என்கிற ஆதவனுக்கு முன்னால் பாண்டியன் என்கிற சந்திரன் ஒளிவீச இயலுமோ? மீன்கொடியைக் கொண்ட மீனவனான உன்னால் வீரருக்கெல்லாம் வீரனாகிவிட முடியுமா? எங்குமே வெற்றியைக் குவிக்கின்ற புலிக்கொடிக்கு நிகராக உன் மீன்கொடியை உயர்த்திப் பிடிக்கலாகுமா? உன் கொற்கை நகரத்தைச் சோழனின் உறந்தை நகருக்கு ஒப்பிடல் சரியோ? உன் பாண்டிநாடு எங்கள் சோழநாட்டுக்கு எந்த வகையிலேனும் ஈடாகுமா?” என்றெல்லாம் கேட்டுவிடுகிறார்.
இதற்குப் பாண்டியன் பதில் சொல்லவில்லை. மாறாக, ஒட்டக்கூத்தரின் தமிழ்வீச்சில் மயங்கிக் கிடந்தான். ஆனால் அவனது அரசவைப்புலவர் புகழேந்தியாருக்குக் கோபம் வந்து விட்டது. சோழநாட்டிலிருந்து வந்தவன் பாண்டிய மன்னனையும் நாட்டையும் இகழ்வதா என்று துடித்துப் போனார். வழக்கமாகவே ஒட்டக்கூத்தருக்கும் புகழேந்தியாருக்கும் இணக்கம் இருப்பதில்லை. எனவே, கிடைத்த வாய்ப்பை நழுவவிடுவாரா? அவர் பதிலளிக்கிறார்.
“திருமாலின் அவதாரமாமோ சோழநாட்டுச் சிறுபுலி? சிவன்முடியில் என்ன செங்கதிரா இடம்பிடித்தது? தமிழ்மொழி சிறப்படைந்தது உங்கள் நாட்டு மலையிலோ? சிவபெருமானின் திருவிளையாடல்கள் உன் உறந்தை நகரிலா இடம்பெற்றன? ஆற்றையெதிர்த்து ஏடு கரையேறிய அற்புதம் உனது காவிரிநதியிலா இடம்பெற்றது? பகைவென்ற வேம்புக்கு நிகராக வெற்று அலங்காரங்கொண்ட அத்திமாலையை ஒப்பிட இயலுமா? அலைகடல் என்ன சோழனின் பாதத்திலா பணிந்து நிற்கிறது? பாண்டியவேந்தின் பராக்கிரமத்தைச் சொல்லவுங்கூடுமோ?” என்று சீறிவிழுகிறார்.
இப்போதும் பாண்டியன் அசையவில்லை. தமிழன்னைக்குப் புலவர்களின் கோபத்தாற் கிடைத்த இரு பாடல்களையும் எண்ணி வியந்தபடியே அமர்ந்திருக்கிறான்.
இவைதாம் அப்பாடல்கள்:
கோரத்துக் கொப்போ கனவட்ட மம்மானை
கூறுவதுங் காவிரிக்கு வையையோ வம்மானை
ஆருக்கு வேம்பநிக ராகுமோ வம்மானை
ஆதித்தனுக் குநிகர் அம்புலியோ வம்மானை
வீரர்க்குள் வீரனொரு மீனவனோ வம்மானை
வெற்றிப் புலிக்கொடிக்கு மீன்கொடியோ வம்மானை
ஊருக் குறந்தைநிகர் கொற்கையோ வம்மானை
ஓக்குமோ சோணாட்டுக் குப்பாண்டிநா டம்மானை?
(இது ஒட்டக்கூத்தர் பாண்டிநாட்டைவிடச் சோழநாடே சிறந்தது எனப்பாடியது.)
திருநெடுமா லவதாரஞ் சிறுபுலியோ வம்மானை
சிவன்முடியி லேகுவதுஞ் செங்கதிரோ வம்மானை
ஒருமுனிவ னேரியிலோ வுரைதெளிந்த தம்மானை
ஒப்பரிய திருவிளையாட் துறந்தையிலோ வம்மானை
கரையெதி ரேடேறியது காவிரியோ வம்மானை
கடிப்பகைக்குத் தாதகியங் கண்ணியோ வம்மனை
பரவைபணிந் ததுஞ்சோழன் பதந்தனிலோ வம்மானை
பாண்டியனார் பராக்கிரமம் பகரெளிதோ வம்மானை?
(இது பாண்டிநாடே மேம்பட்டதெனப் புகழேந்தியார் பாடியது.)
கந்தவனம் கோணேஸ்வரன்
09.02.2020
ஓட்டக்கூத்தர் ஒரு பெரும்புலவர். தன் மன்னனான சோழனுக்குப் பெண்கேட்டுப் பாண்டியனிடம் செல்கிறார். பாண்டியனும் அவரைச் சீண்ட வேண்டுமென்ற எண்ணத்தினாலோ என்னவோ, பாண்டியர் குடும்பத்திற் பெண் எடுப்பதற்குச் சோழனுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேட்டுவிட்டான்.
ஓட்டக்கூத்தருக்குக் கோபம் வந்துவிட்டது. “சோழன் ஏறும் குதிரையான கோரத்துக்கு நீ ஏறும் குதிரையான கனவட்டம் நிகராகுமா? சோழநாட்டு நதியான காவிரிக்கு உன்னாட்டு நதி வைகையை ஒப்பிடக்கூடுமோ? ஆத்திமாலைக்கு உன் வேப்பம்பூ மாலை இணையாகுமா? சோழன் என்கிற ஆதவனுக்கு முன்னால் பாண்டியன் என்கிற சந்திரன் ஒளிவீச இயலுமோ? மீன்கொடியைக் கொண்ட மீனவனான உன்னால் வீரருக்கெல்லாம் வீரனாகிவிட முடியுமா? எங்குமே வெற்றியைக் குவிக்கின்ற புலிக்கொடிக்கு நிகராக உன் மீன்கொடியை உயர்த்திப் பிடிக்கலாகுமா? உன் கொற்கை நகரத்தைச் சோழனின் உறந்தை நகருக்கு ஒப்பிடல் சரியோ? உன் பாண்டிநாடு எங்கள் சோழநாட்டுக்கு எந்த வகையிலேனும் ஈடாகுமா?” என்றெல்லாம் கேட்டுவிடுகிறார்.
இதற்குப் பாண்டியன் பதில் சொல்லவில்லை. மாறாக, ஒட்டக்கூத்தரின் தமிழ்வீச்சில் மயங்கிக் கிடந்தான். ஆனால் அவனது அரசவைப்புலவர் புகழேந்தியாருக்குக் கோபம் வந்து விட்டது. சோழநாட்டிலிருந்து வந்தவன் பாண்டிய மன்னனையும் நாட்டையும் இகழ்வதா என்று துடித்துப் போனார். வழக்கமாகவே ஒட்டக்கூத்தருக்கும் புகழேந்தியாருக்கும் இணக்கம் இருப்பதில்லை. எனவே, கிடைத்த வாய்ப்பை நழுவவிடுவாரா? அவர் பதிலளிக்கிறார்.
“திருமாலின் அவதாரமாமோ சோழநாட்டுச் சிறுபுலி? சிவன்முடியில் என்ன செங்கதிரா இடம்பிடித்தது? தமிழ்மொழி சிறப்படைந்தது உங்கள் நாட்டு மலையிலோ? சிவபெருமானின் திருவிளையாடல்கள் உன் உறந்தை நகரிலா இடம்பெற்றன? ஆற்றையெதிர்த்து ஏடு கரையேறிய அற்புதம் உனது காவிரிநதியிலா இடம்பெற்றது? பகைவென்ற வேம்புக்கு நிகராக வெற்று அலங்காரங்கொண்ட அத்திமாலையை ஒப்பிட இயலுமா? அலைகடல் என்ன சோழனின் பாதத்திலா பணிந்து நிற்கிறது? பாண்டியவேந்தின் பராக்கிரமத்தைச் சொல்லவுங்கூடுமோ?” என்று சீறிவிழுகிறார்.
இப்போதும் பாண்டியன் அசையவில்லை. தமிழன்னைக்குப் புலவர்களின் கோபத்தாற் கிடைத்த இரு பாடல்களையும் எண்ணி வியந்தபடியே அமர்ந்திருக்கிறான்.
இவைதாம் அப்பாடல்கள்:
கோரத்துக் கொப்போ கனவட்ட மம்மானை
கூறுவதுங் காவிரிக்கு வையையோ வம்மானை
ஆருக்கு வேம்பநிக ராகுமோ வம்மானை
ஆதித்தனுக் குநிகர் அம்புலியோ வம்மானை
வீரர்க்குள் வீரனொரு மீனவனோ வம்மானை
வெற்றிப் புலிக்கொடிக்கு மீன்கொடியோ வம்மானை
ஊருக் குறந்தைநிகர் கொற்கையோ வம்மானை
ஓக்குமோ சோணாட்டுக் குப்பாண்டிநா டம்மானை?
(இது ஒட்டக்கூத்தர் பாண்டிநாட்டைவிடச் சோழநாடே சிறந்தது எனப்பாடியது.)
திருநெடுமா லவதாரஞ் சிறுபுலியோ வம்மானை
சிவன்முடியி லேகுவதுஞ் செங்கதிரோ வம்மானை
ஒருமுனிவ னேரியிலோ வுரைதெளிந்த தம்மானை
ஒப்பரிய திருவிளையாட் துறந்தையிலோ வம்மானை
கரையெதி ரேடேறியது காவிரியோ வம்மானை
கடிப்பகைக்குத் தாதகியங் கண்ணியோ வம்மனை
பரவைபணிந் ததுஞ்சோழன் பதந்தனிலோ வம்மானை
பாண்டியனார் பராக்கிரமம் பகரெளிதோ வம்மானை?
(இது பாண்டிநாடே மேம்பட்டதெனப் புகழேந்தியார் பாடியது.)
கந்தவனம் கோணேஸ்வரன்
09.02.2020
கருத்துகள்
கருத்துரையிடுக