இலக்கியத்துளி 12


பொற்களந்தை படிக்காசுத் தம்பிரான் என்றொரு புலவர். அவரது பெயரில்தான் பொன்னும் காசும் இருந்ததே யொழிய வாழ்க்கையில் வறுமைமட்டுமே அவருக்குத் துணை நின்றது. எத்தனை நாள்தான் வறுமையைக் கூட வைத்துக்கொள்ள முடியும்? வாழ்க்கையே வெறுத்துப் போயிற்று. தன்னைத்தானே நொந்து கொள்ளத் தொடங்கினார்.


“அட கெட்டுப்போனவனே… எத்தனையோ தொழில் உலகத்தில் இருக்கத்தக்கதாகக் கல்விதான் பெரிது என்று விழுந்துவிழுந்து கற்றாயே.. யாது பயன் இப்போது விளைந்தது? மனதைத் திடப்படுத்திக்கொண்டு மற்றவர்களை வசியப்படுத்தி ஏமாற்றக் கற்றுக்கொண்டாயா? கம்பை வைத்து ஆடிப் பிறரை மகிழ்விக்கவாவது கற்றுக் கொண்டாயா? செப்பிடி வித்தைகள் செய்து பிழைக்கவாவது தெரிந்து கொண்டாய?


உடலை விற்றுப் பிழைக்கும் கணிகையாகவேனும் பிறந்தாயா? இந்தச் சனியன்பிடித்த தமிழை மறந்துவிட்டுப் பெண்களுக்குக் காதல்தூது போயாவது வயிறுவளர்க்கப் பழகிக் கொண்டாயா? என்ன பிறப்படா உன் பிறப்பு?” என்ற தன்னைத்தானே கடிந்து கொள்கிறார்.


புலவரல்லவா… தன்துயரைப் பாடலாகவே கொட்டிவிடுகிறார்.


அடகெடுவாய்: பலதொழிலு மிருக்கக் கல்வி
 அதிகமென்று கற்றுவிட்டோம் அறிவில் லாமல்
திடமுள மோகன மாடக்கழைக் கூத்தாடச்
  செப்பிடுவித்தை களாடத் தெரிந்தோ மில்லை
தடமுலை வேசையரா கப்பிறந்தோ மில்லை
  சனியான தமிழைவிட் டுத்தைய லார்தம்
இடமிருந்து தூதுசென்று பிழைத்தோ மில்லை
  என்ன சென்மம் எடுத்துலகில் இரக்கின்றோமே.



புலவர் நொந்தாரோ இல்லையோ தமிழன்னை அழகிய பாடலால் மகிழ்ந்தாளல்லவா?


“கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே” எனலாமா?



கந்தவனம் கோணேஸ்வரன்
.
08.02.2020


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5