இலக்கியத்துளி 11.

இலக்கியத்துளி 11.


திருக்குறளின் பெருமையோ சொல்லுந்தரமன்று. அதனாற்றான் அதனை உலகப் பொதுமறை எனக் கருதுகிறார்கள். தமிழன் சிந்தனையின் சிறப்புக்குத் திருக்குறள் ஒரு மகத்தான எடுத்துக்காட்டு.


வள்ளுவத்தின் விடயப்பரப்பைச் சொல்லவந்த ஒளவையார்:

“தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும் -- கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர்.”


இதன் பொருள், “ திருவள்ளுவரின் குறளும், இருக்கு, யசுர், சாம, அதர்வணம் ஆகிய நான்குமறைகளின் முடிவும், அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரின் தேவாரப் பொருளும், மாணிக்கவாசகரின் திருவாசகமும், திருமூலர் தந்த திருமந்திரமும் ஒரே பொருளைக் கொண்டவை என்பதாகும்.


திருக்குறளின் ஆளுமைபற்றிச் சொல்லவந்த ஒளவையார்,

“அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்திக்
 குறுகத் தரித்த குறள்.”

என இரண்டே அடிகளிற் கூறிவிடுகிறார். அணுவைத் துளைக்கலாம் என்று ஒளவையார் கூறியகாலத்தில் நிலவிய அறிவியல் ஞானம் அணுவைத் துளைக்க முடியாது என்று அடித்துச் சொல்லிக் கொண்டிருந்தது. ஆனால் நம் கிழவியோ அப்போதே அணுவைத் துளைக்கலாம் என்று கூறியமை தமிழனின் அறிவுத் திறனுக்குச் சான்றுதானே.


திருவள்ளுவரைவிட ஒளவையார் குறைந்தவரல்லர். வள்ளுவர் ஈரடியால் உலகளந்தாரெனின் ஒளவை ஓரடியால் உலகளந்தவர். “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.” “ஆலயந் தொழுவது சாலவுந் நன்று.” “இல்லற மல்லது நல்லற மன்று.” என்றும் “அறஞ் செய விரும்பு.” “ஆறுவது சினம்.” “இயல்வது கரவேல்.” “ஈவது விலக்கேல்.” என்றும் தமிழ் வடித்தவராயிற்றே.


வள்ளுவர் 133 அதிகாரங்களில் 1330 குறட்பாக்கள்மூலம்ää தாம் சொல்ல வந்தவற்றை அறம்ää பொருள், இன்பம் என முப்பாலாக வகுத்து நமக்கருளியுள்ளார். வள்ளுவத்தில் சொல்லப்படாத கருத்துகள் எவையுமில என்பது அறிஞர் துணிபு. அறம், பொருள், இன்பம் ஆகியன சரிவர நிறைவேற்றப்பட்டால் வீடுபேறு நிச்சயம் என்பதால் வீடுபேற்றைச் சொல்லாமல் உணர்த்தும் பெருமை வள்ளுவத்துக்கு உண்டு.


இந்தக் கடலளவு விடயத்தை அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தினாற்போலத் திருவள்ளுவர் இரண்டடிக் குறள்மூலம் மக்களுக்கு வழங்கிவிட்டார் என்ற பெருமையாற்றான் ஒளவையார் அவ்வாறு தாமும் இரண்டியிற் கூறினார்.


ஆயினும் வள்ளுவர் 1330 குறட்பாக்களிற் கூறியவற்றை ஒளவையார் நான்கே நான்கு அடிகளிற் தெளிவாகக் கூறிய அதிசயத்தையும் தமிழுலகம் கண்டிருக்கிறது. அந்த வெண்பா இதுதான்:



“ஈதல்அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்
 காதலிருவர் கருத்தொரு மித்து – ஆதரவு
 பட்டதே இன்பம் பரனைநினைந்து இம்மூன்றும்
 விட்டதே பேரின்ப வாழ்வு.”


இதன் பொருளைப் பார்ப்போம்:

ஈதல் அறம்   -- எப்போதும் பிறர்க்கு உதவுதலே அறமாகும்.

தீவினை விட்டு ஈட்டல் பொருள். – தீயவழிமுறைகள் அல்லாத வகையில் உழைப்பதுவே பொருளாகும்.

காதலிருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இன்பம். -- இன்பம் எனப்படுவது யாதெனில் அன்புகொண்ட இருநெஞ்சங்கள் கருத்துவேறுபாடு இன்றி வாழ்தலாகும்.

பரனை நினைந்து இம்மூன்றும் விட்டதே பேரின்ப வாழ்வு. – இறைவனை நினைந்து உருகுவதன்மூலம் அறத்தால் வருகின்ற நிறைவு, தீவினையற்று ஈட்டிய பொருளாற் கிடைக்கின்ற மகிழ்வு, கருத்தொருமித்த இல்லறத்தாற் பெறுகின்ற சிறப்பு ஆகியவற்றிலிருந்து மெல்லமெல்ல நீங்குவதாற் கிடைப்பதுவே வீடுபேறு எனப்படும் பேரின்பநிலை.

நாலடி வெண்பாவுக்குள் வள்ளுவத்தையே அடக்கிவைத்த ஒளவையின் பெருமையை என்னென்பது…?

         
                                     கந்தவனம் கோணேஸ்வரன்,
                                     15.09.2019     
                     




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5