தமிழ் இலக்கணம் அறிவோம் 4. தொடரியல் 2 (1)

தமிழ் இலக்கணம் அறிவோம் 4.
தொடரியல் 2 (1)


ஒற்றைச் சொல்லில் வாக்கியம்.


ஒரு வாக்கியம் தனக்குரிய அத்தனை பிரிவுகளையும் வெளிப்படையாகக் கொண்டிருந்தால்தான் அது நிறைவான பொருளைத் தரும் என்பதில்லை. சில தனிச் சொற்கள்;கூட நிறைவான பொருளைத் தருகின்ற வாக்கியங்களாக அமைவதுண்டு.


உதாரணமாக,  ஒருவரைத் தெருவில் சந்திக்கும்போது, “எங்கிருந்து?” “எங்கே?” என்றோ அல்லது அக் கருத்துப்பட பேச்சுவழக்கிற் பயன்படும் ஒற்றைச் சொல்லாலோ ஒரு வினாவைத் தொடுக்குமிடத்து அவ்வினா நிறைவான பொருளைக் கொண்ட வாக்கியமாகவே அமைகிறது. இவ்வினாக்களின் கருத்து “எங்கே இருந்து வருகிறீர்கள்?” “எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள்?” என்ற நிறைவான வசனமே என்பது கேட்பவருக்கும் பதிலளிக்க வேண்டியவருக்கும் தெளிவாகப் புரிகிறது.


அதேபோல் “கடையிலிருந்து.” என்றோ “கொழும்புக்கு.” என்றோ ஒற்றைச் சொல்லிற் பதில்கள் கிடைக்குமானால் அவையும் முழு வாக்கியங்களாகின்றன. ஏனெனில் வினா தொடுத்தவருக்கு அப்பதில்கள் திருப்தியையும் தெளிவையும் தருகின்றன. அப்பதில்கள் “நான் கடையிலிருந்து வருகின்றேன்.” “நான் கொழும்புக்குப் போகின்றேன்.” என்ற முழுவடிவங்களைக் கொண்டிருப்பது கண்கூடு.


எனவே,  ஒற்றைச்சொல்கூட வாக்கியத் தன்மையைப் பெற்றுவிடுகிறது என்பதை நினைவிற் கொளல் சிறப்பு. எனினும் இவ்வகை வாக்கியங்கள் தன்மை, முன்னிலை ஆகிய நிலைகளில் மட்டுமே தோற்றம் பெறக்கூடியன. பொதுவாகப் படர்க்கையில் இவை தோன்றுவதில்லை.



வாக்கியங்களின் தன்மை.

ஒரு நிறைவு பெறுகின்ற வாக்கியமானது எழுவாய், பயனிலை மற்றும் செயப்படுபொருள் என்பவற்றை வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ கொண்டிருக்கும். செயப்படுபொருள் இல்லாமலும் வாக்கியங்கள் நிறைவாக அமைவதுண்டு.


“தம்பி விழுந்தான்.” என்ற வாக்கியத்தில் எழுவாயும் பயனிலையும் இருக்கின்றன. “யார் விழுந்தான்?” என்ற கேள்விக்குத் தம்பி எனும் எழுவாய் விடையாகிறது. தம்பியை எழுவாயாகக் கொள்ளும் கூற்று எழுந்தற்கான காரணம் “விழுந்தான்.” என்ற செய்தி வெளிப்படுதற்காகும். எனவே “விழுந்தான்” பயனிலையாகிறது. இவ்வாக்கியத்தில் செயப்படுபொருள் இடம்பெறவில்லை. இவ்வகை வாக்கியங்களைச் செயப்படுபொருள் குன்றிய (அற்ற) வாக்கியங்கள் என்பர்.


“அக்கா அழுதாள்.” “நாய் குரைத்தது.” “அண்ணா நீந்துகிறான்.” “பூனை ஓடியது.” போன்றவை  செயப்படுபொருள் குன்றிய வாக்கியங்களுக்கு உதாரணங்களாகின்றன.


“அக்கா பாடத்தைப் படித்தாள்.” என்றோ “அக்கா பாடம் படித்தாள்.” என்றோ அமைகின்ற வாக்கியங்களில் செயப்படுபொருளும் காணப்படுகிறது. அக்கா எதைப் படித்தாள் என்ற கேள்விக்குப் “பாடத்தை” என்பது பதிலாகிறது. முதலாவது வாக்கியத்தில் “பாடத்தை” என்றும் இரண்டாவது வாக்கியத்தில் “பாடம்” என்றும் செயப்படுபொருள் அமைந்திருந்தாலும் அவற்றின் உண்மையான வடிவம் “பாடத்தை” என்பதுதான். ஏனெனில் செயப்படுபொருள் என்பது “ஐ” வேற்றுமையுருபை வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ ஏற்றிருக்கும் ஒரு பெயர்ச்சொல் ஆகும்.



எழுவாய் அற்ற வாக்கியங்கள்.

இன்றைய தமிழில் எழுவாய் இல்லாமலும் வாக்கியங்கள் அமைவதுண்டு.

“உனக்கு அவனைத் தெரியாது.”
“எனக்குக் கண்ணனைப் பிடிக்காது.” 
போன்ற வாக்கியங்களை எடுத்துக் கொண்டால் இவ்வாக்கியங்கள் அமைக்கப்பட்ட விதத்திலோ, அவை சொல்லவந்த கருத்துப் புலப்படலிலோ எவ்விதக் குறையும் காணமுடியாது. எனினும் வாக்கியத்தில் எழுவாயை அடையாளப்படுத்த முடியாதிருப்பதைக் காணலாம்.


இவ்வாக்கியங்களின் பயனிலை “தெரியாது” “பிடிக்காது” என்பவையாகும். இவற்றைப் பயன்படுத்தி “யாரைத் தெரியாது?” “யாரைப் பிடிக்காது?” என்ற செயப்படுபொருளை அறிவதற்கான கேள்விகளை முன்வைப்போமானால்,  முதலாவது வாக்கியத்தில் “அவனை” என்பது பதிலாக வரும். இரண்டாவது வாக்கியத்தில் “கண்ணனை” என்பது தெளிவாகும். எனவே, இவை செயப்படுபொருள்களாம்.


ஆனால், எழுவாயை அறியும்நோக்கில் “யார் தெரியாது?” “யார் பிடிக்காது?”  போன்ற கேள்விகளை முன்வைத்தால் பதில் எதுவும் கிடைக்கப் போவதில்லை.


எனினும் “உனக்கு அவனைத் தெரியாது.” என்பதை “நீ அவனை அறியாய்.” என்று திருத்தமாக வாக்கியம் அமைத்தால் “நீ” என்பது எழுவாயாக நிற்பதை உணரலாம்.

அதுபோல் “எனக்குக் கண்ணனைப் பிடிக்காது.” என்பதை “நான் கண்ணனை விரும்புபவனல்லன்.” என்றோ  “நான் கண்ணனை ஏற்பவனல்லன்” என்றோ மாற்றியமைத்தால் “நான்” என்பது எழுவாயாக அமைகிறது.


இத்தகைய இடர்பாடுகள் காரணமாக , “எழுவாய் உருபுகளை ஏற்பதில்லை.” என்ற விதியைத் தளர்த்தி, “எழுவாய் சிலசமயங்களில் உருபுகளை ஏற்பதுண்டு.” என்ற கொள்கையைத்  தமிழறிஞர்கள் முன்வைக்கத் தலைப்படுகின்றனர்.
இதன்படி “யார்?” என்ற எழுவாய்க்கான கேள்வியும், “கு”உருபை ஏற்று “யாருக்குஃ” என மாற்றமடையம்போது “உனக்கு” “எனக்கு”  என உருபுகளை ஏற்ற “நீ” “நான்” ஆகிய எழுவாய்கள் விடையாகக் கிடைக்கின்றன.


 

வாக்கியங்கள் விரிவடைதல்.

எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய பகுதிகளைச் செம்மையாக இணைப்பதன் மூலம் உருவாகும் வாக்கியங்கள், சொல்லவந்த கருத்தைத் தெளிவுபடுத்தவும், விளக்கம் கொடுக்கவும் சில அடைமொழிகளையும் ஏற்பதுண்டு. இவ்வாறு  ஏற்கப்படும் அடைமொழிகள் கருத்துச் செறிவைத் தருவதுடன் மொழிநடைக்கும் அழகூட்டுகின்றன.


“தம்பி பாடம் படித்தான்.” என்பது எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றையும் கொண்டுள்ள ஒரு நிறைவான வாக்கியமாகும்.


இதன் கருத்தை மேலும் சிறப்புறக் கூறுமிடத்து. “சின்னத் தம்பி தமிழ்ப் பாடத்தை ஆர்வமாகப் படித்தான்.” என விரிவுபடுத்தலாம்..
சின்னத்தம்பி எனும்போது எழுவாயான “தம்பி” பற்றி ஒரு கருத்தைத் தருகின்றது. தமிழ்ப்பாடத்தை எனுமிடத்து செயப்படுபொருளான “பாடம்” என்ன வகையைச் சார்ந்தது என்பதை விளக்குகிறது. அதேபோல் தம்பி எவ்வாறு படித்தான் என்பது “ஆர்வமாகப் படித்தான்.” எனத் தெளிவு படுத்தப்படுகிறது.
இவை அடைமொழிகள் எனப்படுகின்றன. எழுவாய்க்கு முன்னும் பயனிலைக்கு முன்னும் செயப்படு பொருளுக்கு முன்னும் இவை வாக்கியத்தில் இடம்பெறுகின்றன.


மேற்கண்ட வாக்கியத்தில் மேலும் அடைமொழிகளை இணைப்பதன்மூலம் வாக்கியத்தை மிக அழகானதாகவும் பொருட்செறிவு உடையதாகவும் அமைக்க முடியும்.

“அழகான சின்னத்தம்பி இனிமையான தமிழ்ப்பாடத்தை மிகவும் ஆர்வமாகப் படித்தான்.”

இதேபோல் “மாலா பந்தை வீசினாள்.”   என்ற சாதாரண வாக்கியத்தை,  “ மேல் வகுப்பு மாலா,  எதிரே வந்த பந்தைப் பிடித்து இலக்குத் தவறாமல் வேகமாக வீசினாள்.” என்று பொருள் விரித்தலுடன் அழகூட்டவும் முடியும்.


மேல் வகுப்பு என்பது எழுவாய்க்குரிய அடைமொழியாகவும், எதிரே வந்த என்ற தொடர் செயப்படு பொருளுக்குரிய அடைமொழியாகவும்,  இலக்குத் தவறாமல் வேகமாகள என்பது பயனிலைக்குரிய அடைமொழியாகவும் இவ்வாக்கியத்தில் அமைந்திருப்பதை நோக்கலாம்.






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5