எங்கள் திருக்கோணமலை 16

எங்கள் திருக்கோணமலை 16


தென்றல் தாலாட்ட தேன்மலர்கள் பாராட்ட
 தீந்தமிழர் இசைகாதில் அமுதூட்ட
மன்றில் நின்றாடி மேதினியைக் காத்தருளும்
 மாதுமையாள் பாகன்சிவன் துணையிருக்க
அன்றோர் அகங்காரம் அழிப்பதற்காய் விரலூன்றி
 அவனிசையால் உளம்நெகிழ்ந்து அருள்சுரக்க
குன்றி லுறைவேந்தன் கோணேசர் பூமியொரு
 குறைவின்றித் தலைநிமிர்ந்து தரணியாளும்.


வருவோர் போவோரெவரும் வரலாறாய் ஆவதில்லை
 வாழ்ந்திடுவர்: இருந்திடுவர்: போய்விடுவர்
ஒருநாள் செருக்கழியும் உள்ளதையம் இழந்துநிற்பர்
 உணர்வர்மண் மகத்துவத்தை அப்போது
தரும நெறியிலன தரணிதனை ஆள்வதில்லை
 தருமநெறி ஒருக்காலும் மாய்வதில்லை
பெருமை மிகுபெம்மான் பேரருளில் திளைத்துவரும்
 பேறுபெற்ற பூமியென்றும் சாய்வதில்லை.


மான்கள் துள்ளட்டும் மயிலினங்கள் ஆடட்டும்
 மந்தியினம் மரந்தாவிப் பாயட்டும்
தேன்பால் ஓடட்டும் தென்தமிழால் பாடட்டும்
 தேவாரம் நான்மறைகள் ஓங்கட்டும்
கூன்மதியர் சாயட்டும் கொடுங்கோலர் மாயட்டும்
 குவலயத்தோர் மகிழ்வுடனே வாழட்டும்
வானுலகர் வாழ்த்தட்டும் வளங்களெலாம் பெருகட்டும்
 வல்லதிருக் கோணமலை யாகட்டும்.


கந்தவனம் கோணேஸ்வரன்
ஐப்பசி 2010

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5