எங்கள் திருக்கோணமலை 15.

எங்கள் திருக்கோணமலை 15.


ஆலயங்கள் மலிந்துஅருள் சுரக்கும் பூமி
 அன்புவழி நடப்போரால் சிறக்கும் பூமி
சீலமுடை யோர்பெருமை சுமக்கும் பூமி
 செந்தமிழர் நூலாய்ந்து களிக்கும் பூமி
மாலவன் சிவனாரோடு அமரும் பூமி
 மாதவத்தார் தலமிருந்து அருளும் பூமி
ஓலமிடும் கடல்சூழ்ந்து பாதம் தழுவும்
 ஓப்பரிய கோணேசர் உறைந்த பூமி.


ஆடவரும் அரிவையரும் மகிழும் பூமி
 அறவழியில் வாழ்வமைத்துத் திகழும் பூமி
கேடொழித்து நலம்சூழ உழைக்கும் பூமி
 கேடுசெய்ய முயல்வோரைத் தகர்க்கும் பூமி
தேடிவரு வோர்க்குவாழ்வு அருளும் பூமி
 தேவரென உலவும்பெரி யோர்கள் பூமி
பாடிஞான சம்பந்தனார் பணிந்த பூமி
 பழம்பதியாய்க் கோணேசர் உறைந்த பூமி.


மான்பாய்ந்து மந்திபாய்ந்து மகிழும் பூமி
 மனம்பாயா திருக்கும்கலை தெரிந்த பூமி
வான்பாய்ந்து வளங்கொழிக்கும் தமிழர் பூமி
 வளமார்ந்த கலைகளினால் உயரும் பூமி
தேன்பாயுந் திரியாய் தென் வெருகல்வரை
 செந்தமிழர் நிலமாகப் பரந்த பூமி
மீன்பாயுங் கடலன்னை நித்திலங்கள் கொழிக்க
 மேன்மையுறு கோணேசர் உறைந்த பூமி.


                                    கந்தவனம் கோணேஸ்வரன் 
                                    வைகாசி 2019.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5