எங்கள் திருக்கோணமலை 14

எங்கள் திருக்கோணமலை 14

அலைபாயுங் கடலோரம் அழகான இளமான்கள்
 அசைந்தாடும் பூமிதிருக் கோணமலை
நிலையாக வாழ்தமிழர் நெஞ்சமெலாம் இனித்திருக்கும்
 நிமலன்மா துமையாளோ டுறைந்தமலை
கலையாடும் விழிமாதர் கண்ணசைவில் காளையர்கள்
 களமாடி வெல்கின்ற புனிதமலை
குலையாத உறுதியுடன் கொள்கைக்காய் வாழ்தமிழர்
 கூடிக்களிக் கின்றபூமி எங்கள்மலை.


வஞ்சமில்லா வாழ்வுதரும் வந்தோர்க்கும் சோறுதரும்
 வளமார்ந்த கலைவளர்க்கக் களமுந்தரும்
நெஞ்சமெலா மினித்திருக்க நிலையான உறவுதரும்
 நேர்மைவழி நிற்போர்க்கு உயர்வுதரும்
சஞ்சலமே இல்லாத சன்மார்க்கச் சிந்தைதரும்
 சனாதன தருமத்தின் பெருமைதரும்
அஞ்சுதலே இல்லாமல் அரன்நாமம் துதிப்போர்க்கு
 அவனருளால் வாழ்முறையே நிறைவுதரும்.


வெருகலொடு திரியாயும் விளங்குதென்ன மரவடியும்
 வயல்நிலத்துக் களஞ்சியம்தம் பலகமமும்
பெருகிவரும் எழுநீரும் பேசரிய மாவலியும்
 பெருநீரைத் தாங்கிநிற்கும் கந்தளையும்
விரிகடலும் விளைபொருளும் வெண்முத்துக் குவியல்களும்
 வேதநெறி பரப்பிநிற்கும் கோவில்களும்
உரியதிருக் கோணமலை எங்கள்உயி ரானமலை
 உளமேந்திச் சிரமேந்தி மகிழ்ந்தாடுவோமே.


                           கந்தவனம் கோணேஸ்வரன்.
                           மே,  2019

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5