எங்கள் திருக்கோணமலை 13 மெலிதான பூங்காற்று மெய்தீண்டிச் செல்லுகையில் மேன்மையுறு தமிழ்மொழியின் சிறப்பைச் சொல்லும் வலிதான குன்றமர்ந்து வரமருளும் கோணேசர் வழிநடப்போர் அன்பாலே சைவம் வெல்லும் தெளிதேனும் சர்க்கரையும் சேர்த்தினிய தமிழ்தந்த தேவாரப் பண்ணோசை நெஞ்சை அள்ளும் விழியாடும் மாதரென விளங்குமான் கூட்டங்கள் விளையாடும் அழகாலே உள்ளம் துள்ளும். நீறாடும் திருநுதலும் நெறியாடும் வாழ்வியலும் நிறைந்ததிரு வாசகமும் எங்கள் சொத்து ஏறாடும் பெருமான்மேல் எழில்சம்பந் தன்சொன்ன இனியகோண மலைப்பதிகம் பழைமை வித்து நூறாகத் தகர்த்தாலும் ஆறாகப் பெருகியொரு நேர்நின்று பேராடும் தமிழர் துணிவு மாறாது மாறாது என்றுரைசெய் மைந்தர்கள் மலைத்தாயார் பெற்றெடுத்த மண்ணின் சொத்து. தேனோடும் பூவோடும் மாவலியாள் வருவாள் தௌளுதமிழ்ப் பாவலர்க்குக் கவிதைமொழி தருவாள் மீனோடு போட்டியிட்டு மைவிழியார் வெல்வார் வீறுகொண்ட காளையர்கள் மயங்கிப்பின் செல்வார் கானாடும் வானரங்கள் கனிமரங்கள் தேடி களிப்போடு நகராடும் காளையர்போற் கூடி வானாடர் வந்தேத்தும் மாதுமையாள் நாதன் விருப்போடு அமர்ந்ததிருக் கோணமலைப் பூமி. கந்தவனம் கோணேஸ்வரன் ஏப்ரல் 2019

          எங்கள் திருக்கோணமலை 13

        மெலிதான பூங்காற்று மெய்தீண்டிச் செல்லுகையில்
           மேன்மையுறு தமிழ்மொழியின் சிறப்பைச் சொல்லும்
         வலிதான குன்றமர்ந்து வரமருளும் கோணேசர்
           வழிநடப்போர் அன்பாலே சைவம் வெல்லும்
         தெளிதேனும் சர்க்கரையும் சேர்த்தினிய தமிழ்தந்த
            தேவாரப் பண்ணோசை நெஞ்சை அள்ளும்
         விழியாடும் மாதரென விளங்குமான் கூட்டங்கள்
            விளையாடும் அழகாலே உள்ளம் துள்ளும்.

         நீறாடும் திருநுதலும் நெறியாடும் வாழ்வியலும்
           நிறைந்ததிரு வாசகமும் எங்கள் சொத்து
         ஏறாடும் பெருமான்மேல் எழில்சம்பந் தன்சொன்ன
           இனியகோண மலைப்பதிகம் பழைமை வித்து
         நூறாகத் தகர்த்தாலும் ஆறாகப் பெருகியொரு
           நேர்நின்று பேராடும் தமிழர் துணிவு
         மாறாது மாறாது என்றுரைசெய் மைந்தர்கள்
           மலைத்தாயார் பெற்றெடுத்த மண்ணின் சொத்து.

        தேனோடும் பூவோடும் மாவலியாள் வருவாள்
          தௌளுதமிழ்ப் பாவலர்க்குக் கவிதைமொழி தருவாள்
        மீனோடு போட்டியிட்டு மைவிழியார் வெல்வார்
          வீறுகொண்ட காளையர்கள் மயங்கிப்பின் செல்வார்
        கானாடும் வானரங்கள் கனிமரங்கள் தேடி
          களிப்போடு நகராடும் காளையர்போற் கூடி
        வானாடர் வந்தேத்தும் மாதுமையாள் நாதன்
          விருப்போடு அமர்ந்ததிருக் கோணமலைப் பூமி.

                            கந்தவனம் கோணேஸ்வரன்
                            ஏப்ரல் 2019

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5